மனத்திற்கு கட்டளை - பாரதியார்

பேயா யுழலும் சிறுமனமே

பேணா யென்சொல் இன்றுமுதல்

நீயாயொன்றும் நாடாதே

நினது தலைவன் யானே காண்

தாயாம் சக்தி தாளினிலும்

தரும மெனயான் குறிப்பதிலும்

ஓயா தேநின் றுழைத்திடுவாய்

உரைத்தேன் அட‌ங்கி உய்யுதியால்.

பய‌ம் - ( கதாசிரியர் : புதுமைப்பித்தன்)

அன்று பொழுது போகவில்லை. தேகாரோக்கியத்திற்குக் கடல் காற்று நல்லதாமே! பீச் ரோட்டில் நடந்து கொண்டே போனேன்.

எவ்வளவு தூரம் போனேன் என்று எனக்குத் தெரியாது. கடற் காற்றும் மனவோட்டத்திற்குச் சாந்தியளித்தது. நானும் நடந்துகொண்டே போனேன். ஏறக்குறைய திருவல்லிக்கேணி ரேடியோ ஸ்டாண்டு கூப்பிடு தூரத்தில் வந்து விட்டது.

காலும் வலித்தது.

பாதையின் பக்கத்திலிருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்தேன்.

நல்ல நிலா.

அடி வானத்திலே மெல்லிய பூப்பஞ்சை வைத்து ஜிகினா வேலை செய்தது மாதிரி வெண் மேகங்கள் - எனது வரையற்ற மனம்போல் - கடலையும் வானையும் பிரித்துக் கட்டின.

மேலே சிதறுண்ட கனவுகள் போல், இலட்சியங்கள் போல், நட்சத்திரங்கள்.

பின்புறத்திலே கடல். ஆமாம்! கடல், எனது எண்ணங்களைத் தட்டிக் கொடுக்கும் பாவனையாக அலை எழுப்பி 'உம்' 'உம்' என்று ஒப்புக்கொள்ளும் கடல்.

மனதிற்குக் குதூகலம் வந்தது. கால்கள் நடப்பதற்கு மறுத்தன.

வீட்டிற்குச் சென்று என்னத்தைத் தூக்கி நிறுத்தப் போகிறேன்! இன்னும் சற்று நேரம் உட்கார்ந்துவிட்டுப் போனால் என்ன?

இருக்கும்பொழுது...

பெரிய ஆஜானுபாகுவான வெள்ளைக்காரன். குறுகக் கத்தரித்து விடப்பட்ட தலை, அகன்ற நெற்றி, நீண்ட நாசி, குறுகக் கத்தரித்து விடப்பட்ட மீசை, மெல்லிய, மனவுறுதியைக் காண்பிக்கும் உதடுகள், கிரேக்க சிற்பியின் கனவு போன்ற தேக அமைப்பு. மொத்தத்தில், புத்தியும் தேக பலமும் கூடிக் கலந்து பரிணமித்த மனிதன்.

அந்தக் கண்களில், எதிலும் ஆசை பூர்த்தியாகாத நோக்கு. அறியவேண்டிய அவா. ஐந்து நிமிஷம் சும்மாயிருப்பது சாவுக்கு நிகர் என்று உழைப்பில் நாட்டம் மிகுந்த தேகப் படபடப்பு.

பொதுவிலே, அந்தப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குத் தங்கள் இரத்தத்தையும் வாழ்க்கையையும் அர்ப்பணம் செய்தார்களே, அந்த நாடோ டிகள், இந்த மகத்தான கூட்டத்தின் தனிக் குணம் இந்த வெள்ளைக்காரனின் ஒவ்வொரு சலனத்திலும் தெரிந்தது.

வந்தவன் என் பக்கத்தில் நேராக வந்து உட்கார்ந்தான். அவனிடத்தில் அந்த மிடுக்கு. வெள்ளையரின் சாம்ராஜ்யப் பெருமையில் பிறந்த அந்த மிருகத்தனம், அது அவனிடம் காணப்படவில்லை.

கண்ணிலே நல்ல குணம்; கட்டுறுதியுள்ள உடல்.

எனக்கு அவனிடம் பேசவேண்டுமென்ற ஆசை எப்படி ஆரம்பித்தது?

அவனுக்கு அந்தப் பிரச்னையே தோன்றவில்லை. சாதாரணமாக, இயற்கையாக மனிதனுக்கு மனிதன் பேசுவது மாதிரி என்னை வசப்படுத்திவிட்டான். புதிய அன்னிய நண்பன் என்ற ஹோதா எங்களுக்குள் மறைந்து போயிற்று.



பேசுவது ஒரு தனிக் கலை. அது அவனுக்குத் தெரிந்து இருந்தது. சளைக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம். பேசுவது என்றால் ஒரு மனிதனுடைய தனிப்பிரசங்கம் என்று நினைத்து விடுகிறார்கள் பலர். அவன் அப்படியல்ல. பக்கத்திலிருப்பவனைப் பதில் சொல்ல வைத்துச் சம்பாஷணைப் பந்தை உருட்டி விடுவதில் நிபுணன்.

அன்று பல சங்கதிகள் பேசி வரும்பொழுது நான் முதலில் நினைத்தது சரிதான் என்று பட்டது. அவன் மகத்தான நாடோ டி. துருவங்களிலிருந்து, அக்னிப் பிழம்பான பாலைவனங்கள் வரை, உலகத்தில் அவனுக்குத் தெரியாத பாகம் கிடையாது. அதுமட்டுமல்ல. நல்ல ரஸிகன். அவன் மனம் ஒரு இலட்சிய உலகில் வசித்து வந்தது. அதனால், ஒரு பூர்த்தியாகாத ஆசை, ஓர் ஆதர்சம், அவனைப் பிடர்பிடித்துத் தள்ளிக்கொண்டு சென்றது. அவன் இஷ்டப்பட்டாலும், அவனால் ஓரிடத்தில் நிரந்தரமாகத் தங்க அவனது மனம் இடங்கொடாது.

"நீங்களும் பயந்திருக்கிறீர்களா?" என்று அவரது தேக அமைப்பை உற்று நோக்கினேன். அவர் சொல்வதை நம்ப முடியவில்லை.

அவரும் சிரித்துக்கொண்டு, "நானும் பயந்திருக்கிறேன். நீங்கள் ஏன் சந்தேகப்படவேண்டும்?" என்று கொண்டே தன் பையிலிருந்த ஒரு சுங்கானை எடுத்து நிரப்பி விட்டு, ஒரு இழுப்பு இழுத்து, புகையை மிகுந்த ஆர்வத்துடன் ரஸித்தார். கண்கள் ஏதோ யோசிப்பது போல் கனவு கண்டன.

"ஆமாம், நான் பயந்திருக்கிறேன். நான் சொல்லுகிறதைக் கேளுங்கள். பயம் தைரியசாலிக்கும் அசையாத நெஞ்சு படைத்தவனுக்கும்தான் வரும். கோழைத்தனம், பயமல்ல. பயம் மனதில் தோன்றும் ஒரு நடுக்க நினைப்பு. உள்ளத்தையே, உயிரையே அப்படிக் குலுக்கிவிடுகிறது. சாவு நிச்சயம் என்று நாம் எதிர்பார்க்கும் சமயத்தில் பயம் தோன்றாது. ஆமாம் தெரிந்த அபாயத்தில் பயம் தோன்றாது. அது எதிர்பாராத சம்பவங்களில், இன்னதென்று அறியமுடியாத ஒரு சக்தியின் சூழ்ச்சியில், மிகவும் சாதாரணமான தொந்தரவுகளில் வந்துவிடும். குண்டுக்கும் கத்திக்கும் அஞ்சாதவன், நள்ளிரவில் திடீரென்று பிசாசைக் கண்டால், பயம், புத்தியை வலிமையைச் சிதற அடிக்கும். பயம் இன்னதென்று தெரிந்து கொள்வான்.

"எனக்குப் பயம் என்றால் இன்னதென்று தெரியும். ஒரு தடவை பட்டப் பகலில் - அது பத்து வருஷங்களுக்கு முந்தி - அனுபவித்தேன். மற்றொருதரம் போன டிசம்பரில் ஓர் இராத்திரியில் அனுபவித்தேன்.

"ஆம்! நான் எத்தனையோ தடவை எமனுடன் போராடியிருக்கிறேன். மனிதனுடைய மிருகத்தனத்தின் பேரில் எனது சக்தியால் வெற்றி பெற்றிருக்கிறேன். எத்தனை சண்டைகள்! தரையிலும் கடலிலும்! அவைகளில் ஒரு தடவையாவது பயந்தேனா!

"நான் பத்து வருஷங்களுக்குமுன் ஆப்பிரிக்காவிற்குச் சென்றிருந்தேன். அங்கெல்லாம் உயிர் துச்சம்! சாவிற்கு எப்பொழுதும் தயார். அதுதான் மனிதனுக்கு வரும் தீங்கில் எல்லாம் லேசானது என்று நினைக்கிறார்கள் அந்தப் பிரதேசத்திலிருப்பவர்கள். அங்கு அந்தப் பாதுகாப்பற்ற இரவிலே கவலையற்ற தூக்கம். எங்களுக்கு, எங்கள் நாட்டிலே அப்படியல்ல, ஒவ்வொரு வினாடியும் செத்துக் கொண்டிருக்கும் கோழைத்தனம். நீங்களே பாருங்களேன் மேல்நாட்டு அரசியல்களின் சந்தேகத்தை! ஆயுதம்! படைகள்! ஆயுதம்! சந்தேகம்! சந்தேகம்..."

