சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க...!
* எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.
* தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.
* தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!
* டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!
* யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது? கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்!
டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!
* இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!
* ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?
* பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?
தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!
* அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?
* பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!
* காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!
ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ பரவாயில்லை என்று!!
* மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
* அதிக நேரம் உன் அழகை கண்ணாடியில் பார்க்காதே!
உன் அழகைப் பார்த்து கண்ணாடிக்கும் உன் மேல் காதல் வரும்!!
இன்னும் இது மாதிரி நிறைய ஜோக்ஸ் இருக்கு! அப்புறம் சொல்றேன்!!
* மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது
எப்படி
இருக்கு?
* டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!
பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்!!
* ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு
பொண்ணு தெரியுமா?
------ பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.
* அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே,
என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே ஓடி போய்டாங்க!!
* கொடூர மொக்கை!
என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'ல
வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி....
மனத்திற்கு கட்டளை - பாரதியார்
பேயா யுழலும் சிறுமனமே
பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயாயொன்றும் நாடாதே
நினது தலைவன் யானே காண்
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.
பயம் - ( கதாசிரியர் : புதுமைப்பித்தன்)
அன்று பொழுது போகவில்லை. தேகாரோக்கியத்திற்குக் கடல் காற்று நல்லதாமே! பீச் ரோட்டில் நடந்து கொண்டே போனேன்.
எவ்வளவு தூரம் போனேன் என்று எனக்குத் தெரியாது. கடற் காற்றும் மனவோட்டத்திற்குச் சாந்தியளித்தது. நானும் நடந்துகொண்டே போனேன். ஏறக்குறைய திருவல்லிக்கேணி ரேடியோ ஸ்டாண்டு கூப்பிடு தூரத்தில் வந்து விட்டது.
காலும் வலித்தது.
பாதையின் பக்கத்திலிருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்தேன்.
நல்ல நிலா.
அடி வானத்திலே மெல்லிய பூப்பஞ்சை வைத்து ஜிகினா வேலை செய்தது மாதிரி வெண் மேகங்கள் - எனது வரையற்ற மனம்போல் - கடலையும் வானையும் பிரித்துக் கட்டின.
மேலே சிதறுண்ட கனவுகள் போல், இலட்சியங்கள் போல், நட்சத்திரங்கள்.
பின்புறத்திலே கடல். ஆமாம்! கடல், எனது எண்ணங்களைத் தட்டிக் கொடுக்கும் பாவனையாக அலை எழுப்பி 'உம்' 'உம்' என்று ஒப்புக்கொள்ளும் கடல்.
மனதிற்குக் குதூகலம் வந்தது. கால்கள் நடப்பதற்கு மறுத்தன.
வீட்டிற்குச் சென்று என்னத்தைத் தூக்கி நிறுத்தப் போகிறேன்! இன்னும் சற்று நேரம் உட்கார்ந்துவிட்டுப் போனால் என்ன?
இருக்கும்பொழுது...
பெரிய ஆஜானுபாகுவான வெள்ளைக்காரன். குறுகக் கத்தரித்து விடப்பட்ட தலை, அகன்ற நெற்றி, நீண்ட நாசி, குறுகக் கத்தரித்து விடப்பட்ட மீசை, மெல்லிய, மனவுறுதியைக் காண்பிக்கும் உதடுகள், கிரேக்க சிற்பியின் கனவு போன்ற தேக அமைப்பு. மொத்தத்தில், புத்தியும் தேக பலமும் கூடிக் கலந்து பரிணமித்த மனிதன்.
அந்தக் கண்களில், எதிலும் ஆசை பூர்த்தியாகாத நோக்கு. அறியவேண்டிய அவா. ஐந்து நிமிஷம் சும்மாயிருப்பது சாவுக்கு நிகர் என்று உழைப்பில் நாட்டம் மிகுந்த தேகப் படபடப்பு.
பொதுவிலே, அந்தப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குத் தங்கள் இரத்தத்தையும் வாழ்க்கையையும் அர்ப்பணம் செய்தார்களே, அந்த நாடோ டிகள், இந்த மகத்தான கூட்டத்தின் தனிக் குணம் இந்த வெள்ளைக்காரனின் ஒவ்வொரு சலனத்திலும் தெரிந்தது.
வந்தவன் என் பக்கத்தில் நேராக வந்து உட்கார்ந்தான். அவனிடத்தில் அந்த மிடுக்கு. வெள்ளையரின் சாம்ராஜ்யப் பெருமையில் பிறந்த அந்த மிருகத்தனம், அது அவனிடம் காணப்படவில்லை.
கண்ணிலே நல்ல குணம்; கட்டுறுதியுள்ள உடல்.
எனக்கு அவனிடம் பேசவேண்டுமென்ற ஆசை எப்படி ஆரம்பித்தது?
அவனுக்கு அந்தப் பிரச்னையே தோன்றவில்லை. சாதாரணமாக, இயற்கையாக மனிதனுக்கு மனிதன் பேசுவது மாதிரி என்னை வசப்படுத்திவிட்டான். புதிய அன்னிய நண்பன் என்ற ஹோதா எங்களுக்குள் மறைந்து போயிற்று.
பேசுவது ஒரு தனிக் கலை. அது அவனுக்குத் தெரிந்து இருந்தது. சளைக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம். பேசுவது என்றால் ஒரு மனிதனுடைய தனிப்பிரசங்கம் என்று நினைத்து விடுகிறார்கள் பலர். அவன் அப்படியல்ல. பக்கத்திலிருப்பவனைப் பதில் சொல்ல வைத்துச் சம்பாஷணைப் பந்தை உருட்டி விடுவதில் நிபுணன்.
அன்று பல சங்கதிகள் பேசி வரும்பொழுது நான் முதலில் நினைத்தது சரிதான் என்று பட்டது. அவன் மகத்தான நாடோ டி. துருவங்களிலிருந்து, அக்னிப் பிழம்பான பாலைவனங்கள் வரை, உலகத்தில் அவனுக்குத் தெரியாத பாகம் கிடையாது. அதுமட்டுமல்ல. நல்ல ரஸிகன். அவன் மனம் ஒரு இலட்சிய உலகில் வசித்து வந்தது. அதனால், ஒரு பூர்த்தியாகாத ஆசை, ஓர் ஆதர்சம், அவனைப் பிடர்பிடித்துத் தள்ளிக்கொண்டு சென்றது. அவன் இஷ்டப்பட்டாலும், அவனால் ஓரிடத்தில் நிரந்தரமாகத் தங்க அவனது மனம் இடங்கொடாது.
"நீங்களும் பயந்திருக்கிறீர்களா?" என்று அவரது தேக அமைப்பை உற்று நோக்கினேன். அவர் சொல்வதை நம்ப முடியவில்லை.
அவரும் சிரித்துக்கொண்டு, "நானும் பயந்திருக்கிறேன். நீங்கள் ஏன் சந்தேகப்படவேண்டும்?" என்று கொண்டே தன் பையிலிருந்த ஒரு சுங்கானை எடுத்து நிரப்பி விட்டு, ஒரு இழுப்பு இழுத்து, புகையை மிகுந்த ஆர்வத்துடன் ரஸித்தார். கண்கள் ஏதோ யோசிப்பது போல் கனவு கண்டன.
"ஆமாம், நான் பயந்திருக்கிறேன். நான் சொல்லுகிறதைக் கேளுங்கள். பயம் தைரியசாலிக்கும் அசையாத நெஞ்சு படைத்தவனுக்கும்தான் வரும். கோழைத்தனம், பயமல்ல. பயம் மனதில் தோன்றும் ஒரு நடுக்க நினைப்பு. உள்ளத்தையே, உயிரையே அப்படிக் குலுக்கிவிடுகிறது. சாவு நிச்சயம் என்று நாம் எதிர்பார்க்கும் சமயத்தில் பயம் தோன்றாது. ஆமாம் தெரிந்த அபாயத்தில் பயம் தோன்றாது. அது எதிர்பாராத சம்பவங்களில், இன்னதென்று அறியமுடியாத ஒரு சக்தியின் சூழ்ச்சியில், மிகவும் சாதாரணமான தொந்தரவுகளில் வந்துவிடும். குண்டுக்கும் கத்திக்கும் அஞ்சாதவன், நள்ளிரவில் திடீரென்று பிசாசைக் கண்டால், பயம், புத்தியை வலிமையைச் சிதற அடிக்கும். பயம் இன்னதென்று தெரிந்து கொள்வான்.
"எனக்குப் பயம் என்றால் இன்னதென்று தெரியும். ஒரு தடவை பட்டப் பகலில் - அது பத்து வருஷங்களுக்கு முந்தி - அனுபவித்தேன். மற்றொருதரம் போன டிசம்பரில் ஓர் இராத்திரியில் அனுபவித்தேன்.
"ஆம்! நான் எத்தனையோ தடவை எமனுடன் போராடியிருக்கிறேன். மனிதனுடைய மிருகத்தனத்தின் பேரில் எனது சக்தியால் வெற்றி பெற்றிருக்கிறேன். எத்தனை சண்டைகள்! தரையிலும் கடலிலும்! அவைகளில் ஒரு தடவையாவது பயந்தேனா!
"நான் பத்து வருஷங்களுக்குமுன் ஆப்பிரிக்காவிற்குச் சென்றிருந்தேன். அங்கெல்லாம் உயிர் துச்சம்! சாவிற்கு எப்பொழுதும் தயார். அதுதான் மனிதனுக்கு வரும் தீங்கில் எல்லாம் லேசானது என்று நினைக்கிறார்கள் அந்தப் பிரதேசத்திலிருப்பவர்கள். அங்கு அந்தப் பாதுகாப்பற்ற இரவிலே கவலையற்ற தூக்கம். எங்களுக்கு, எங்கள் நாட்டிலே அப்படியல்ல, ஒவ்வொரு வினாடியும் செத்துக் கொண்டிருக்கும் கோழைத்தனம். நீங்களே பாருங்களேன் மேல்நாட்டு அரசியல்களின் சந்தேகத்தை! ஆயுதம்! படைகள்! ஆயுதம்! சந்தேகம்! சந்தேகம்..."
சற்று மௌனம்.
"அப்பொழுது நடந்ததுதான். நான் தெற்கு ஊர்க் காள் பாலைவனத்தைக் கடந்துவிட்டேன். உலகத்திலுள்ள பிரதேசங்களிலே அது பார்க்கவேண்டிய இடம். பாலைவனம் என்றால், இந்தக் கடற்கரையோரத்திலே கோவணம் மாதிரி நீண்டு கிடக்கிறதே இப்படியிருக்குமென்றா நினைத்துக் கொண்டீர்! அது மணல் சமுத்திரம், எங்கு பார்த்தாலும், மணல், மணல், மணல். திடீரென்று ஒரு பேய்க்காற்று வந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான். இவ்வளவு நேரம் செத்துக் கிடந்த மாதிரி இருந்த மணல் அலைமேல் அலையாக எழும்பிக் குவியும்.
"அந்த எல்லையற்ற மௌனத்திலே மணல் மலைகள் பெரிதும் சின்னதுமாக இருக்கும். அதில் ஏறி ஏறி இறங்க வேண்டும், பாலைவனத்தைக் கடக்க வேண்டுமானால். அங்கே நிழலா?
"குதிரைகள் முட்டளவு மணலில் புதைந்துதான் நடக்கும். களைப்பு என்பதற்கு அர்த்தம் அந்தக் குதிரைகளுக்குத் தெரியும். அதில் ஏறிச்செல்ல வேண்டிய விதிபடைத்த மனிதனுக்குத் தெரியும்.
"அப்பொழுது நாங்கள் இருவர் சென்றோம். கூட நான்கு ஒட்டகங்கள், எங்களுடைய சாமான்களுக்கு; அதன் ஓட்டிகள். எங்களால் பேசமுடியாது அவ்வளவு நாவரட்சி; கானலினாலும், களைப்பினாலும் மூச்சுத் திணறுகிறது. திடீரென்று எங்களில் ஒருவன் பயந்து ஓலமிட்டான். நாங்கள் திடுக்கிட்டு நின்றோம். ஆமாம்! திடுக்கிட்டு விட்டோ ம்! அந்தப் பிரதேசத்திலே வழி தவறிய பிரயாணிகளுக்குத்தான் அந்தக் காரணம் சொல்ல முடியாத நிகழ்ச்சி தெரியும்.
"எங்கோ கிட்டத்தான். எவ்வளவு கிட்டவென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஒரு முரசொலி! அதற்குத்தான் பாலையின் முரசு என்று பெயர். முதலில் காதுகளைத் துளைக்கும்படியாக, மனது இடிந்து, சுக்கலாகப் போகும்படியாகக் கேட்டது. சற்று நேரம் ஒன்றுமில்லை. பிறகு அந்தச் சாவின் அறிகுறியான, பயங்கரமான மௌனத்தை வெருட்டி, எல்லையற்ற வானத்தை நிறைத்து முழங்கியது அந்த முரசொலி.
"ஒட்டகக்கார அராபியர்கள் 'ஐயோ! மரணம் நெருங்கிவிட்டது' என்று கூவினார்கள்.
"அவர்கள் கூவி முடியவில்லை. என்னுடைய நண்பன் குதிரையிலிருந்து விழுந்தான். சூரிய கிரணத்தினால் தாக்கப்பட்டு, அவனை உயிர்ப்பிக்க வெகு கஷ்டப்பட்டோ ம். முரசொலி, டம், டம், டம் என்று காதைத் தொளைத்தது. எனது இறந்த நண்பனைக் கூர்ந்து கவனித்தேன். பயம் தோன்றியது.
"பயம்!
"நெஞ்சை அப்படியே அமுக்கி உயிரைக் கசக்கிவிடும் பயம்! அதற்குச் சந்தேகமில்லை. பயந்தான்.
"சுற்றி நாலுபுறமும் மணற்குன்றுகள். ஜன சஞ்சாரத்திற்கும் எங்களுக்கும் இடையே இருநூறு மைல். எனது நண்பன் இறந்து போனான். நான் எப்பொழுதோ?...
"அந்த முரசு - 'அதன் காரணம் என்ன?' என்று நான் கேட்டேன்.
"பலர் பலவிதமாகச் சொல்லுகிறார்கள். காரணம் என்னவென்று சொல்லுவது? தூரத்திலுள்ள மேளங்களின் சப்தம் காற்றில் கலந்து எதிரொலிக்கிறது என்கிறார்கள். அங்கிருக்கும் ஒருவிதப் பனையின் ஓலை. சலசலப்பதின் சப்தம் என்கிறார்கள். உண்மையில் அது கானல் இருக்கிறதே அது மாதிரி ஒளியின் சப்த மயக்கம். பிறகுதான் ஸயன்ஸ்படி அது எந்தக் காரணத்தினால் உண்டானது என்று தெரிந்து கொண்டேன். பயந்தது நிச்சயம்...
இன்னொரு தடவை பயந்தேனே அது பிரான்ஸ் தேசத்துக் காடுகளில்.
"அன்று, இரவு வெகு சீக்கிரம் வந்துவிட்டது. அவ்வளவு மேகம். நல்ல மழைக்காலம். அப்பொழுது எனக்கு வழி காட்டியாக ஒரு குடியானவன் வந்தான். வானத்திலே மேகங்கள் ஒன்றையொன்று பிடர்பிடித்துத் தள்ளிக்கொண்டு ஓடின. காற்று சண்டனாக வந்துவிட்டது. மரங்கள் தலைவிரித்தாடின. மரக்கிளைகள் பரிதாபகரமாக, பயங்கரமாக, முக்கி முனங்கிக்கொண்டு உறுமின. என்ன கம்பளிச்சட்டை போட்டுக்கொண்டு இருந்தும் குளிர் எலும்பைத் தாக்கியது.
"இனிமேல் செல்ல முடியாது என்று கண்டு, பக்கத்திலிருந்த ஒரு காவல்காரனின் குடிசைக்கு அழைத்துச் சென்றான். அந்தக் காவல்காரன் இரண்டு வருஷத்திற்கு முன் ஒரு திருடனைச் சுட்டுக்கொன்றவன். அதிலிருந்து அந்தத் திருடனுடைய பேய் வந்து அவனைத் தொல்லை செய்வதுமாதிரி அவனுக்கு ஒரு பிராந்தி - பயம். அவனுடன் அவனுடைய இரண்டு புத்திரர்களும் அவர்களுடைய மனைவிகளுடன் வசித்து வருகிறார்கள். இது அந்தக் குடியானவன் எனக்குப் போகும் பொழுது கூறினான்.
"இருள் அதிகமாகி விட்டதால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. கடைசியாகத் தூரத்திலே சற்று வெளிச்சம். நெருங்கினோம். ஒரு குடிசை கொஞ்சம் பெரியதுதான். வழிகாட்டி கதவைத் தட்டினான். உள்ளிருந்து பயத்தினால் திக்கு முக்கடித்த ஒரு குரல் யார் என்று கேட்டது. குடியானவன் பதில் சொல்லக் கதவு திறந்தது. உள்ளே சென்றோம்.
"நான் உள்ளே கண்ட காட்சியை ஒரு நாளும் மறக்க முடியாது. அந்த அறையின் நடுவில் பஞ்சுப்பெட்டிபோல் நரைத்த ஒரு கிழவன் கையில் குண்டு போட்ட துப்பாக்கியுடன் நின்றான். இரண்டு முரடர்கள் கையில் கோடரியை ஏந்திய வண்ணம் நின்றார்கள். சற்று தூரத்தில் வெளிச்சம் படாத இருட்டுப் பாகத்தில் இரண்டு பெண்கள் சுவரின் பக்கமாகத் திரும்பி முழங்காலில் நின்று கொண்டு இருந்தார்கள்.