சற்று மௌனம்.

"அப்பொழுது நடந்ததுதான். நான் தெற்கு ஊர்க் காள் பாலைவனத்தைக் கடந்துவிட்டேன். உலகத்திலுள்ள பிரதேசங்களிலே அது பார்க்கவேண்டிய இடம். பாலைவனம் என்றால், இந்தக் கடற்கரையோரத்திலே கோவணம் மாதிரி நீண்டு கிடக்கிறதே இப்படியிருக்குமென்றா நினைத்துக் கொண்டீர்! அது மணல் சமுத்திரம், எங்கு பார்த்தாலும், மணல், மணல், மணல். திடீரென்று ஒரு பேய்க்காற்று வந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான். இவ்வளவு நேரம் செத்துக் கிடந்த மாதிரி இருந்த மணல் அலைமேல் அலையாக எழும்பிக் குவியும்.



"அந்த எல்லையற்ற மௌனத்திலே மணல் மலைகள் பெரிதும் சின்னதுமாக இருக்கும். அதில் ஏறி ஏறி இறங்க வேண்டும், பாலைவனத்தைக் கடக்க வேண்டுமானால். அங்கே நிழலா?

"குதிரைகள் முட்டளவு மணலில் புதைந்துதான் நடக்கும். களைப்பு என்பதற்கு அர்த்தம் அந்தக் குதிரைகளுக்குத் தெரியும். அதில் ஏறிச்செல்ல வேண்டிய விதிபடைத்த மனிதனுக்குத் தெரியும்.

"அப்பொழுது நாங்கள் இருவர் சென்றோம். கூட நான்கு ஒட்டகங்கள், எங்களுடைய சாமான்களுக்கு; அதன் ஓட்டிகள். எங்களால் பேசமுடியாது அவ்வளவு நாவரட்சி; கானலினாலும், களைப்பினாலும் மூச்சுத் திணறுகிறது. திடீரென்று எங்களில் ஒருவன் பயந்து ஓலமிட்டான். நாங்கள் திடுக்கிட்டு நின்றோம். ஆமாம்! திடுக்கிட்டு விட்டோ ம்! அந்தப் பிரதேசத்திலே வழி தவறிய பிரயாணிகளுக்குத்தான் அந்தக் காரணம் சொல்ல முடியாத நிகழ்ச்சி தெரியும்.

"எங்கோ கிட்டத்தான். எவ்வளவு கிட்டவென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஒரு முரசொலி! அதற்குத்தான் பாலையின் முரசு என்று பெயர். முதலில் காதுகளைத் துளைக்கும்படியாக, மனது இடிந்து, சுக்கலாகப் போகும்படியாகக் கேட்டது. சற்று நேரம் ஒன்றுமில்லை. பிறகு அந்தச் சாவின் அறிகுறியான, பயங்கரமான மௌனத்தை வெருட்டி, எல்லையற்ற வானத்தை நிறைத்து முழங்கியது அந்த முரசொலி.

"ஒட்டகக்கார அராபியர்கள் 'ஐயோ! மரணம் நெருங்கிவிட்டது' என்று கூவினார்கள்.

"அவர்கள் கூவி முடியவில்லை. என்னுடைய நண்பன் குதிரையிலிருந்து விழுந்தான். சூரிய கிரணத்தினால் தாக்கப்பட்டு, அவனை உயிர்ப்பிக்க வெகு கஷ்டப்பட்டோ ம். முரசொலி, டம், டம், டம் என்று காதைத் தொளைத்தது. எனது இறந்த நண்பனைக் கூர்ந்து கவனித்தேன். பயம் தோன்றியது.

"பயம்!

"நெஞ்சை அப்படியே அமுக்கி உயிரைக் கசக்கிவிடும் பயம்! அதற்குச் சந்தேகமில்லை. பயந்தான்.

"சுற்றி நாலுபுறமும் மணற்குன்றுகள். ஜன சஞ்சாரத்திற்கும் எங்களுக்கும் இடையே இருநூறு மைல். எனது நண்பன் இறந்து போனான். நான் எப்பொழுதோ?...

"அந்த முரசு - 'அதன் காரணம் என்ன?' என்று நான் கேட்டேன்.

"பலர் பலவிதமாகச் சொல்லுகிறார்கள். காரணம் என்னவென்று சொல்லுவது? தூரத்திலுள்ள மேளங்களின் சப்தம் காற்றில் கலந்து எதிரொலிக்கிறது என்கிறார்கள். அங்கிருக்கும் ஒருவிதப் பனையின் ஓலை. சலசலப்பதின் சப்தம் என்கிறார்கள். உண்மையில் அது கானல் இருக்கிறதே அது மாதிரி ஒளியின் சப்த மயக்கம். பிறகுதான் ஸயன்ஸ்படி அது எந்தக் காரணத்தினால் உண்டானது என்று தெரிந்து கொண்டேன். பயந்தது நிச்சயம்...

இன்னொரு தடவை பயந்தேனே அது பிரான்ஸ் தேசத்துக் காடுகளில்.

"அன்று, இரவு வெகு சீக்கிரம் வந்துவிட்டது. அவ்வளவு மேகம். நல்ல மழைக்காலம். அப்பொழுது எனக்கு வழி காட்டியாக ஒரு குடியானவன் வந்தான். வானத்திலே மேகங்கள் ஒன்றையொன்று பிடர்பிடித்துத் தள்ளிக்கொண்டு ஓடின. காற்று சண்டனாக வந்துவிட்டது. மரங்கள் தலைவிரித்தாடின. மரக்கிளைகள் பரிதாபகரமாக, பயங்கரமாக, முக்கி முனங்கிக்கொண்டு உறுமின. என்ன கம்பளிச்சட்டை போட்டுக்கொண்டு இருந்தும் குளிர் எலும்பைத் தாக்கியது.



"இனிமேல் செல்ல முடியாது என்று கண்டு, பக்கத்திலிருந்த ஒரு காவல்காரனின் குடிசைக்கு அழைத்துச் சென்றான். அந்தக் காவல்காரன் இரண்டு வருஷத்திற்கு முன் ஒரு திருடனைச் சுட்டுக்கொன்றவன். அதிலிருந்து அந்தத் திருடனுடைய பேய் வந்து அவனைத் தொல்லை செய்வதுமாதிரி அவனுக்கு ஒரு பிராந்தி - பயம். அவனுடன் அவனுடைய இரண்டு புத்திரர்களும் அவர்களுடைய மனைவிகளுடன் வசித்து வருகிறார்கள். இது அந்தக் குடியானவன் எனக்குப் போகும் பொழுது கூறினான்.

"இருள் அதிகமாகி விட்டதால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. கடைசியாகத் தூரத்திலே சற்று வெளிச்சம். நெருங்கினோம். ஒரு குடிசை கொஞ்சம் பெரியதுதான். வழிகாட்டி கதவைத் தட்டினான். உள்ளிருந்து பயத்தினால் திக்கு முக்கடித்த ஒரு குரல் யார் என்று கேட்டது. குடியானவன் பதில் சொல்லக் கதவு திறந்தது. உள்ளே சென்றோம்.

"நான் உள்ளே கண்ட காட்சியை ஒரு நாளும் மறக்க முடியாது. அந்த அறையின் நடுவில் பஞ்சுப்பெட்டிபோல் நரைத்த ஒரு கிழவன் கையில் குண்டு போட்ட துப்பாக்கியுடன் நின்றான். இரண்டு முரடர்கள் கையில் கோடரியை ஏந்திய வண்ணம் நின்றார்கள். சற்று தூரத்தில் வெளிச்சம் படாத இருட்டுப் பாகத்தில் இரண்டு பெண்கள் சுவரின் பக்கமாகத் திரும்பி முழங்காலில் நின்று கொண்டு இருந்தார்கள்.

"திடீரென்று கிழவன் பெண்களைப் பார்த்து எனது சௌகரியத்திற்கு ஒரு அறையைச் சுத்தம் செய்யச் சொன்னான். அவர்கள் அசையவில்லை.

"மறுபடியும் கிழவன் சொன்னான்: 'முன்பு ஒரு மனிதனைக் கொன்றேன். போன வருஷம் அவன் வந்தான். இன்றும் அவன் வருவான்!'

"அந்தக் குரலைக் கேட்டதுமே எனது மனம் கிடுகிடுத்துப் போய்விட்டது. இரத்தம் அப்படியே உறைந்து போய்விட்டது... இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமலிருக்க முயன்றேன். முடியவில்லை.

"கதவுப் பக்கத்தில் ஒரு சடை நாய் படுத்துறங்கிற்று. அதற்கு இந்தப் பயம் தெரியுமா?

"வெளியே சண்டமாருதம். மழையும் காற்றும் சொல்ல முடியவில்லை. திடீரென்று 'சட்டச் சடசடா' என்று ஒரு இடி முழக்கம். கண்ணை வெட்டும் மின்னல். சாத்தான் உடனே பிரசன்னமாயிருந்தாலும் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன்.