"திடீரென்று கிழவன் பெண்களைப் பார்த்து எனது சௌகரியத்திற்கு ஒரு அறையைச் சுத்தம் செய்யச் சொன்னான். அவர்கள் அசையவில்லை.
"மறுபடியும் கிழவன் சொன்னான்: 'முன்பு ஒரு மனிதனைக் கொன்றேன். போன வருஷம் அவன் வந்தான். இன்றும் அவன் வருவான்!'
"அந்தக் குரலைக் கேட்டதுமே எனது மனம் கிடுகிடுத்துப் போய்விட்டது. இரத்தம் அப்படியே உறைந்து போய்விட்டது... இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமலிருக்க முயன்றேன். முடியவில்லை.
"கதவுப் பக்கத்தில் ஒரு சடை நாய் படுத்துறங்கிற்று. அதற்கு இந்தப் பயம் தெரியுமா?
"வெளியே சண்டமாருதம். மழையும் காற்றும் சொல்ல முடியவில்லை. திடீரென்று 'சட்டச் சடசடா' என்று ஒரு இடி முழக்கம். கண்ணை வெட்டும் மின்னல். சாத்தான் உடனே பிரசன்னமாயிருந்தாலும் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன்.
"அங்கிருந்தவர்கள் எல்லாம் ஏதோ மந்திர சக்தியில் கட்டுப்பட்டவர்கள் போல, எதையோ எதிர்பார்ப்பவர்கள் போலக் கவனித்துக் கொண்டு இருந்தார்கள். வெகுதூரம் நடந்ததினால் களைப்பு, இவர்களைத் தேற்றுவதற்கு எடுத்துக் கொண்ட சிரமம் எல்லாம் சேர்ந்து எனக்குத் தூக்கத்தை வருவித்தது. படுக்கப்போக எழுந்தேன். அப்பொழுது அந்தக் கிழக்காவல்காரன், ஒரே பாய்ச்சலில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, 'அதோ வந்துவிட்டான்! வந்துவிட்டான்! காத்திருக்கிறேன்!' என்று கூக்குரலிட்டான். உடனே பெண்களும் ஓடிப்போய் முன்போல் சுவருடன் ஒட்டி நின்றார்கள். கிழவனுடைய புத்திரர்கள், மறுபடியும் கோடாலியைத் தூக்கிக் கொண்டார்கள். அவர்களைச் சமாதானப் படுத்த முயன்றேன். அப்பொழுது அந்த நாய் விழித்துக்கொண்டு பயங்கரமாக ஊளையிட்டது. அது ஏறக்குறைய மனிதனுடைய குரல் மாதிரி இருந்தது...
"எல்லாரும் அந்த நாயையே கவனித்தோம். அசையாமல் நின்றுகொண்டு, எங்கள் கண்களுக்குத் தெரியாத எதையோ எதிர்நோக்குவது போல் தெரிந்தது. அதற்கு மயிர் எல்லாம் சிலிர்த்து நின்றது.
"எனக்கு வழி காட்டி வந்த குடியானவன். 'நாய்க்குத் தெரிகிறது, நாய்க்குத் தெரிகிறது!' என்று கூப்பாடு போட்டான். அந்தத் திருடனைக் கொல்லும்பொழுது அந்த நாயும் கூட இருந்ததாம்.
"என்னை யறியாமல் பயம் என்னைப் பிடிக்கத் தொடங்கியது... அங்கிருந்தவர்கள் பயத்தால் எதையோ எதிர் நோக்கியிருந்தார்கள்... அந்த நாய் எதையோ பார்க்கத்தான் செய்தது... ஒரு மணி நேரம் இப்படி ஊளையிட்ட வண்ணமாக இருந்தது. அதன் குரல்! அதை நினைக்கும்பொழுதே குடல் நடுக்கம் எடுக்கிறது. காரணமில்லாத, அடக்க முடியாத பயம் என்னைப் பிடித்தது. எதற்குப் பயம்? எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் ஏதோ பயப்படக்கூடியது ஒன்று இருக்கிறது என்று தெரிந்தது.
"என்ன செய்வது என்று தெரியாமல் திக்பிரமை பிடித்தவர்போல், ஒரு சின்னச் சத்தத்திலும் நெஞ்சு வெடித்துப்போகும் நிலைமையில் இருந்தோம். அந்த நாய் அறையைச் சுற்றிச் சுற்றி மோப்பம் பிடித்தது... எங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது.
"என் கூட வந்த வழிகாட்டிக்கு இதைத் தாங்க முடியவில்லை. திடீரென்று எழுந்து ஓடி நாயைப் பிடித்து வெளியே தள்ளிக் கதவையடைத்து விட்டான்.
"அதற்கு அப்புறம் நிசப்தம்! இந்த நிசப்தம் எங்களுக்கு இன்னும் அதிகப் பயப் பிராந்தியை உண்டு பண்ணிற்று.
திடீரென்று ஏதோ ஒன்று சுவரருகில் நிற்பதாகத் தோன்றிற்று. தொடுவதுபோல் திறக்க முயல்வது போல் தெரிந்தது. பிறகு... மறுபடியும் தெரிந்தது. பிரகாசமான கண்கள்! ஏதோ ஒரு குரல், ஈனஸ்வரத்தில்.
"சமையற்கட்டின் பக்கம் ஏதோ அமளி. அந்தக் கிழவன் சுட்டான். அவன் புத்திரர்கள் ஓடிவந்து கதவையடைத்து அதன்மீது மேஜையைச் சாத்தினர். அந்த துப்பாக்கிச் சத்தத்தில் எனது உயிரே போய்த் திரும்பியது. பயம்! உளறியடித்துக் கொண்டு நின்றேன்.
"அன்று இரவு முழுவதும் அப்படித்தான். விடியும் வரை கதவைத் திறக்க எங்களுக்குத் தைரியம் வரவில்லை.
"வானம் வெளுத்தது.
"சிறு வெளிச்சம் சற்றுத் தைரியத்தைக் கொடுத்தது. வெளியே சென்றோம்.
"அந்த நாய்தான். வாயில் குண்டுபட்டுச் சுவரடியில் இறந்து கிடக்கிறது."
அந்த வெள்ளைக்கார நண்பர் சற்று மௌனமாக இருந்தார்.
பிறகு, "மனப்பிராந்தி இருக்கிறதே அதைப் போன்ற பயம் வேறு கிடையாது" என்றார்.
மறுமணம் - ( கதாசிரியர் :விந்தன் )
அவள் போய் விட்டாள் எவள் போய்விட்டாள்? தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோரை உயிருடன் மறந்து, "இனி நீயே கதி!" என்று மணப்பந்தலில் பந்துமித்திரர்களுக்கு முன்னால் என் கரத்தை எவள், தன் மலர்க் கரத்தால் பற்றினாளோ, அவள்; வீடு, வாசல் ஒன்று ஏற்படுத்தி, ஏகாங்கியாக எங்கும் போகவிடாமல் எவள் என்னைத் தடுத்தாட்கொண்டாளோ, அவள்; எனக்கு நோய்நொடிகள் வந்த போதெல்லாம் தனக்கே வந்துவிட்டதாக நினைத்து அல்லும் பகலும் என் அருகிலேயே இருந்து எவள் எனக்கு சேவை செய்து வந்தாளோ, அவள்;அன்பு காட்டுவதில் தாயும் தாரமும் ஒன்று தான் என்று எவள் என்னை நினைக்க வைத்தாளோ அவள்; என் வாழ்க்கையில் அவ்வப்பொழுது ஏற்பட்ட சுக துக்கம் இரண்டிலும், இத்தனை நாளும் எவள் பங்கெடுத்துக்கொண்டிருந்தாளோ, அவள்; வாழ்க்கை இந்திர ஜாலம் போன்றது என்று தெரிந்திருந்தும் என்னுடன் எதிர்காலத்தைப் பற்றி எவள் என்னவெல்லாம் திட்டம் போட்டுக்கொண்டிருந்தாளோ, அவள்!
அவள் பெற்ற செல்வம் ரகு இதோ இருக்கிறான்; அவள் பெற்ற கண்மணி ராதை, இதோ இருக்கிறாள்.
நானும் இருக்கிறேன், என் அம்மாவும் இருக்கிறாள்; அவள்? போயே போய் விட்டாள்!
அவள் போய் இன்றுடன் ஆறு மாதங்களாகி விட்டன, நான் ஏன் இருக்கிறேன்? 'அவள் போனால் போகிறாள்!' என்று இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளவா? அம்மா ஏன் இருக்கிறாள்? என் தலையில் இன்னொருத்தியைக் கட்டி வைக்கவா? ரகுவும் சீதையும் ஏன் இருக்கிறார்கள்? 'நீங்கள் இரண்டாம் தாரம் கல்யாணம் செய்துக்கொள்ள வேண்டியது அவசியந்தான்!' என்று பிறர் என்னை வற்புறுத்தவா? எப்படி முடியும்?
தாம்பத்திய வாழ்க்கையில் மனித வர்க்கத்தை விட மணிப்புறாக்கள் எவ்வளவோ மேலானவையாக தோன்றுகின்றன. அவை எந்த காரணத்தைக் கொண்டும் ஏக பத்தினி விரதத்தைக் கைவிடுவதில்லையாம். ஆண்புறா, பெண்புறாவை விட்டுப் பிரிந்தால் ஊணுறக்கமின்றி உயிரை விட்டு விடுமாம்; பெண்புறா ஆண்புறாவை விட்டுப் பிரிந்தால் உயிர் போகும் வரை உண்ணாவிரதமிருக்குமாம் நாமும் அவற்றைப் பின்பற்றுவது சாத்தியமா? அது எப்படிச் சாத்தியமாகும்! ரகுவையும் ராதையும் விட்டு விட்டு நாம் எப்படி ஊணுறக்கமின்றி உயிரை விட முடியும்?
அப்புறம் அம்மா? நமக்குப்பின் அவள் கதி? அந்தப் புறாக்களுக்குத்தான் பாசமென்றும் பந்தமென்றும் ஒன்றும் இல்லை. கொஞ்சம் பறக்கும் சக்தி வந்ததும் அவை தங்கள் குஞ்சுகளை விரட்டி விடுகின்றன. நம்முடைய குழந்தைகளை நாம் அப்படி விரட்டிவிட முடியுமா? ஐயோ, எப்படி முடியும்?
முடியா விட்டால் என்ன? இரண்டாந்தரம் கல்யாணம் செய்து கொள்ளாமலே நாம் வாழ முடியாதா?
ஏன் முடியாது?
அம்மாவுக்கோ வயதாகிவிட்டது; அவளால் எந்த காரியத்தையும் இனி கவனிக்க முடியாதுதான் அதனால் என்ன, சமையலுக்குத்தான் சங்கரனை வைத்தாகி விட்டதே! பார்ப்போம்:
நாளடைவில் என்னையும் அறியாமல் ஏதோ ஒரு மனக்கவலை ஏக்கம்: ஏன் இப்படி?
இத்தனை நாளும் பார்ப்பதற்கு லட்சணமாயிருந்த சங்கரனை இப்போது பார்க்கவே பிடிக்கவில்லை. அவன் சமயலையும் சாதம் பரிமாறுவதையும் சகிக்கவே முடிவதில்லை.
"காப்பி கொண்டு வரட்டுமா?" சாதம் போடட்டுமா? என்று அவன் கேட்கும்போதெல்லாம் காதை அடைத்துக்கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது.வியர்க்க விறுவிறுக்க அவன் எதிரில் வந்து நின்றால் என் உடம்பே பற்றி எரிவது போல் இருக்கிறது.
சாட்டைப் போல் தலைமயிரைப் பின்னிவிட்டுக் கொண்டு, தலை நிறைய பூவை வைத்துக் கொண்டு, ஏதாவது ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு கை வளைகள் கலகலவென்று சப்திக்க, அப்படியும் இப்படியுமாக 'அன்ன நடை' போட்டுக் கொண்டிருந்த அந்த அழகு தெய்வம் எங்கே, இந்த அவலட்சணம் எங்கே?
"காப்பியா? இதோ, கொண்டுவந்து விட்டேன்?"
"சாதமா? இதோ, போட்டு விட்டேன்!" என்று அவள் குயிலைப் போலக் கொஞ்சுவது எங்கே? இவன் கழுதை போலக் கத்துவது எங்கே?
அவன் செய்யவேண்டியது வேலை; வாங்கவேண்டியது கூலி இவற்றைத் தவிர அவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?
இப்படிப்பட்ட வாழ்க்கையில் அன்புக்கு இடமுண்டா? அன்புக்கு இடமில்லை என்றால் இந்த வாழ்க்கை என்னத்திற்கு ? இந்த உலகம் தான் என்னத்திற்கு?
இப்படியெல்லாம் என்மனம் இப்பொழுது எண்ணமிடுகிறது; எண்ணமிட்டு ஏங்குகிறது.
வீட்டில் உள்ளவையெல்லாம் போட்டது போட்ட இடத்தில் கிடக்கின்றன. ஏற்ற இடத்தில் எடுத்து வைக்கப்படவில்லை' வீடே வெறிச்சென்று கிடக்கிறது. இத்தனைக்கும் அவளைத் தவிர வீட்டில் எல்லாமே இருக்கின்றன; இருந்தும் என்ன? ஒன்றுமே இல்லாதது போலல்லவா இருக்கிறது!
நல்ல வேளையாகக் குழந்தைகளைப் பராமரிப்பதற்கு மட்டும் தன் சிநேகிதி சீதாவை அவள் வைத்துவிட்டுப் போயிருந்தாள்.
எதிர் வீட்டில் குடியிருப்பவள் அவள்; வாழ்க்கை இன்னதென்று தெரியுமுன்பே விதவையாகி விட்டாள். அவளுக்குத் தகப்பனார் இல்லை. தாயார் இருந்தாள். இவர்கள் இருவருக்கும் ஜீவனோபாயம் அளித்து வந்தது ஒரே ஒரு இயந்திரம் தையல் மெஷின் உணர்ச்சியற்றது! ஆம். உணர்ச்சியுள்ள உறவினர்கள் பலர் அவர்களுடைய திக்கற்ற நிலையைப் பார்த்தும் பார்க்காதது போல் இருந்து விட்டார்கள்! அந்த சீதாதான் இப்போது ரகுவுக்கும் ராதைக்கும் தாயார்!
குழந்தைகள் இருவரும் தலைவாரிக் கொள்ளவேண்டுமா? அவளிடந்தான் செல்வார்கள். பொட்டிட்டுக்கொள்ள வேண்டுமா? அவளிடந்தான் செல்வார்கள். சட்டைப் போட்டுக் கொள்ள வேண்டுமா? அவளிடந்தான் செல்வார்கள்.
எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் அவள் இத்தனை காரியங்களையும் செய்து வந்தாள்.
ஒரு நாள் மாலை, வேலையிலிருந்து வீட்டுக்கு வந்தேன். உள்ளே சீதாவின் பேச்சுக்குரல் கேட்டது, செவிமடுத்தேன்.
"நிமோனியாவாம்; மிக்சர்' கொடுத்தார்!" என்றாள் அவள்.
அவ்வளவுதான்; "யாருக்கு நிமோனியா" என்று உடனே கேட்டுவிட என் மனம் துடித்தது.
அதற்குள் "காலையில் பள்ளிக்கூடத்திற்கு போகும்போது நன்றாகத்தானே போனாள்?" அதற்குள் இப்படி வந்துவிட்டதே? என்று அங்கலாய்த்தாள் என் தாயார்.
"எல்லாம் சரியாய்ப் போய்விடும் மாமி!" என்று தேறுதல் சொன்னாள் சீதா.
நான் உள்ளே சென்றேன். ராதை கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாள். தொட்டுப் பார்த்தேன். நல்ல காய்ச்சல்.
"மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மருந்து கொடுங்கள். ஆகாரம் "ஆரோரூட்" கஞ்சியைத் தவிர வேறொன்றும் கொடுக்க வேண்டாம், என்று எச்சரித்து விட்டு, சீதா என்னைக் கண்டதும் 'விருட்'டென்று வெளியே போய்விட்டாள்.
"பகல் பன்னிரண்டு மணிக்கு பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது குழந்தைக்கு நல்ல ஜுரம். சீதா தான் டாக்டர் வீட்டிற்கு அவளை கூட்டிக்கொண்டு போனாள். எனக்கென்ன கண்ணா தெரிகிறது!" என்றாள் தாயார்.
அதற்குள் சங்கரன் கஞ்சியைக் காய்ச்சி எடுத்துக் கொண்டு வந்தான். அதை ஆறவைத்துக் குழந்தைக்கு குடிப்பாட்ட முயன்றேன். அவள் குடிக்கவில்லை. "அம்மா, அம்மா" என்று அலறினாள்.
"உனக்கு அம்மா இல்லேடி கண்ணு." என்று சொல்லிக் கொண்டே, கரை புரண்டு வந்த கண்ணீரைப் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டாள் தாயார்.
"ஏன் இல்லை? இப்பத்தான் என்னை டாக்டர் வீட்டுக்குக் கூட்டி கொண்டு போனாளே அம்மா!" என்றாள் குழந்தை.
"அந்த அம்மா வாடி? இதோ அழைச்சிக்கிட்டு வறேன்!" என்று தட்டு தடுமாறிச் சென்று, எதிர் வீட்டு சீதாவை அழைத்து வந்தாள் அம்மா.