"அங்கிருந்தவர்கள் எல்லாம் ஏதோ மந்திர சக்தியில் கட்டுப்பட்டவர்கள் போல, எதையோ எதிர்பார்ப்பவர்கள் போலக் கவனித்துக் கொண்டு இருந்தார்கள். வெகுதூரம் நடந்ததினால் களைப்பு, இவர்களைத் தேற்றுவதற்கு எடுத்துக் கொண்ட சிரமம் எல்லாம் சேர்ந்து எனக்குத் தூக்கத்தை வருவித்தது. படுக்கப்போக எழுந்தேன். அப்பொழுது அந்தக் கிழக்காவல்காரன், ஒரே பாய்ச்சலில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, 'அதோ வந்துவிட்டான்! வந்துவிட்டான்! காத்திருக்கிறேன்!' என்று கூக்குரலிட்டான். உடனே பெண்களும் ஓடிப்போய் முன்போல் சுவருடன் ஒட்டி நின்றார்கள். கிழவனுடைய புத்திரர்கள், மறுபடியும் கோடாலியைத் தூக்கிக் கொண்டார்கள். அவர்களைச் சமாதானப் படுத்த முயன்றேன். அப்பொழுது அந்த நாய் விழித்துக்கொண்டு பயங்கரமாக ஊளையிட்டது. அது ஏறக்குறைய மனிதனுடைய குரல் மாதிரி இருந்தது...

"எல்லாரும் அந்த நாயையே கவனித்தோம். அசையாமல் நின்றுகொண்டு, எங்கள் கண்களுக்குத் தெரியாத எதையோ எதிர்நோக்குவது போல் தெரிந்தது. அதற்கு மயிர் எல்லாம் சிலிர்த்து நின்றது.

"எனக்கு வழி காட்டி வந்த குடியானவன். 'நாய்க்குத் தெரிகிறது, நாய்க்குத் தெரிகிறது!' என்று கூப்பாடு போட்டான். அந்தத் திருடனைக் கொல்லும்பொழுது அந்த நாயும் கூட இருந்ததாம்.



"என்னை யறியாமல் பயம் என்னைப் பிடிக்கத் தொடங்கியது... அங்கிருந்தவர்கள் பயத்தால் எதையோ எதிர் நோக்கியிருந்தார்கள்... அந்த நாய் எதையோ பார்க்கத்தான் செய்தது... ஒரு மணி நேரம் இப்படி ஊளையிட்ட வண்ணமாக இருந்தது. அதன் குரல்! அதை நினைக்கும்பொழுதே குடல் நடுக்கம் எடுக்கிறது. காரணமில்லாத, அடக்க முடியாத பயம் என்னைப் பிடித்தது. எதற்குப் பயம்? எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் ஏதோ பயப்படக்கூடியது ஒன்று இருக்கிறது என்று தெரிந்தது.

"என்ன செய்வது என்று தெரியாமல் திக்பிரமை பிடித்தவர்போல், ஒரு சின்னச் சத்தத்திலும் நெஞ்சு வெடித்துப்போகும் நிலைமையில் இருந்தோம். அந்த நாய் அறையைச் சுற்றிச் சுற்றி மோப்பம் பிடித்தது... எங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது.

"என் கூட வந்த வழிகாட்டிக்கு இதைத் தாங்க முடியவில்லை. திடீரென்று எழுந்து ஓடி நாயைப் பிடித்து வெளியே தள்ளிக் கதவையடைத்து விட்டான்.

"அதற்கு அப்புறம் நிசப்தம்! இந்த நிசப்தம் எங்களுக்கு இன்னும் அதிகப் பயப் பிராந்தியை உண்டு பண்ணிற்று.

திடீரென்று ஏதோ ஒன்று சுவரருகில் நிற்பதாகத் தோன்றிற்று. தொடுவதுபோல் திறக்க முயல்வது போல் தெரிந்தது. பிறகு... மறுபடியும் தெரிந்தது. பிரகாசமான கண்கள்! ஏதோ ஒரு குரல், ஈனஸ்வரத்தில்.

"சமையற்கட்டின் பக்கம் ஏதோ அமளி. அந்தக் கிழவன் சுட்டான். அவன் புத்திரர்கள் ஓடிவந்து கதவையடைத்து அதன்மீது மேஜையைச் சாத்தினர். அந்த துப்பாக்கிச் சத்தத்தில் எனது உயிரே போய்த் திரும்பியது. பயம்! உளறியடித்துக் கொண்டு நின்றேன்.

"அன்று இரவு முழுவதும் அப்படித்தான். விடியும் வரை கதவைத் திறக்க எங்களுக்குத் தைரியம் வரவில்லை.

"வானம் வெளுத்தது.

"சிறு வெளிச்சம் சற்றுத் தைரியத்தைக் கொடுத்தது. வெளியே சென்றோம்.

"அந்த நாய்தான். வாயில் குண்டுபட்டுச் சுவரடியில் இறந்து கிடக்கிறது."

அந்த வெள்ளைக்கார நண்பர் சற்று மௌனமாக இருந்தார்.

பிறகு, "மனப்பிராந்தி இருக்கிறதே அதைப் போன்ற பயம் வேறு கிடையாது" என்றார்.

மறுமணம் ‍- ( க‌தாசிரிய‌ர் :விந்தன் )

அவள் போய் விட்டாள் ‍ எவள் போய்விட்டாள்? தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோரை உயிருடன் மறந்து, "இனி நீயே கதி!" என்று மணப்பந்தலில் பந்துமித்திரர்களுக்கு முன்னால் என் கரத்தை எவள், தன் மலர்க் கரத்தால் பற்றினாளோ, அவள்; வீடு, வாசல் ஒன்று ஏற்படுத்தி, ஏகாங்கியாக எங்கும் போகவிடாமல் எவள் என்னைத் தடுத்தாட்கொண்டாளோ, அவள்; எனக்கு நோய்நொடிகள் வந்த போதெல்லாம் தனக்கே வந்துவிட்டதாக நினைத்து அல்லும் பகலும் என் அருகிலேயே இருந்து எவள் எனக்கு சேவை செய்து வந்தாளோ, அவள்;அன்பு காட்டுவதில் தாயும் தாரமும் ஒன்று தான் என்று எவள் என்னை நினைக்க வைத்தாளோ அவள்; என் வாழ்க்கையில் அவ்வப்பொழுது ஏற்பட்ட சுக துக்கம் இரண்டிலும், இத்தனை நாளும் எவள் பங்கெடுத்துக்கொண்டிருந்தாளோ, அவள்; வாழ்க்கை இந்திர ஜாலம் போன்றது என்று தெரிந்திருந்தும் என்னுடன் எதிர்காலத்தைப் பற்றி எவள் என்னவெல்லாம் திட்டம் போட்டுக்கொண்டிருந்தாளோ, அவள்!

அவள் பெற்ற செல்வம் ரகு இதோ இருக்கிறான்; அவள் பெற்ற கண்மணி ராதை, இதோ இருக்கிறாள்.

நானும் இருக்கிறேன், என் அம்மாவும் இருக்கிறாள்; அவள்? போயே போய் விட்டாள்!

அவள் போய் இன்றுடன் ஆறு மாதங்களாகி விட்டன, நான் ஏன் இருக்கிறேன்? 'அவள் போனால் போகிறாள்!' என்று இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளவா? அம்மா ஏன் இருக்கிறாள்? என் தலையில் இன்னொருத்தியைக் கட்டி வைக்கவா? ரகுவும் சீதையும் ஏன் இருக்கிறார்கள்? 'நீங்கள் இரண்டாம் தாரம் கல்யாணம் செய்துக்கொள்ள வேண்டியது அவசியந்தான்!' என்று பிறர் என்னை வற்புறுத்தவா? எப்படி முடியும்?

தாம்பத்திய வாழ்க்கையில் மனித வர்க்கத்தை விட மணிப்புறாக்கள் எவ்வளவோ மேலானவையாக தோன்றுகின்றன. அவை எந்த காரணத்தைக் கொண்டும் ஏக பத்தினி விரதத்தைக் கைவிடுவதில்லையாம். ஆண்புறா, பெண்புறாவை விட்டுப் பிரிந்தால் ஊணுறக்கமின்றி உயிரை விட்டு விடுமாம்; பெண்புறா ஆண்புறாவை விட்டுப் பிரிந்தால் உயிர் போகும் வரை உண்ணாவிரதமிருக்குமாம் நாமும் அவ‌ற்றைப் பின்ப‌ற்றுவ‌து சாத்திய‌மா? அது எப்ப‌டிச் சாத்திய‌மாகும்! ர‌குவையும் ராதையும் விட்டு விட்டு நாம் எப்ப‌டி ஊணுற‌க்க‌மின்றி உயிரை விட‌ முடியும்?

அப்புற‌ம் அம்மா? ந‌ம‌க்குப்பின் அவ‌ள் க‌தி? அந்த‌ப் புறாக்க‌ளுக்குத்தான் பாச‌மென்றும் ப‌ந்த‌மென்றும் ஒன்றும் இல்லை. கொஞ்ச‌ம் ப‌ற‌க்கும் ச‌க்தி வ‌ந்த‌தும் அவை த‌ங்க‌ள் குஞ்சுக‌ளை விர‌ட்டி விடுகின்ற‌ன‌. ந‌ம்முடைய‌ குழ‌ந்தைக‌ளை நாம் அப்ப‌டி விர‌ட்டிவிட‌ முடியுமா? ஐயோ, எப்ப‌டி முடியும்?


முடியா விட்டால் என்ன‌? இர‌ண்டாந்த‌ர‌ம் க‌ல்யாண‌ம் செய்து கொள்ளாம‌லே நாம் வாழ‌ முடியாதா?

ஏன் முடியாது?