அவள் வந்து குடிப்பாட்டியபோதுதான் குழந்தை கஞ்சி குடித்தது!
சிறிதுநேரம் இருந்து, ராதை கண்ணயர்ந்த பிறகு சீதா போய்விட்டாள்.
அடுத்தபடி மருந்து கொடுக்கும் வேளை வந்தது. நான் கொடுக்க முயன்றேன். குழந்தை குடிக்கவில்லை. அதற்கும் சீதாதான் வரவேண்டியிருந்தது.
"ஐயோ, அவளுக்கு வேலை தலைக்கு மேலிருக்குமே" என்று அம்மா வருந்தினாள்.
" அதற்கென்ன மாமி, பரவாயில்லை!" என்றாள் அவள். ராதையின் ஜுரம் நீங்குவதற்கு மூன்று வாரங்களாயின. அந்த மூன்று வாரங்களும் சீதா, ராதையுடனே இருந்தாள்.
இந்தச் சமயத்தில் தான் என் மனத்தில் ஒரு சபலம் தட்டிற்று. ஏற்கெனவே சமூகச் சீர்திருத்தத்தில் பறுக்கொண்டிருந்த என் மனம் சீதாவை நாடியது அவள் சம்மதிப்பாளா? அவள் சம்மதித்தாலும் அவளுடைய தாயார் சம்மதிப்பாளா?
யார் சம்மதிக்காவிட்டால் என்ன? என்னை பார்த்து அவளும், அவளைப் பார்த்து நானும் சம்மதித்தால் போதாதா? இந்த அநித்தியமான உலகத்தில் பிறருடைய விருப்பும், வெறுப்பும் யாருக்கு என்ன வேண்டிக்கிடக்கிறது?
ஒரு நாள் துணிந்து இந்த விஷயத்தை என் தாயாரிடம் வெளியிட்டேன்.
அவள் "சிவ சிவா!" என்று காதை பொத்திகொண்டு, ரொம்ப நன்றாய்த்தான் இருக்கிறது; இந்த மாதிரி இன்னொரு தரம் சொல்லாதே! என்று சொல்லி விட்டாள்.
அன்று மாலை வீட்டிற்குள் நுழையும்போது, சீதாவுக்கும் தாயாருக்கும் இடையே பின்வரும் சம்பாஷணை நடந்து கொண்டிருந்தது.
"என்ன இருந்தாலும் பெண்பிள்ளை இல்லாத வீடு ஒரு வீடு ஆகுமா?" இது சீதாவின் குரல்.
"நானும் அதைத்தான் சொல்லுகிறேன்; கேட்டால்தானே?" இது என் அம்மா."
"ஏனாம்? இவரைவிட வயதானவர்கள், ஏழெட்டுப் பிள்ளை பெற்றவர்கள் எல்லாம் இரண்டாந்தாரமாகக் கல்யாணம் செய்துக் கொள்ளவில்லையா?"
"இவன் என்னமோ சமூகத்தை சீர்திருத்தி விடப் போகிறானாம்; விதவைகளின் துயரத்தைத் தீர்த்துவிடப் போகிறானாம். அதற்காக இரண்டாந்தாரமாகக் கல்யாணம் செய்து கொள்வதென்றால் இவன் எவளாவது ஒரு விதவையைத்தான் கல்யாணம் செய்து கொள்வானாம் இன்னும் என்னவெல்லாமோ சொல்கிறான்; அவற்றையெல்லாம் வெளியில் சொல்லவே எனக்கு வெட்கமாய் இருக்கிறது!"
"எந்த விதவை இவரை கல்யாணம் செய்து கொள்வதற்குக் காத்துக் கொண்டிருக்கிறாளாம்? இந்தப் புருஷர்கள் தான் 'விதவா விவாகம்'என்று எப்போது பார்த்தாலும் அடித்துக் கொள்கிறார்கள். எந்தப் பெண்ணாவது அப்படிச் சொல்கிறாளா? பைத்தியந்தான்."
இதை கேட்டமாத்திரத்தில் என் மனக்கோட்டை இடிந்து விழுந்தது. எண்ணங்கள் மூலைக்கு ஒன்றாக சிதறின.
ஆனாலும் ஆசை அத்துடன் என்னை விட்டுவிடவில்லை. எதற்கும் ஒரு கடிதம் எழுதி கேட்டுவிடுவதென்று தீர்மானித்தேன். அந்தக் கடிதத்தின் முதலில் விதவா விவாகத்தின் அவசியத்தை வற்புறுத்தி, நடுவே என் ஆவலை வெளியிட்டு, கடைசியில் கடிதம் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் தயவு செய்து பரம ரகசியமாகப் பதில் எழுதுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன்.
மேற்படி கடிதத்திற்கு வந்த பதில் இதுதான்:
வணக்கம்
மறுமணம் செய்துக் கொண்டால் விதவையின் துயரம் தீர்ந்து விடும் என்று சிலர் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்களா? என்னால் அதை நம்ப முடியவில்லை. அதற்காக வழிவழியாக வாழ்ந்து வரும் காதலை கொன்றுவிடவும் நான் விரும்பவில்லை.
எனவே என்னை பொறுத்தவரை, நான் பூசிக் கொண்ட மஞ்சளும், வைத்துக்கொண்ட குங்குமத் திலகமும், சூடிய மலரும், அணிந்த வளையலும் 'அவ'ருக்காகத்தான்.
வேறொருவருக்காக அவற்றை மீண்டும் அணிந்து கொள்வதென்பது இந்த ஜென்மத்தில் முடியாத காரியம்.
மன்னிக்கவும்.
சீதா.
மேற்படி கடிதத்தை படித்து முடித்ததும் பெண்கள் சபலச் சித்தம் உள்ளவர்கள் என்று சொன்ன மேதாவிகளின் மேதையை எண்ணி நான் சிரித்தேன், வைர நெஞ்சுடன் அவள் வாழும் முறைமையைப் பற்றி எண்ணியெண்ணி வியந்தேன். அப்போது காற்றிலே மிதந்து வந்த கீதமொன்று.
"கற்பு நிலையென்று சொல்ல வந்தார் - இரு
கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்"
என்று இசைத்து, மறுமணம் அல்ல திருமணம், ஒரு மனமே திருமணம்! என்ற முடிவுக்கு என்னை இழுத்துச் சென்றது.
பலூன் பைத்தியம் - ந.பிச்சமூர்த்தி
இன்றைய தினம் குழந்தைகள் பலூன் வாங்கினார்கள். அவர்களுக்கும் அவர்கள் தாயாருக்கும் சண்டை. காசு தரமாட்டேன் என்ற தாயார் கட்சி. குழந்தைகள் அழுகை எதிர்க்கட்சி.
பலூன் வாங்கும் சமயம் ஒவ்வொன்றிலும் இந்தத் தகராறுதான். இதுதான் கடைசி தடவை என்ற எச்சரிக்கையுடன் காசும் கிடைத்துவிடும். குழந்தைகள் கைக்குப் பலூனும் வந்துவிடும். இந்தத் தகராறு விஷயம் பலூனுக்கு எப்படித் தெரியும்! சில நிமிஷங்களுக்குள் பட்டென்று வெடித்துவிடும். ஒரு வேளை தெரிந்துதான் குழந்தைகளைப் போல ரோஸமில்லாமல் இருக்கிறதோ என்னமோ! இந்த மாதிரி எத்தனை கடைசித் தடவையாக பலூன் வாங்கியிருக்கிறார்கள் தெரியுமா? இன்றும் கடைசித் தடவையாகத் தான் பலூன் வாங்கியிருக்கிறார்கள். குழந்தைகள் திரும்பத் திரும்ப பலூன் வாங்க ஆசைப்படுவது எனக்கு பெரிய வியப்பாய் இருக்கிறது. பலூன் இரண்டு நிமிஷத்திற்குள் வெடித்து விடும் என்று குழந்தைகளுக்கு நன்றாய்த் தெரியும். தாயார் மறு பலூன் வாங்க காசு தர மறுப்பாள் என்றும் தெரியும்; பின் ஏன் கடைசி தடவையாகத் தினம் பலூன் வாங்குவதில் அவ்வளவு மோகம் கொள்கிறார்கள்...
பலூனுடைய வர்ணம் ஒரு வேளை அவர்களைக் கவர்வதாய் இருக்குமோ? இருக்க முடியாது. ஏனென்றால் கண்ட இடங்களிலெல்லாம் புஷ்பங்கள் காணாத வண்ணக் கவர்ச்சியா பலூன்களில் காண்கிறது? அவை வேண்டாம். மேகங்களும் அந்தி, சந்தியில் காணும் வானமும் இல்லையா? - வண்ணக் களஞ்சியமாக? ஆனால் மேகத்தையோ அந்த வானத்தையோ அங்கையில் அடக்கிவிட முடியாது. புஷ்பத்தைக் கையில் எடுக்கலாம். எனில் வாடிவிடும். கசங்கிவிடும். வண்ணத்தை திரும்பி ஏற்றிவிட முடியுமோ? முடியாது.