அம்மாவுக்கோ வ‌ய‌தாகிவிட்ட‌து; அவ‌ளால் எந்த‌ காரிய‌த்தையும் இனி க‌வ‌னிக்க‌ முடியாதுதான் அத‌னால் என்ன‌, ச‌மைய‌லுக்குத்தான் ச‌ங்க‌ர‌னை வைத்தாகி விட்ட‌தே! பார்ப்போம்:

நாள‌டைவில் என்னையும் அறியாம‌ல் ஏதோ ஒரு ம‌ன‌க்க‌வ‌லை ஏக்க‌ம்: ஏன் இப்ப‌டி?

இத்த‌னை நாளும் பார்ப்ப‌த‌ற்கு ல‌ட்ச‌ண‌மாயிருந்த‌ ச‌ங்க‌ர‌னை இப்போது பார்க்க‌வே பிடிக்க‌வில்லை. அவ‌ன் ச‌ம‌ய‌லையும் சாத‌ம் ப‌ரிமாறுவ‌தையும் ச‌கிக்க‌வே முடிவ‌தில்லை.

"காப்பி கொண்டு வ‌ர‌ட்டுமா?" சாத‌ம் போட‌ட்டுமா? என்று அவ‌ன் கேட்கும்போதெல்லாம் காதை அடைத்துக்கொள்ள‌ வேண்டும் போல் தோன்றுகிற‌து.விய‌ர்க்க‌ விறுவிறுக்க‌ அவ‌ன் எதிரில் வ‌ந்து நின்றால் என் உட‌ம்பே ப‌ற்றி எரிவ‌து போல் இருக்கிற‌து.

சாட்டைப் போல் த‌லைம‌யிரைப் பின்னிவிட்டுக் கொண்டு, த‌லை நிறைய‌ பூவை வைத்துக் கொண்டு, ஏதாவ‌து ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு கை வ‌ளைக‌ள் க‌ல‌க‌ல‌வென்று ச‌ப்திக்க‌, அப்ப‌டியும் இப்ப‌டியுமாக‌ 'அன்ன‌ ந‌டை' போட்டுக் கொண்டிருந்த‌ அந்த‌ அழ‌கு தெய்வ‌ம் எங்கே, இந்த‌ அவ‌ல‌ட்ச‌ண‌ம் எங்கே?

"காப்பியா? இதோ, கொண்டுவ‌ந்து விட்டேன்?"

"சாத‌மா? இதோ, போட்டு விட்டேன்!" என்று அவ‌ள் குயிலைப் போல‌க் கொஞ்சுவ‌து எங்கே? இவ‌ன் க‌ழுதை போல‌க் க‌த்துவ‌து எங்கே?

அவ‌ன் செய்ய‌வேண்டிய‌து வேலை; வாங்க‌வேண்டிய‌து கூலி இவ‌ற்றைத் த‌விர‌ அவ‌னுக்கும் என‌க்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்?

இப்ப‌டிப்ப‌ட்ட‌ வாழ்க்கையில் அன்புக்கு இட‌முண்டா? அன்புக்கு இட‌மில்லை என்றால் இந்த‌ வாழ்க்கை என்னத்திற்கு ? இந்த‌ உல‌க‌ம் தான் என்ன‌த்திற்கு?

இப்ப‌டியெல்லாம் என்ம‌ன‌ம் இப்பொழுது எண்ண‌மிடுகிற‌து; எண்ண‌மிட்டு ஏங்குகிற‌து.

வீட்டில் உள்ள‌வையெல்லாம் போட்ட‌து போட்ட‌ இட‌த்தில் கிட‌க்கின்ற‌ன‌. ஏற்ற‌ இட‌த்தில் எடுத்து வைக்க‌ப்ப‌ட‌வில்லை' வீடே வெறிச்சென்று கிட‌க்கிற‌து. இத்த‌னைக்கும் அவ‌ளைத் த‌விர‌ வீட்டில் எல்லாமே இருக்கின்ற‌ன‌; இருந்தும் என்ன‌? ஒன்றுமே இல்லாத‌து போல‌ல்லவா இருக்கிற‌து!

ந‌ல்ல‌ வேளையாக‌க் குழ‌ந்தைக‌ளைப் ப‌ராம‌ரிப்ப‌த‌ற்கு ம‌ட்டும் த‌ன் சிநேகிதி சீதாவை அவ‌ள் வைத்துவிட்டுப் போயிருந்தாள்.

எதிர் வீட்டில் குடியிருப்ப‌வ‌ள் அவ‌ள்; வாழ்க்கை இன்ன‌தென்று தெரியுமுன்பே வித‌வையாகி விட்டாள். அவ‌ளுக்குத் த‌க‌ப்ப‌னார் இல்லை. தாயார் இருந்தாள். இவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் ஜீவ‌னோபாய‌ம் அளித்து வ‌ந்த‌து ஒரே ஒரு இய‌ந்திர‌ம் தைய‌ல் மெஷின் உண‌ர்ச்சிய‌ற்ற‌து! ஆம். உண‌ர்ச்சியுள்ள‌ உற‌வின‌ர்க‌ள் ப‌ல‌ர் அவ‌ர்க‌ளுடைய‌ திக்க‌ற்ற‌ நிலையைப் பார்த்தும் பார்க்காத‌து போல் இருந்து விட்டார்க‌ள்! அந்த‌ சீதாதான் இப்போது ர‌குவுக்கும் ராதைக்கும் தாயார்!

குழ‌ந்தைக‌ள் இருவ‌ரும் த‌லைவாரிக் கொள்ள‌வேண்டுமா? அவ‌ளிட‌ந்தான் செல்வார்க‌ள். பொட்டிட்டுக்கொள்ள‌ வேண்டுமா? அவ‌ளிட‌ந்தான் செல்வார்க‌ள். ச‌ட்டைப் போட்டுக் கொள்ள‌ வேண்டுமா? அவ‌ளிட‌ந்தான் செல்வார்க‌ள்.

எந்த‌வித‌மான‌ பிர‌திப‌ல‌னையும் எதிர்பாராம‌ல் அவ‌ள் இத்த‌னை காரிய‌ங்க‌ளையும் செய்து வ‌ந்தாள்.

ஒரு நாள் மாலை, வேலையிலிருந்து வீட்டுக்கு வ‌ந்தேன். உள்ளே சீதாவின் பேச்சுக்குர‌ல் கேட்ட‌து, செவிம‌டுத்தேன்.

"நிமோனியாவாம்; மிக்ச‌ர்' கொடுத்தார்!" என்றாள் அவ‌ள்.

அவ்வ‌ள‌வுதான்; "யாருக்கு நிமோனியா" என்று உட‌னே கேட்டுவிட‌ என் ம‌ன‌ம் துடித்த‌து.

அதற்குள் "காலையில் பள்ளிக்கூடத்திற்கு போகும்போது நன்றாகத்தானே போனாள்?" அதற்குள் இப்படி வந்துவிட்டதே? என்று அங்கலாய்த்தாள் என் தாயார்.

"எல்லாம் சரியாய்ப் போய்விடும் மாமி!" என்று தேறுதல் சொன்னாள் சீதா.

நான் உள்ளே சென்றேன். ராதை கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாள். தொட்டுப் பார்த்தேன். நல்ல காய்ச்சல்.

"மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மருந்து கொடுங்கள். ஆகாரம் "ஆரோரூட்" கஞ்சியைத் தவிர வேறொன்றும் கொடுக்க வேண்டாம், என்று எச்சரித்து விட்டு, சீதா என்னைக் கண்டதும் 'விருட்'டென்று வெளியே போய்விட்டாள்.

"பகல் பன்னிரண்டு மணிக்கு பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது குழந்தைக்கு நல்ல ஜுரம். சீதா தான் டாக்டர் வீட்டிற்கு அவளை கூட்டிக்கொண்டு போனாள். எனக்கென்ன கண்ணா தெரிகிறது!" என்றாள் தாயார்.

அதற்குள் சங்கரன் கஞ்சியைக் காய்ச்சி எடுத்துக் கொண்டு வந்தான். அதை ஆற‌வைத்துக் குழந்தைக்கு குடிப்பாட்ட முயன்றேன். அவள் குடிக்கவில்லை. "அம்மா, அம்மா" என்று அலறினாள்.

"உனக்கு அம்மா இல்லேடி கண்ணு." என்று சொல்லிக் கொண்டே, கரை புரண்டு வந்த கண்ணீரைப் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டாள் தாயார்.

"ஏன் இல்லை? இப்பத்தான் என்னை டாக்டர் வீட்டுக்குக் கூட்டி கொண்டு போனாளே அம்மா!" என்றாள் குழந்தை.

"அந்த அம்மா வாடி? இதோ அழைச்சிக்கிட்டு வறேன்!" என்று தட்டு தடுமாறிச் சென்று, எதிர் வீட்டு சீதாவை அழைத்து வந்தாள் அம்மா.

அவள் வந்து குடிப்பாட்டியபோதுதான் குழந்தை கஞ்சி குடித்தது!

சிறிதுநேரம் இருந்து, ராதை கண்ணயர்ந்த பிறகு சீதா போய்விட்டாள்.

அடுத்த‌ப‌டி ம‌ருந்து கொடுக்கும் வேளை வ‌ந்த‌து. நான் கொடுக்க‌ முய‌ன்றேன். குழந்தை குடிக்க‌வில்லை. அத‌ற்கும் சீதாதான் வ‌ர‌வேண்டியிருந்த‌து.

"ஐயோ, அவ‌ளுக்கு வேலை த‌லைக்கு மேலிருக்குமே" என்று அம்மா வ‌ருந்தினாள்.

" அத‌ற்கென்ன‌ மாமி, ப‌ர‌வாயில்லை!" என்றாள் அவ‌ள். ராதையின் ஜுர‌ம் நீங்குவ‌த‌ற்கு மூன்று வார‌ங்க‌ளாயின‌. அந்த‌ மூன்று வார‌ங்க‌ளும் சீதா, ராதையுட‌னே இருந்தாள்.

இந்த‌ச் ச‌ம‌ய‌த்தில் தான் என் ம‌ன‌த்தில் ஒரு ச‌ப‌ல‌ம் த‌ட்டிற்று. ஏற்கென‌வே ச‌மூக‌ச் சீர்திருத்த‌த்தில் ப‌றுக்கொண்டிருந்த‌ என் ம‌ன‌ம் சீதாவை நாடிய‌து ‍ அவ‌ள் ச‌ம்ம‌திப்பாளா? அவ‌ள் ச‌ம்ம‌தித்தாலும் அவ‌ளுடைய‌ தாயார் ச‌ம்ம‌திப்பாளா?

யார் ச‌ம்ம‌திக்காவிட்டால் என்ன‌? என்னை பார்த்து அவ‌ளும், அவ‌ளைப் பார்த்து நானும் ச‌ம்ம‌தித்தால் போதாதா? ‍ இந்த‌ அநித்தியமான‌ உல‌க‌த்தில் பிற‌ருடைய‌ விருப்பும், வெறுப்பும் யாருக்கு என்ன‌ வேண்டிக்கிட‌க்கிற‌து?

ஒரு நாள் துணிந்து இந்த‌ விஷ‌ய‌த்தை என் தாயாரிட‌ம் வெளியிட்டேன்.

அவ‌ள் "சிவ‌ சிவா!" என்று காதை பொத்திகொண்டு, ரொம்ப‌ ந‌ன்றாய்த்தான் இருக்கிற‌து; இந்த‌ மாதிரி இன்னொரு த‌ர‌ம் சொல்லாதே! என்று சொல்லி விட்டாள்.

அன்று மாலை வீட்டிற்குள் நுழையும்போது, சீதாவுக்கும் தாயாருக்கும் இடையே பின்வ‌ரும் ச‌ம்பாஷ‌ணை ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து.

"என்ன‌ இருந்தாலும் பெண்பிள்ளை இல்லாத‌ வீடு ஒரு வீடு ஆகுமா?"‍ இது சீதாவின் குர‌ல்.

"நானும் அதைத்தான் சொல்லுகிறேன்; கேட்டால்தானே?" இது என் அம்மா."

"ஏனாம்? இவ‌ரைவிட‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள், ஏழெட்டுப் பிள்ளை பெற்ற‌வ‌ர்க‌ள் எல்லாம் இர‌ண்டாந்தார‌மாக‌க் க‌ல்யாண‌ம் செய்துக் கொள்ள‌வில்லையா?"

"இவ‌ன் என்ன‌மோ ச‌மூக‌த்தை சீர்திருத்தி விட‌ப் போகிறானாம்; வித‌வைக‌ளின் துய‌ர‌த்தைத் தீர்த்துவிட‌ப் போகிறானாம். அத‌ற்காக‌ இர‌ண்டாந்தார‌மாக‌க் க‌ல்யாண‌ம் செய்து கொள்வ‌தென்றால் இவ‌ன் எவ‌ளாவ‌து ஒரு வித‌வையைத்தான் க‌ல்யாண‌ம் செய்து கொள்வானாம் இன்னும் என்ன‌வெல்லாமோ சொல்கிறான்; அவற்றையெல்லாம் வெளியில் சொல்ல‌வே என‌க்கு வெட்க‌மாய் இருக்கிற‌து!"

"எந்த‌ வித‌வை இவ‌ரை க‌ல்யாண‌ம் செய்து கொள்வ‌த‌ற்குக் காத்துக் கொண்டிருக்கிறாளாம்? இந்த‌ப் புருஷ‌ர்க‌ள் தான் 'வித‌வா விவாக‌ம்'என்று எப்போது பார்த்தாலும் அடித்துக் கொள்கிறார்க‌ள். எந்த‌ப் பெண்ணாவ‌து அப்ப‌டிச் சொல்கிறாளா? ‍ பைத்திய‌ந்தான்."

இதை கேட்ட‌மாத்திர‌த்தில் என் ம‌ன‌க்கோட்டை இடிந்து விழுந்த‌து. எண்ண‌ங்க‌ள் மூலைக்கு ஒன்றாக‌ சித‌றின‌.

ஆனாலும் ஆசை அத்துட‌ன் என்னை விட்டுவிட‌வில்லை. எத‌ற்கும் ஒரு க‌டித‌ம் எழுதி கேட்டுவிடுவ‌தென்று தீர்மானித்தேன். அந்த‌க் க‌டித‌த்தின் முத‌லில் வித‌வா விவாக‌த்தின் அவ‌சிய‌த்தை வ‌ற்புறுத்தி, ந‌டுவே என் ஆவ‌லை வெளியிட்டு, க‌டைசியில் க‌டித‌ம் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் த‌ய‌வு செய்து ப‌ர‌ம‌ ர‌க‌சியமாகப் ப‌தில் எழுதுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன்.

மேற்ப‌டி க‌டித‌த்திற்கு வ‌ந்த‌ ப‌தில் இதுதான்:

வ‌ண‌க்க‌ம்

ம‌றுமண‌ம் செய்துக் கொண்டால் வித‌வையின் துய‌ர‌ம் தீர்ந்து விடும் என்று சில‌ர் சொல்வதை நீங்க‌ள் ந‌ம்புகிறீர்க‌ளா? ‍ என்னால் அதை ந‌ம்ப‌ முடிய‌வில்லை. அத‌ற்காக‌ வ‌ழிவ‌ழியாக‌ வாழ்ந்து வ‌ரும் காத‌லை கொன்றுவிட‌வும் நான் விரும்ப‌வில்லை.

என‌வே என்னை பொறுத்த‌வ‌ரை, நான் பூசிக் கொண்ட‌ ம‌ஞ்ச‌ளும், வைத்துக்கொண்ட‌ குங்கும‌த் தில‌க‌மும், சூடிய‌ ம‌ல‌ரும், அணிந்த‌ வ‌ளைய‌லும் 'அவ‌'ருக்காக‌த்தான்.

வேறொருவ‌ருக்காக‌ அவ‌ற்றை மீண்டும் அணிந்து கொள்வ‌தென்ப‌து இந்த‌ ஜென்ம‌த்தில் முடியாத‌ காரிய‌ம்.

ம‌ன்னிக்க‌வும்.
சீதா.

மேற்ப‌டி க‌டித‌த்தை ப‌டித்து முடித்த‌தும் பெண்க‌ள் ச‌ப‌ல‌ச் சித்த‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் என்று சொன்ன‌ மேதாவிக‌ளின் மேதையை எண்ணி நான் சிரித்தேன், வைர‌ நெஞ்சுட‌ன் அவ‌ள் வாழும் முறைமையைப் ப‌ற்றி எண்ணியெண்ணி விய‌ந்தேன். அப்போது காற்றிலே மித‌ந்து வ‌ந்த‌ கீத‌மொன்று.

"க‌ற்பு நிலையென்று சொல்ல‌ வ‌ந்தார் - இரு

க‌ட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்"

என்று இசைத்து, ம‌றும‌ண‌ம் அல்ல‌ திருமண‌ம், ஒரு ம‌ன‌மே திரும‌ண‌ம்! என்ற முடிவுக்கு என்னை இழுத்துச் சென்ற‌து.

பலூன் பைத்தியம் - ந.பிச்சமூர்த்தி

இன்றைய தினம் குழந்தைகள் பலூன் வாங்கினார்கள். அவர்களுக்கும் அவர்கள் தாயாருக்கும் சண்டை. காசு தரமாட்டேன் என்ற தாயார் கட்சி. குழந்தைகள் அழுகை எதிர்க்கட்சி.

பலூன் வாங்கும் சமயம் ஒவ்வொன்றிலும் இந்தத் தகராறுதான். இதுதான் கடைசி தடவை என்ற எச்சரிக்கையுடன் காசும் கிடைத்துவிடும். குழந்தைகள் கைக்குப் பலூனும் வந்துவிடும். இந்தத் தகராறு விஷயம் பலூனுக்கு எப்படித் தெரியும்! சில நிமிஷங்களுக்குள் பட்டென்று வெடித்துவிடும். ஒரு வேளை தெரிந்துதான் குழந்தைகளைப் போல ரோஸமில்லாமல் இருக்கிறதோ என்னமோ! இந்த மாதிரி எத்தனை கடைசித் தடவையாக பலூன் வாங்கியிருக்கிறார்கள் தெரியுமா? இன்றும் கடைசித் தடவையாகத் தான் பலூன் வாங்கியிருக்கிறார்கள். குழந்தைகள் திரும்பத் திரும்ப பலூன் வாங்க ஆசைப்படுவது எனக்கு பெரிய வியப்பாய் இருக்கிறது. பலூன் இரண்டு நிமிஷத்திற்குள் வெடித்து விடும் என்று குழந்தைகளுக்கு நன்றாய்த் தெரியும். தாயார் மறு பலூன் வாங்க காசு தர மறுப்பாள் என்றும் தெரியும்; பின் ஏன் கடைசி தடவையாகத் தினம் பலூன் வாங்குவதில் அவ்வளவு மோகம் கொள்கிறார்கள்...