ஆம்! இதில்தான் பலூன் மோகத்தின் மர்மம் இருக்க வேண்டும். வித்தில்லாக் கத்திரிக்காயைப் போல் வாடி வதங்கிய பலூன் சிவப்புச் சந்திரனும் பச்சைச் சூரியனுமாக மாறிவிடுகிறதல்லவா - குழந்தைகள் கையில் ஏறியவுடன்? சிருஷ்டி சக்தி என்று ஒன்றிருக்கிறது. அதுவும் தங்களுக்குள் இருக்கிறது என்ற அறிவை இந்த விந்தை குழந்தைகளுக்குப் புகட்டுகிறது. நமக்கிருக்கும் சக்தியை வெளிப்படுத்துவதில்தான் இன்பம் உண்டாகிறது. இந்த இன்பத்தை நீடிக்கச் செய்ய வேண்டுமென்ற வெறிதான் பலூன் உடைந்துவிடுவதைக்கூட லஷ்யம் செய்வதில்லை! கடைசித் தடவை என்று தாயார் சொல்வதைக் கூட லட்சியம் செய்வதில்லை.
பலூன் உடைந்தால்தான் என்ன? துண்டுகளைக் கொண்டு குழந்தைகள் "மூட்டை" செய்துவிடுவார்கள், சுண்டைக்காய் அளவுக்கு சூரியனையும், சந்திரனையும் போல் செய்து நெற்றியில் சொடுக்கி இன்புறுவார்கள்.
இந்த சிருஷ்டி சக்தியே விசித்திரமானது; உலகப் போக்குக்கே ஒத்து வராதது. உடமை என்ற நினைப்பையும் ஆசாரம் என்ற கோட்பாட்டையும் சண்டைக்கிழுப்பதே இதன் தன்மை! அதன் காரணமாகத்தான் காசு செலவழிகிறதே என்று தாயார் நொந்து கொள்கிறாள். குழந்தைகள் எச்சில் செய்கிறதே என்று அடுத்த வீட்டுக்காரர் ஏசுகிறார்.
இன்னொரு உணர்ச்சி கூட காரணமாக இருக்கலாம். தரையில் நடந்தாலும் பறக்க வேண்டும் என்ற ஆசை இயல்பாக முளைத்து விடுகிறது. நம்மால் முடியாததை நமக்கு அடங்கிய பொருளைக் கொண்டு செய்து விட்டால் அந்தப் பெருமை நம்மைத்தானே சாரவேண்டும். நம்மால் பறக்க முடியாது. ஆனால் நம்மால் எதையாவது பறக்கவிட முடியும் பொழுது எவ்வளவு ஆச்சர்யமாக இருக்கிறது. காற்றாடி, தாத்தாபூச்சி, பலூன் - இவை குழந்தைகளின் சாதனம். பெரியவர்களுக்குப் பறக்கும் சாதனம்-
விண்வெளி விமானமில்லையா?
BACK
தேங்காய்த் துண்டுகள் - டாக்டர் மு.வரதராசனார்
"மாலை நேரத்தில் குடித்துவிட்டுச் சாலை ஓரத்தில் விழுந்து கிடப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இது என்ன கொடுமை! பகல் ஒரு மணிக்கு நல்ல வெயிலில் தார் வெந்து உருகும் வெப்பத்தில் இந்தச் சாலை ஓரத்தில் இப்படி ஒருவன் விழுந்து கிடக்கிறானே" என்று எண்ணிக் கொண்டே அந்த மாரியம்மன் கோயிலை அணுகி நடந்து போய்க் கொண்டிருந்தேன். வெளியூர்களில் கள் சாராயக் கடைகளை மூடி விட்ட பிறகு, அங்கே உள்ள குடிகாரர் சிலர் அடிக்கடி சென்னைக்குப் புறப்பட்டு வந்து, ஏதோ வேலை இருப்பது போல் நகரத்தைச் சுற்றித் திரிந்து, ஆசை தீரக் குடித்து மயங்கியிருந்து, பிறகு ஊருக்குத் திரும்புவது எனக்கு நன்றாகத் தெரியும். எங்கள் ஊரில் இருந்தே பலர் அப்படிப் புறப்பட்டு வந்து சென்னையில் குடித்துவிட்டுப் போவது தெரியும். ஒருமுறை வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டு, நகரத்தில் பல வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். உணவுக்கு ஒரு வேளையாவது வருமாறு அழைத்தாலும் வருவதில்லை. அவர்களுக்கு விருப்பமான விருந்து கள்ளுக் கடைகளிலும் சாராயக் கடைகளிலும் கிடைக்கும்போது, வெந்த அரிசிச்சோற்றைத் தேடியா வந்து காத்திருப்பார்கள்? நாட்டுப் புறத்தில் மூலைமுடுக்குகளில் காய்ச்சும் திருட்டுச் சாராயம் போதாது என்று இந்தக் கடைச் சரக்கை நாடி வருகிறவர்கள், அதையும் விட்டு நல்ல அரிசிச் சோற்றையும் பொருட்படுத்தாமல் இந்தப் பங்கீட்டு அரிசிச் சோற்றை... ஈரத்தோடு நெடுநாள் இருந்து கெட்டு அழுகிப் பல நிறம் பெற்று விளங்கும் அரிசியால் சமைத்த சோற்றையா நாடி வருவார்கள் என்று நானும் வற்புறுத்தாமல் விட்டுவிடுவேன். ஆனால் மின்சாரவண்டி வரும் வேளையில் தண்டவாளப் பாலத்தின்மேல் நடந்து வண்டியில் அகப்பட்டுக் கொண்டு மடிந்த இரண்டு பிணங்களை ஒரு நாள் காண நேர்ந்தது. அவர்களுக்கு முன்னே நடந்துவந்த சிலர் அவர்களைக் குடிகாரர் என்று அறிந்து அங்கே நடந்து போக வேண்டா என்று சொல்லித் தடுத்தும் கேட்கவில்லையாம். அந்தக் குடிவெறியில் தள்ளாடி நடந்து மின்சார வண்டிக்குப் பலியானார்களே என்று அன்று என் நெஞ்சம் மிக வருந்தியபோது, போக்கு வரவு மிகுந்த சென்னையில்தான் கள் சாராயக் கடைகளை முதலில் மூட வேண்டும் என்று உணர்ந்தேன்.
இந்த மாரியம்மன் கோயிலருகே சாலை ஓரத்தில் பகல் ஒரு மணி வெயிலில் படுத்துச் சுருண்டிருந்த உடம்பைக் கண்ட போதும் இந்த எண்ணமே உண்டானது. நடுப்பகலிலே இப்படிக் குடிக்கிறவன் பொழுது போனால் எவ்வளவு குடிப்பான் என்று சிறிது வெறுப்போடு எண்ணிக்கொண்டே நடந்தேன். அவனைப் பார்த்துக் கொண்டே இளைஞர் இருவர் நின்று கொண்டிருந்தார்கள். என்ன நிலைமை என்று தான் பார்க்கலாமே என்று நானும் அவர்கள் இருந்த பக்கமாக நடந்து சென்றேன்.
"குடிகாரனா?" என்று அவர்களைப் பார்த்துக் கேட்டேன்.
"இல்லைங்க" என்றார் ஒருவர்.
"வேறு என்ன? காக்கை வலிப்பா?" என்றேன்.
"அதுவும் இல்லைங்க. காக்கை வலிப்பாக இருந்தால் இப்படி மூச்சுப் பேச்சு இல்லாமல் சும்மா விழுந்து கிடப்பானா?" என்றார் மற்றொருவர்.
அவனுக்கு வயது இருபது இருக்கலாம். நல்ல கட்டான உடல் இருந்தது. ஆனால் அழுக்கேறிய ஆடையும் வாடிய முகமும் கண்டபோது, வேறு நோயாக இருக்க முடியுமா என்று எண்ணிப் பார்த்தேன். தீய வழியில் நடந்து பெற்ற விபசார நோயாக (மேகம் முதலிய நோயாக) இருந்து உயிருக்கே உலை வைக்கும் அளவுக்கு முற்றியிருக்கலாம் என்றும், இந்தக் காலத்து இளைஞர்கள் மிகவும் கெட்டுப் போனவர்கள் என்றும் எண்ணினேன். "சரி, கர்ம வினை, நாம் என்ன செய்ய முடியும்?" என்று ஒருவகை வெறுப்போடு நடக்கத் தொடங்கினேன்.
அதற்குள் யாரோ தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளிக்கவே, அவன் "வேலா, வேலா" என்று ஆழ்ந்த குரலில் இரண்டு முறை சொன்னான். இதைக் கேட்டதும் காலெடுத்துச் சில அடி தொலைவு நடந்து சென்ற நான் அந்த இடத்திலேயே நின்றேன். அப்போது அந்த இடத்தில் என்னைப் போல் வழிப்போக்கர் ஒருவர் எட்டிப்பார்த்து, "இது என்ன அய்யா! பாசாங்கு, வெறும் பாசாங்கு; வாய் திறந்து வேலா வேலா என்று கடவுள் பெயரைச் சொல்கிறானே! நான் இந்த மாதிரிப் பாசாங்குப் பிச்சைக்காரர் எவ்வளவோ பேரைப் பார்த்திருக்கிறேன். நேற்றுக் குழந்தை பெற்றுவிட்டு, இன்றைக்குப் பத்துமாதக் கர்ப்பவதி போல் பாசாங்கு செய்து பிச்சை கேட்பதைப் பார்த்ததில்லையா?" என்றார். உடனே அங்கிருந்த மற்றொருவர், "இதுதான் அய்யா பட்டணம்! போகிறவர்கள் சும்மா போகக் கூடாதா? எட்டிப் பார்த்தவுடன் பாசாங்கு தெரிந்துவிடுமா? அவரவர்கள் வயிற்றுக்கு இல்லாமல் பட்டினியால் செத்தால் தெரியும்" என்றார்.
'பட்டினி' என்ற சொல்லைக் கேட்டவுடன் எனக்கு இரக்கம் தோன்றியது. ஏதாவது வாங்கித் தரச் சொல்லலாம் என்று சட்டைப் பையில் கை இட்டுக் காசு எடுத்தேன். அதற்குள் ஒருவர் - கல்லூரி மாணவன் என்று அப்பால் தெரிந்து கொண்டேன் - ஒரு கையில் காப்பியும் மற்றொரு கையில் இரண்டு வாழைப்பழமும் கொண்டு வருவதைக் கண்டேன். என்ன நடக்கிறது, பொறுத்துத்தான் பார்ப்போம் என்று திரும்பி வந்து எட்டிப் பார்த்தேன். அதற்குள் அவனைச் சுற்றிப் பத்துப் பேருக்கு மேல் நின்று கொண்டிருந்தார்கள்.
காப்பி குடிக்கச் சொல்வதற்கு அவனை அசைத்துப் பார்த்தார்கள்; கூப்பிட்டுப் பார்த்தார்கள். ஒவ்வொரு வேளையில் மெல்லிய குரலில் ஏதோ ஒலி வந்தது. ஆனால் கண் திறக்கவில்லை. தண்ணீரும் கையுமாக நின்ற ஓர் ஆள் மறுபடியும் அவன் முகத்தில் தண்ணீரைத் தெளித்து வாயைத் திறந்து கொஞ்சம் தண்ணீர் உள்ளே விட்டார். மெல்லக் கண் திறந்து பார்க்கும் காட்சியைக் கண்டோ ம். உடனே ஒரு மாணவர் எழுப்பி உட்கார வைத்தார். இன்னொருவர் கையில் இருந்த காப்பியை நீட்டினார். அந்தக் காப்பியைக் கண்டதும், மயக்கத்தில் இருந்த அவனுடைய கைகள் ஒரே ஆவலாக அந்தக் காப்பிக் குவளையை இழுத்து வாயில் வைத்துக் கொண்டன. "சூடு, சூடு, பார்த்து, பார்த்து" என்று எதிரில் இருந்தவர் சொல்வதற்குள் காப்பி முழுவதும் எப்படியோ வாயினுள் சென்றுவிட்டது. அப்போது அவனுடைய கண்களில் புலப்பட்ட ஆவலையும் வேட்கையையும் நான் எப்போதுமே கண்டதில்லை. அந்தக் கண்கள் காப்பியையும் குவளையையும் சேர்த்து வாய்க்கும் கொடுக்காமல், தாங்களே விழுங்கிவிடுவன போல் அந்தப் பார்வை இருந்தது. உடனே அவனுடயை முகத்தில் தோன்றிய மாறுதல்தான் வியக்கத் தகுந்ததாக இருந்தது. இதுவரையில் அந்த முகத்தில் வாட்டம் இருந்தாலும் துன்பம் இல்லை; களைப்பு இருந்தாலும், பசிக்கொடுமை இல்லை. இப்போதோ பல்லை இளித்துக் கொண்டு, தலையைத் தொங்க விட்டுக் கொண்டு, சாய்ந்து சாய்ந்து ஏதோ சொன்னான், யார் காதிலும் அந்தச் சொற்கள் கேட்கவில்லை. தரையில் சாய்ந்துவிட விரும்பினான். வேண்டா என்று தடுத்து ஒருவர் மாரியம்மன் கோவில் சுவர் பக்கமாக நகரச் சொல்லி அந்தச் சுவரில் சாயச் செய்தார். அதற்குள் இன்னொருவர் மற்றொரு குவளைக் காப்பியும் ரொட்டித் துண்டும் வாங்கி வந்து நீட்டினார். அவனுடைய பசிக் கொடுமையால் உடனே அவைகளும் மறைந்தன. வாழைப்பழங்களும் உடனே மறைந்தன. 'அப்பாடா' என்று அயர்ந்து சாய்ந்து, சுற்றிப் பார்த்து, மருண்டு கண்ணீர் விட்டான். எல்லோருக்கும் இரக்கம் மிகுந்து விட்டது.
"எந்த ஊர் அப்பா?" என்றார் ஒருவர்.
"மதுரை" என்றான் சிறிது தெளிவான குரலில்.
"எங்கே வந்தாய்?"
"பிழைக்கத்தான் அய்யா! என் கதி...!"
"போகட்டும்; என்ன உடம்புக்கு?"
"ஐந்து நாளாச்சு அய்யா" என்று சொல்லி வயிற்றை அடித்துக் கொண்டு கண்ணீர் கலங்கினான்.
உடனே கூட்டம் மெல்ல மெல்லக் கலையத் தொடங்கியது. நான்கு பேர் நின்றார்கள்.
"எழுந்து நடக்க முடியுமா?" என்று கேட்டேன்.
"இன்னும் கொஞ்ச நேரம் பொறுங்கள், சாமி" என்று கெஞ்சும் குரலில் சொல்லி முகத்து வியர்வையைத் துடைத்து, கால்களை நீட்டிக் கொண்டும் மடக்கிக் கொண்டும் இருந்தான்.
பிறகு அங்கிருந்த சிலரும் மெல்ல நகர்ந்தார்கள். காப்பி கொடுத்த மாணவர் மட்டும் அங்கே நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த கல்லூரி மணி அடித்தது. அந்த மணி ஒலியைக் கேட்டதும், அவரும் திரும்பித் திரும்பிப் பார்த்தார். இறுதியில் அவரும் புறப்பட்டுப் போகவே, நான் மட்டும் அங்கே நின்றேன். அந்த இளைஞனுடைய உண்மையான நிலையைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஏதோ ஒருவகை வேட்கை என் மனதிலிருந்து தூண்டியது. அதனால்தான் நான் புறப்பட முடியாமல் அங்கே நின்றுவிட்டேன்.
"எழ முடியுமா?" என்று மறுபடியும் அவனைக் கேட்டேன்.
"உடம்பு அசதியாக இருக்கிறது, சாமி" என்றான்.
"வீடு வரைக்கும் வந்தால் வயிறாரச் சாப்பிட்டு வரலாம்" என்று அழைத்தேன்.
"வீடு எங்கே? சொல்லுங்கள். கொஞ்சம் களைப்புத் தீர்ந்ததும் நானே வருவேன்" என்றான்.
"இவ்வளவு களைப்பு ஏற்பட்ட பிறகு நீ ஏன் இந்த வழியில் நடந்து வர வேண்டும்? அதுவும் நடுப்பகல் வெயிலில் இப்படித் தார்ச் சாலையில் நடந்து வரலாமா?" என்றேன்.
"இன்னும் கொஞ்சம் தூரம் தானே? இந்த மாரியம்மன் கோவிலுக்கு எப்படியாவது போய்ச் சேர்ந்துவிடவேண்டும் என்று தள்ளாடிக் கொண்டே வந்தேனுங்க!" என்று சொல்லிவிட்டு அமைதி ஆனான். பிறகு கண்ணீர் கலங்கித் தன் அழுக்கு ஆடைகளால் கண்களைத் துடைத்துக் கொண்டான். ஏதோ உண்மைக் காரணம் இருக்க வேண்டும் என்று நானும் பொறுத்திருந்தேன்.
ஒரு பெருமூச்சு விட்டு, "நான் பிழைக்க மாட்டேனுங்க" என்று அழுதான். என்னால் ஆன வரையில் தேறுதல் கூறினேன். "சொந்த ஊரில் சாகாமல் இப்படிப் பட்டணத்தில் சாக வேண்டுமா?" என்று விம்மி விம்மிச் சொன்னான். "அதனால் தான் இந்தக் கோயிலுக்கு வந்து உயிரை விடலாம் என்று வந்தேன்" என்று கலங்கிச் சொன்னான்.