பலூனுடைய வர்ணம் ஒரு வேளை அவர்களைக் கவர்வதாய் இருக்குமோ? இருக்க முடியாது. ஏனென்றால் கண்ட இடங்களிலெல்லாம் புஷ்பங்கள் காணாத வண்ணக் கவர்ச்சியா பலூன்களில் காண்கிறது? அவை வேண்டாம். மேகங்களும் அந்தி, சந்தியில் காணும் வானமும் இல்லையா? - வண்ணக் களஞ்சியமாக? ஆனால் மேகத்தையோ அந்த வானத்தையோ அங்கையில் அடக்கிவிட முடியாது. புஷ்பத்தைக் கையில் எடுக்கலாம். எனில் வாடிவிடும். கசங்கிவிடும். வண்ணத்தை திரும்பி ஏற்றிவிட முடியுமோ? முடியாது.

ஆம்! இதில்தான் பலூன் மோகத்தின் மர்மம் இருக்க வேண்டும். வித்தில்லாக் கத்திரிக்காயைப் போல் வாடி வதங்கிய பலூன் சிவப்புச் சந்திரனும் பச்சைச் சூரியனுமாக மாறிவிடுகிறதல்லவா - குழந்தைகள் கையில் ஏறியவுடன்? சிருஷ்டி சக்தி என்று ஒன்றிருக்கிறது. அதுவும் தங்களுக்குள் இருக்கிறது என்ற அறிவை இந்த விந்தை குழந்தைகளுக்குப் புகட்டுகிறது. நமக்கிருக்கும் சக்தியை வெளிப்படுத்துவதில்தான் இன்பம் உண்டாகிறது. இந்த இன்பத்தை நீடிக்கச் செய்ய வேண்டுமென்ற வெறிதான் பலூன் உடைந்துவிடுவதைக்கூட லஷ்யம் செய்வதில்லை! கடைசித் தடவை என்று தாயார் சொல்வதைக் கூட லட்சியம் செய்வதில்லை.

பலூன் உடைந்தால்தான் என்ன? துண்டுகளைக் கொண்டு குழந்தைகள் "மூட்டை" செய்துவிடுவார்கள், சுண்டைக்காய் அளவுக்கு சூரியனையும், சந்திரனையும் போல் செய்து நெற்றியில் சொடுக்கி இன்புறுவார்கள்.

இந்த சிருஷ்டி சக்தியே விசித்திரமானது; உலகப் போக்குக்கே ஒத்து வராதது. உடமை என்ற நினைப்பையும் ஆசாரம் என்ற கோட்பாட்டையும் சண்டைக்கிழுப்பதே இதன் தன்மை! அதன் காரணமாகத்தான் காசு செலவழிகிறதே என்று தாயார் நொந்து கொள்கிறாள். குழந்தைகள் எச்சில் செய்கிறதே என்று அடுத்த வீட்டுக்காரர் ஏசுகிறார்.

இன்னொரு உணர்ச்சி கூட காரணமாக இருக்கலாம். தரையில் நடந்தாலும் பறக்க வேண்டும் என்ற ஆசை இயல்பாக முளைத்து விடுகிறது. நம்மால் முடியாததை நமக்கு அடங்கிய பொருளைக் கொண்டு செய்து விட்டால் அந்தப் பெருமை நம்மைத்தானே சாரவேண்டும். நம்மால் பறக்க முடியாது. ஆனால் நம்மால் எதையாவது பறக்கவிட முடியும் பொழுது எவ்வளவு ஆச்சர்யமாக இருக்கிறது. காற்றாடி, தாத்தாபூச்சி, பலூன் - இவை குழந்தைகளின் சாதனம். பெரியவர்களுக்குப் பறக்கும் சாதனம்-

விண்வெளி விமானமில்லையா?

BACK

தேங்காய்த் துண்டுகள் - டாக்டர் மு.வரதராசனார்

"மாலை நேரத்தில் குடித்துவிட்டுச் சாலை ஓரத்தில் விழுந்து கிடப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இது என்ன கொடுமை! பகல் ஒரு மணிக்கு நல்ல வெயிலில் தார் வெந்து உருகும் வெப்பத்தில் இந்தச் சாலை ஓரத்தில் இப்படி ஒருவன் விழுந்து கிடக்கிறானே" என்று எண்ணிக் கொண்டே அந்த மாரியம்மன் கோயிலை அணுகி நடந்து போய்க் கொண்டிருந்தேன். வெளியூர்களில் கள் சாராயக் கடைகளை மூடி விட்ட பிறகு, அங்கே உள்ள குடிகாரர் சிலர் அடிக்கடி சென்னைக்குப் புறப்பட்டு வந்து, ஏதோ வேலை இருப்பது போல் நகரத்தைச் சுற்றித் திரிந்து, ஆசை தீரக் குடித்து மயங்கியிருந்து, பிறகு ஊருக்குத் திரும்புவது எனக்கு நன்றாகத் தெரியும். எங்கள் ஊரில் இருந்தே பலர் அப்படிப் புறப்பட்டு வந்து சென்னையில் குடித்துவிட்டுப் போவது தெரியும். ஒருமுறை வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டு, நகரத்தில் பல வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். உணவுக்கு ஒரு வேளையாவது வருமாறு அழைத்தாலும் வருவதில்லை. அவர்களுக்கு விருப்பமான விருந்து கள்ளுக் கடைகளிலும் சாராயக் கடைகளிலும் கிடைக்கும்போது, வெந்த அரிசிச்சோற்றைத் தேடியா வந்து காத்திருப்பார்கள்? நாட்டுப் புறத்தில் மூலைமுடுக்குகளில் காய்ச்சும் திருட்டுச் சாராயம் போதாது என்று இந்தக் கடைச் சரக்கை நாடி வருகிறவர்கள், அதையும் விட்டு நல்ல அரிசிச் சோற்றையும் பொருட்படுத்தாமல் இந்தப் பங்கீட்டு அரிசிச் சோற்றை... ஈரத்தோடு நெடுநாள் இருந்து கெட்டு அழுகிப் பல நிறம் பெற்று விளங்கும் அரிசியால் சமைத்த சோற்றையா நாடி வருவார்கள் என்று நானும் வற்புறுத்தாமல் விட்டுவிடுவேன். ஆனால் மின்சாரவண்டி வரும் வேளையில் தண்டவாளப் பாலத்தின்மேல் நடந்து வண்டியில் அகப்பட்டுக் கொண்டு மடிந்த இரண்டு பிணங்களை ஒரு நாள் காண நேர்ந்தது. அவர்களுக்கு முன்னே நடந்துவந்த சிலர் அவர்களைக் குடிகாரர் என்று அறிந்து அங்கே நடந்து போக வேண்டா என்று சொல்லித் தடுத்தும் கேட்கவில்லையாம். அந்தக் குடிவெறியில் தள்ளாடி நடந்து மின்சார வண்டிக்குப் பலியானார்களே என்று அன்று என் நெஞ்சம் மிக வருந்தியபோது, போக்கு வரவு மிகுந்த சென்னையில்தான் கள் சாராயக் கடைகளை முதலில் மூட வேண்டும் என்று உணர்ந்தேன்.

இந்த மாரியம்மன் கோயிலருகே சாலை ஓரத்தில் பகல் ஒரு மணி வெயிலில் படுத்துச் சுருண்டிருந்த உடம்பைக் கண்ட போதும் இந்த எண்ணமே உண்டானது. நடுப்பகலிலே இப்படிக் குடிக்கிறவன் பொழுது போனால் எவ்வளவு குடிப்பான் என்று சிறிது வெறுப்போடு எண்ணிக்கொண்டே நடந்தேன். அவனைப் பார்த்துக் கொண்டே இளைஞர் இருவர் நின்று கொண்டிருந்தார்கள். என்ன நிலைமை என்று தான் பார்க்கலாமே என்று நானும் அவர்கள் இருந்த பக்கமாக நடந்து சென்றேன்.

"குடிகாரனா?" என்று அவர்களைப் பார்த்துக் கேட்டேன்.

"இல்லைங்க" என்றார் ஒருவர்.

"வேறு என்ன? காக்கை வலிப்பா?" என்றேன்.

"அதுவும் இல்லைங்க. காக்கை வலிப்பாக இருந்தால் இப்படி மூச்சுப் பேச்சு இல்லாமல் சும்மா விழுந்து கிடப்பானா?" என்றார் மற்றொருவர்.



அவனுக்கு வயது இருபது இருக்கலாம். நல்ல கட்டான உடல் இருந்தது. ஆனால் அழுக்கேறிய ஆடையும் வாடிய முகமும் கண்டபோது, வேறு நோயாக இருக்க முடியுமா என்று எண்ணிப் பார்த்தேன். தீய வழியில் நடந்து பெற்ற விபசார நோயாக (மேகம் முதலிய நோயாக) இருந்து உயிருக்கே உலை வைக்கும் அளவுக்கு முற்றியிருக்கலாம் என்றும், இந்தக் காலத்து இளைஞர்கள் மிகவும் கெட்டுப் போனவர்கள் என்றும் எண்ணினேன். "சரி, கர்ம வினை, நாம் என்ன செய்ய முடியும்?" என்று ஒருவகை வெறுப்போடு நடக்கத் தொடங்கினேன்.

அதற்குள் யாரோ தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளிக்கவே, அவன் "வேலா, வேலா" என்று ஆழ்ந்த குரலில் இரண்டு முறை சொன்னான். இதைக் கேட்டதும் காலெடுத்துச் சில அடி தொலைவு நடந்து சென்ற நான் அந்த இடத்திலேயே நின்றேன். அப்போது அந்த இடத்தில் என்னைப் போல் வழிப்போக்கர் ஒருவர் எட்டிப்பார்த்து, "இது என்ன அய்யா! பாசாங்கு, வெறும் பாசாங்கு; வாய் திறந்து வேலா வேலா என்று கடவுள் பெயரைச் சொல்கிறானே! நான் இந்த மாதிரிப் பாசாங்குப் பிச்சைக்காரர் எவ்வளவோ பேரைப் பார்த்திருக்கிறேன். நேற்றுக் குழந்தை பெற்றுவிட்டு, இன்றைக்குப் பத்துமாதக் கர்ப்பவதி போல் பாசாங்கு செய்து பிச்சை கேட்பதைப் பார்த்ததில்லையா?" என்றார். உடனே அங்கிருந்த மற்றொருவர், "இதுதான் அய்யா பட்டணம்! போகிறவர்கள் சும்மா போகக் கூடாதா? எட்டிப் பார்த்தவுடன் பாசாங்கு தெரிந்துவிடுமா? அவரவர்கள் வயிற்றுக்கு இல்லாமல் பட்டினியால் செத்தால் தெரியும்" என்றார்.

'பட்டினி' என்ற சொல்லைக் கேட்டவுடன் எனக்கு இரக்கம் தோன்றியது. ஏதாவது வாங்கித் தரச் சொல்லலாம் என்று சட்டைப் பையில் கை இட்டுக் காசு எடுத்தேன். அதற்குள் ஒருவர் - கல்லூரி மாணவன் என்று அப்பால் தெரிந்து கொண்டேன் - ஒரு கையில் காப்பியும் மற்றொரு கையில் இரண்டு வாழைப்பழமும் கொண்டு வருவதைக் கண்டேன். என்ன நடக்கிறது, பொறுத்துத்தான் பார்ப்போம் என்று திரும்பி வந்து எட்டிப் பார்த்தேன். அதற்குள் அவனைச் சுற்றிப் பத்துப் பேருக்கு மேல் நின்று கொண்டிருந்தார்கள்.

காப்பி குடிக்கச் சொல்வதற்கு அவனை அசைத்துப் பார்த்தார்கள்; கூப்பிட்டுப் பார்த்தார்கள். ஒவ்வொரு வேளையில் மெல்லிய குரலில் ஏதோ ஒலி வந்தது. ஆனால் கண் திறக்கவில்லை. தண்ணீரும் கையுமாக நின்ற ஓர் ஆள் மறுபடியும் அவன் முகத்தில் தண்ணீரைத் தெளித்து வாயைத் திறந்து கொஞ்சம் தண்ணீர் உள்ளே விட்டார். மெல்லக் கண் திறந்து பார்க்கும் காட்சியைக் கண்டோ ம். உடனே ஒரு மாணவர் எழுப்பி உட்கார வைத்தார். இன்னொருவர் கையில் இருந்த காப்பியை நீட்டினார். அந்தக் காப்பியைக் கண்டதும், மயக்கத்தில் இருந்த அவனுடைய கைகள் ஒரே ஆவலாக அந்தக் காப்பிக் குவளையை இழுத்து வாயில் வைத்துக் கொண்டன. "சூடு, சூடு, பார்த்து, பார்த்து" என்று எதிரில் இருந்தவர் சொல்வதற்குள் காப்பி முழுவதும் எப்படியோ வாயினுள் சென்றுவிட்டது. அப்போது அவனுடைய கண்களில் புலப்பட்ட ஆவலையும் வேட்கையையும் நான் எப்போதுமே கண்டதில்லை. அந்தக் கண்கள் காப்பியையும் குவளையையும் சேர்த்து வாய்க்கும் கொடுக்காமல், தாங்களே விழுங்கிவிடுவன போல் அந்தப் பார்வை இருந்தது. உடனே அவனுடயை முகத்தில் தோன்றிய மாறுதல்தான் வியக்கத் தகுந்ததாக இருந்தது. இதுவரையில் அந்த முகத்தில் வாட்டம் இருந்தாலும் துன்பம் இல்லை; களைப்பு இருந்தாலும், பசிக்கொடுமை இல்லை. இப்போதோ பல்லை இளித்துக் கொண்டு, தலையைத் தொங்க விட்டுக் கொண்டு, சாய்ந்து சாய்ந்து ஏதோ சொன்னான், யார் காதிலும் அந்தச் சொற்கள் கேட்கவில்லை. தரையில் சாய்ந்துவிட விரும்பினான். வேண்டா என்று தடுத்து ஒருவர் மாரியம்மன் கோவில் சுவர் பக்கமாக நகரச் சொல்லி அந்தச் சுவரில் சாயச் செய்தார். அதற்குள் இன்னொருவர் மற்றொரு குவளைக் காப்பியும் ரொட்டித் துண்டும் வாங்கி வந்து நீட்டினார். அவனுடைய பசிக் கொடுமையால் உடனே அவைகளும் மறைந்தன. வாழைப்பழங்களும் உடனே மறைந்தன. 'அப்பாடா' என்று அயர்ந்து சாய்ந்து, சுற்றிப் பார்த்து, மருண்டு கண்ணீர் விட்டான். எல்லோருக்கும் இரக்கம் மிகுந்து விட்டது.



"எந்த ஊர் அப்பா?" என்றார் ஒருவர்.

"மதுரை" என்றான் சிறிது தெளிவான குரலில்.

"எங்கே வந்தாய்?"

"பிழைக்கத்தான் அய்யா! என் கதி...!"

"போகட்டும்; என்ன உடம்புக்கு?"

"ஐந்து நாளாச்சு அய்யா" என்று சொல்லி வயிற்றை அடித்துக் கொண்டு கண்ணீர் கலங்கினான்.

உடனே கூட்டம் மெல்ல மெல்லக் கலையத் தொடங்கியது. நான்கு பேர் நின்றார்கள்.

"எழுந்து நடக்க முடியுமா?" என்று கேட்டேன்.

"இன்னும் கொஞ்ச நேரம் பொறுங்கள், சாமி" என்று கெஞ்சும் குரலில் சொல்லி முகத்து வியர்வையைத் துடைத்து, கால்களை நீட்டிக் கொண்டும் மடக்கிக் கொண்டும் இருந்தான்.

பிறகு அங்கிருந்த சிலரும் மெல்ல நகர்ந்தார்கள். காப்பி கொடுத்த மாணவர் மட்டும் அங்கே நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த கல்லூரி மணி அடித்தது. அந்த மணி ஒலியைக் கேட்டதும், அவரும் திரும்பித் திரும்பிப் பார்த்தார். இறுதியில் அவரும் புறப்பட்டுப் போகவே, நான் மட்டும் அங்கே நின்றேன். அந்த இளைஞனுடைய உண்மையான நிலையைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஏதோ ஒருவகை வேட்கை என் மனதிலிருந்து தூண்டியது. அதனால்தான் நான் புறப்பட முடியாமல் அங்கே நின்றுவிட்டேன்.

"எழ முடியுமா?" என்று மறுபடியும் அவனைக் கேட்டேன்.

"உடம்பு அசதியாக இருக்கிறது, சாமி" என்றான்.

"வீடு வரைக்கும் வந்தால் வயிறாரச் சாப்பிட்டு வரலாம்" என்று அழைத்தேன்.

"வீடு எங்கே? சொல்லுங்கள். கொஞ்சம் களைப்புத் தீர்ந்ததும் நானே வருவேன்" என்றான்.

"இவ்வளவு களைப்பு ஏற்பட்ட பிறகு நீ ஏன் இந்த வழியில் நடந்து வர வேண்டும்? அதுவும் நடுப்பகல் வெயிலில் இப்படித் தார்ச் சாலையில் நடந்து வரலாமா?" என்றேன்.

"இன்னும் கொஞ்சம் தூரம் தானே? இந்த மாரியம்மன் கோவிலுக்கு எப்படியாவது போய்ச் சேர்ந்துவிடவேண்டும் என்று தள்ளாடிக் கொண்டே வந்தேனுங்க!" என்று சொல்லிவிட்டு அமைதி ஆனான். பிறகு கண்ணீர் கலங்கித் தன் அழுக்கு ஆடைகளால் கண்களைத் துடைத்துக் கொண்டான். ஏதோ உண்மைக் காரணம் இருக்க வேண்டும் என்று நானும் பொறுத்திருந்தேன்.

ஒரு பெருமூச்சு விட்டு, "நான் பிழைக்க மாட்டேனுங்க" என்று அழுதான். என்னால் ஆன வரையில் தேறுதல் கூறினேன். "சொந்த ஊரில் சாகாமல் இப்படிப் பட்டணத்தில் சாக வேண்டுமா?" என்று விம்மி விம்மிச் சொன்னான். "அதனால் தான் இந்தக் கோயிலுக்கு வந்து உயிரை விடலாம் என்று வந்தேன்" என்று கலங்கிச் சொன்னான்.

"நீ தான் திக்கற்றவன் ஆச்சே. உனக்கு எங்கே இறந்தால் என்ன? இந்தக் கோயில் மேல் பக்தி என்ன?" என்று மெல்லக் கேட்டேன்.

"பக்தி இல்லை சாமி. என்னோடு வந்தவன் - எங்கள் ஊரான் - இங்கே அடிக்கடி வந்து தேங்காய் பழம் வைத்துப் பூசை செய்து விட்டுப் போவது வழக்கம். அவன் வருவான், சாகும்போது அவனாவது பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்வான் என்று தான் இங்கு வந்தேன்" என்றான்.