"நீ தான் திக்கற்றவன் ஆச்சே. உனக்கு எங்கே இறந்தால் என்ன? இந்தக் கோயில் மேல் பக்தி என்ன?" என்று மெல்லக் கேட்டேன்.
"பக்தி இல்லை சாமி. என்னோடு வந்தவன் - எங்கள் ஊரான் - இங்கே அடிக்கடி வந்து தேங்காய் பழம் வைத்துப் பூசை செய்து விட்டுப் போவது வழக்கம். அவன் வருவான், சாகும்போது அவனாவது பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்வான் என்று தான் இங்கு வந்தேன்" என்றான்.
இதைக் கேட்டதும், இன்னும் பெரிய கதைகள் இருக்கும் என்று நம்பிப் பேச்சை நிறுத்தி, எழுந்து வீட்டுக்கு வருமாறு சொன்னேன். மெல்ல எழுந்தான். கால்கள் பின்னிக் கொள்ளும் நிலையில் தளர்ந்து அடி எடுத்து வைத்து நடந்து வந்தான். வழியில் உள்ள ஒரு பாலத்தின் சுவரின் மேலும், ஒரு வீட்டுத் திண்ணையின் மேலும் இரு முறை உட்கார்ந்து மூச்சுவிட்டு எப்படியோ வீடு வந்து சேர்ந்தான். சாப்பிட்டு முடியும் வரையில் ஒன்றும் கேட்பதில்லை என்று இருந்தேன். உண்ட பிறகு அவன் முகத்தில் களைப்பும் தெளிவும் கலந்து விளங்கின. திண்ணையின் கீழே மெல்லச் சாய்ந்தான். "சாமி! உங்களுக்கு எவ்வளவோ புண்ணியம்! கொஞ்சநேரம் இங்கே படுத்திருந்துவிட்டுப் போய் விடுவேன்" என்றான். இதுதான் வாய்ப்பு என்று நானும் என் ஐயம் தீரக் கேட்கத் தொடங்கினேன்.
"உங்கள் ஊரான் கோவிலுக்கு வருவதாகச் சொன்னாயே. அவனுக்கு என்ன வேலை? அவன் நாள் தோறும் கோயிலுக்கு வருகிறானா?" என்று பல கேள்விகள் கேட்டேன்.
"அவன் எப்படியாவது இரவு படுப்பதற்கு முன் ஒவ்வொரு நாளும் இந்தக் கோயிலுக்கு வராமல் போவதில்லை. ஒருவேளை தவறிவிட்டாலும், அவன் இருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் உள்ள எந்தக் கோயிலுக்காவது போய்க் கும்பிட்டுவிட்டுப் படுத்துக் கொள்வான். அப்போதும் இந்த கோயில் மேல் தான் நினைவு இருக்கும்" என்று கேட்டதற்கெல்லாம் விடை கூறினான்.
இவ்வளவெல்லாம் சொல்லியும் அவனுடைய தொழிலையும் பெயரையும் சொல்லாமல் மறைத்து வந்தான். அதனால் அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் எனக்கு மிகுதியாயிற்று. வற்புறுத்திக் கேட்டதன் பிறகு, தன்னைப் போலவே கூலி வேலை செய்து பிழைப்பவன் என்றும், ஆனால் தன்னைப் போல் காசு கிடைக்காமல் கூலி வேலை கிடைக்காமல் உணவு கிடைக்காமல் திண்டாடுவதே இல்லை என்றும், அவன் பெயர் வேலன் என்றும் தெரிவித்தான். பெயர் வேலன் என்று அறிந்ததும், மயங்கி விழுந்து கிடந்த போது "வேலா வேலா" என்று அவன் வாய் பிதற்றியது நினைவிற்கு வந்தது. அவனுடைய நண்பனிடத்தில் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தால், உணர்விழந்த காலத்திலும் அவன் பெயரைச் சொல்லி குமுற முடியும் என்றும், அப்படிப்பட்ட உண்மை நண்பன் நாள் தவறாமல் பூசை செய்யும் நல்ல நிலைமையில் இருக்கும்போது இவன் மட்டும் ஏன் வாட வேண்டும் என்றும் நான் வியந்து அமைதியானேன். அதற்குள் அந்த இளைஞனை உறக்கம் ஆட்கொள்ள வந்ததை உணர்ந்தேன். சிறிது நேரத்தில் குறட்டை விட்டு உறங்கும் நிலைமை அடைந்தான்.
நான் எழுந்துபோய் என் கடமைகளை முடித்துக் கொண்டு திரும்பி வந்து அந்தத் திண்ணைமேல் சமக்காளம் விரித்துப் படுத்துக்கொண்டு, அவனைப் பற்றியும் அந்த வேலனைப் பற்றியும் வேலன் தொழில் எதுவாக இருக்கும் என்பதைப் பற்றியும் எவ்வளவோ எண்ணிப் பார்த்தேன். உண்மை அறிய முடியாமல் மயங்கிக் கொண்டிருந்தேன். எப்படியாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று துணிந்தேன். சிறிது நேரம் கழிந்தது.
திடீரென்று அவன் எழுந்து உட்கார்ந்து, "நீங்கள் இல்லாவிட்டால், நான் இன்றைக்குச் செத்தே போயிருப்பேன். என்னோடு வந்தவன் முனிசாமி என்று ஒருவன் அப்படித்தான் பட்டணத்து மண்ணுக்கு பலியானான்" என்று பக்கத்தில் இருந்த ஒரு கல்லையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். எழுந்த ஐயங்கள் தீர்வதற்கு முன்னே இன்னொரு முனிசாமி கதையும் புகுந்து விட்டதே என்று நினைத்து "வேலனுக்குப் பணமும் சாப்பாடும் கிடைத்தபோது இந்த முனிசாமி மட்டும் ஏன் பட்டினியால் சாக வேண்டும்?" என்று கேட்டேன்.
"வேலன் தைரியம் எங்களுக்கு வராது. வேலன் பள்ளிக் கூடத்திலும் சில மாதம் படித்திருக்கிறான். நான் படிக்கவே இல்லை. முனிசாமி மூன்றாவது படித்து நின்று விட்டான். தவிர, வேலன் செய்வதெல்லாம் முனிசாமிக்குப் பிடிப்பதில்லை. அது நல்லது அல்ல. பாவம் என்று முனிசாமி அடிக்கடி சொல்லுவான். அதனால் வேலனுக்குக் கோபம். அவன் முனிசாமிக்கு உதவி செய்வதே இல்லை. எனக்குக் கொடுக்கும் பணத்தில் கொஞ்சம் எடுத்து வேலனுக்குத் தெரியாமல் முனிசாமிக்குக் கொடுப்பேன். அவன் அதையும் வாங்க மாட்டான். வேலன் கொடுத்த காசு பாவக் காசு, அது எனக்கு வேண்டா, அதைவிட உயிரை விடலாம் என்று பிடிவாதமாய் வாங்க மறுத்து விடுவான். அதனால் பல நாள் பட்டினியிருக்க வேண்டி ஏற்பட்டது. ஒரு நாள் ரயில் வரும்போது தலை கொடுத்து விட்டான். அதுவும் எனக்குத் தெரியாது. வேலன் தான் அந்த பிணத்தைப் பார்த்ததாக இரண்டு நாள் கழித்துச் சொன்னான். எனக்காவது அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை. நான் செத்தால் அழுவாரும் இல்லை. அந்த முனிசாமிக்கு அம்மா இல்லா விட்டாலும், அப்பா இருக்கிறார். அவர் ஏழை. இருந்தாலும் கேள்விப்பட்டால் என்ன பாடுபடுவாரோ" என்று சொல்லிப் பல பல என்று கண்ணீர் விட்டான்.
இதுதான் நல்ல சமயம் என்று, நான் தேறுதல் சொல்வது போல், "நீ அவசரப்பட்டு பைத்தியக்காரனைப் போல் உயிரைப் போக்கிக் கொள்ளாதே. என்னால் ஆன உதவி செய்வேன். கடும்பசியாக இருக்கும்போதெல்லாம் இங்கே வந்து போ" என்று சொன்னேன். வேலன் தொழில் என்ன என்று உண்மையை மறைக்காமல் சொல்லும்படி பலமுறை கேட்டேன். யாரிடமும் வெளிப்படுத்தமாட்டேன் என்றும், தீமை ஒன்றும் நேராமல் பார்த்துக் கொள்வேன் என்றும் உறுதி கூறிய பிறகே அதைப்பற்றி வாய் திறந்தான். அப்போதும், நீண்ட முகவுரைக்குப் பிறகே சொல்லத் தொடங்கினான்.
BACK