இதைக் கேட்டதும், இன்னும் பெரிய கதைகள் இருக்கும் என்று நம்பிப் பேச்சை நிறுத்தி, எழுந்து வீட்டுக்கு வருமாறு சொன்னேன். மெல்ல எழுந்தான். கால்கள் பின்னிக் கொள்ளும் நிலையில் தளர்ந்து அடி எடுத்து வைத்து நடந்து வந்தான். வழியில் உள்ள ஒரு பாலத்தின் சுவரின் மேலும், ஒரு வீட்டுத் திண்ணையின் மேலும் இரு முறை உட்கார்ந்து மூச்சுவிட்டு எப்படியோ வீடு வந்து சேர்ந்தான். சாப்பிட்டு முடியும் வரையில் ஒன்றும் கேட்பதில்லை என்று இருந்தேன். உண்ட பிறகு அவன் முகத்தில் களைப்பும் தெளிவும் கலந்து விளங்கின. திண்ணையின் கீழே மெல்லச் சாய்ந்தான். "சாமி! உங்களுக்கு எவ்வளவோ புண்ணியம்! கொஞ்சநேரம் இங்கே படுத்திருந்துவிட்டுப் போய் விடுவேன்" என்றான். இதுதான் வாய்ப்பு என்று நானும் என் ஐயம் தீரக் கேட்கத் தொடங்கினேன்.

"உங்கள் ஊரான் கோவிலுக்கு வருவதாகச் சொன்னாயே. அவனுக்கு என்ன வேலை? அவன் நாள் தோறும் கோயிலுக்கு வருகிறானா?" என்று பல கேள்விகள் கேட்டேன்.



"அவன் எப்படியாவது இரவு படுப்பதற்கு முன் ஒவ்வொரு நாளும் இந்தக் கோயிலுக்கு வராமல் போவதில்லை. ஒருவேளை தவறிவிட்டாலும், அவன் இருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் உள்ள எந்தக் கோயிலுக்காவது போய்க் கும்பிட்டுவிட்டுப் படுத்துக் கொள்வான். அப்போதும் இந்த கோயில் மேல் தான் நினைவு இருக்கும்" என்று கேட்டதற்கெல்லாம் விடை கூறினான்.

இவ்வளவெல்லாம் சொல்லியும் அவனுடைய தொழிலையும் பெயரையும் சொல்லாமல் மறைத்து வந்தான். அதனால் அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் எனக்கு மிகுதியாயிற்று. வற்புறுத்திக் கேட்டதன் பிறகு, தன்னைப் போலவே கூலி வேலை செய்து பிழைப்பவன் என்றும், ஆனால் தன்னைப் போல் காசு கிடைக்காமல் கூலி வேலை கிடைக்காமல் உணவு கிடைக்காமல் திண்டாடுவதே இல்லை என்றும், அவன் பெயர் வேலன் என்றும் தெரிவித்தான். பெயர் வேலன் என்று அறிந்ததும், மயங்கி விழுந்து கிடந்த போது "வேலா வேலா" என்று அவன் வாய் பிதற்றியது நினைவிற்கு வந்தது. அவனுடைய நண்பனிடத்தில் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தால், உணர்விழந்த காலத்திலும் அவன் பெயரைச் சொல்லி குமுற முடியும் என்றும், அப்படிப்பட்ட உண்மை நண்பன் நாள் தவறாமல் பூசை செய்யும் நல்ல நிலைமையில் இருக்கும்போது இவன் மட்டும் ஏன் வாட வேண்டும் என்றும் நான் வியந்து அமைதியானேன். அதற்குள் அந்த இளைஞனை உறக்கம் ஆட்கொள்ள வந்ததை உணர்ந்தேன். சிறிது நேரத்தில் குறட்டை விட்டு உறங்கும் நிலைமை அடைந்தான்.

நான் எழுந்துபோய் என் கடமைகளை முடித்துக் கொண்டு திரும்பி வந்து அந்தத் திண்ணைமேல் சமக்காளம் விரித்துப் படுத்துக்கொண்டு, அவனைப் பற்றியும் அந்த வேலனைப் பற்றியும் வேலன் தொழில் எதுவாக இருக்கும் என்பதைப் பற்றியும் எவ்வளவோ எண்ணிப் பார்த்தேன். உண்மை அறிய முடியாமல் மயங்கிக் கொண்டிருந்தேன். எப்படியாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று துணிந்தேன். சிறிது நேரம் கழிந்தது.

திடீரென்று அவன் எழுந்து உட்கார்ந்து, "நீங்கள் இல்லாவிட்டால், நான் இன்றைக்குச் செத்தே போயிருப்பேன். என்னோடு வந்தவன் முனிசாமி என்று ஒருவன் அப்படித்தான் பட்டணத்து மண்ணுக்கு பலியானான்" என்று பக்கத்தில் இருந்த ஒரு கல்லையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். எழுந்த ஐயங்கள் தீர்வதற்கு முன்னே இன்னொரு முனிசாமி கதையும் புகுந்து விட்டதே என்று நினைத்து "வேலனுக்குப் பணமும் சாப்பாடும் கிடைத்தபோது இந்த முனிசாமி மட்டும் ஏன் பட்டினியால் சாக வேண்டும்?" என்று கேட்டேன்.

"வேலன் தைரியம் எங்களுக்கு வராது. வேலன் பள்ளிக் கூடத்திலும் சில மாதம் படித்திருக்கிறான். நான் படிக்கவே இல்லை. முனிசாமி மூன்றாவது படித்து நின்று விட்டான். தவிர, வேலன் செய்வதெல்லாம் முனிசாமிக்குப் பிடிப்பதில்லை. அது நல்லது அல்ல. பாவம் என்று முனிசாமி அடிக்கடி சொல்லுவான். அதனால் வேலனுக்குக் கோபம். அவன் முனிசாமிக்கு உதவி செய்வதே இல்லை. எனக்குக் கொடுக்கும் பணத்தில் கொஞ்சம் எடுத்து வேலனுக்குத் தெரியாமல் முனிசாமிக்குக் கொடுப்பேன். அவன் அதையும் வாங்க மாட்டான். வேலன் கொடுத்த காசு பாவக் காசு, அது எனக்கு வேண்டா, அதைவிட உயிரை விடலாம் என்று பிடிவாதமாய் வாங்க மறுத்து விடுவான். அதனால் பல நாள் பட்டினியிருக்க வேண்டி ஏற்பட்டது. ஒரு நாள் ரயில் வரும்போது தலை கொடுத்து விட்டான். அதுவும் எனக்குத் தெரியாது. வேலன் தான் அந்த பிணத்தைப் பார்த்ததாக இரண்டு நாள் கழித்துச் சொன்னான். எனக்காவது அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை. நான் செத்தால் அழுவாரும் இல்லை. அந்த முனிசாமிக்கு அம்மா இல்லா விட்டாலும், அப்பா இருக்கிறார். அவர் ஏழை. இருந்தாலும் கேள்விப்பட்டால் என்ன பாடுபடுவாரோ" என்று சொல்லிப் பல பல என்று கண்ணீர் விட்டான்.

இதுதான் நல்ல சமயம் என்று, நான் தேறுதல் சொல்வது போல், "நீ அவசரப்பட்டு பைத்தியக்காரனைப் போல் உயிரைப் போக்கிக் கொள்ளாதே. என்னால் ஆன உதவி செய்வேன். கடும்பசியாக இருக்கும்போதெல்லாம் இங்கே வந்து போ" என்று சொன்னேன். வேலன் தொழில் என்ன என்று உண்மையை மறைக்காமல் சொல்லும்படி பலமுறை கேட்டேன். யாரிடமும் வெளிப்படுத்தமாட்டேன் என்றும், தீமை ஒன்றும் நேராமல் பார்த்துக் கொள்வேன் என்றும் உறுதி கூறிய பிறகே அதைப்பற்றி வாய் திறந்தான். அப்போதும், நீண்ட முகவுரைக்குப் பிறகே சொல்லத் தொடங்கினான்.

BACK

முதன் முதலாய் அம்மாவுக்கு... - வைரமுத்து

ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரு(மை)ம
ஒத்தவரி சொல்லலையே!

காத்தெல்லாம் மகன்பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி எழுதலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு
எழுதாமாப் போனேனோ?

பொன்னையாத் தேவன் பெத்த
பொன்னே! குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்புல்வலி பொறுத்தவளே!

வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில்நீ சுமந்ததில்ல
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு

கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ?
களவாணப் பிறந்தவனோ?
தரணிஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?

இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்தஒன்ன
நெனச்சா அழுகவரும்

கதகதன்னு களி(க்) கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே

தொண்டையில் அதுஎறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்

திக்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்

கோழிக் கொழம்புமேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்

வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம(ப்)
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேலையிலே
பாசம்வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போபபின்னே

அஞ்சாறு வருசம்உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே

படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!

பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்த மாயிருச்சே!

வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே!

எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?

- கவிப்பேரரசு வைரமுத்து.

தொகுப்பு : கொஞ்சம் தேநீர் நிறைய வானம்

BACK

விருப்பப் பட்டியல் - வைரமுத்து

கேள் மனமே கேள்

சத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன்
சரஞ்சரமாய் வந்துவிழும் வார்த்தை கேட்பேன்
ரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன்
ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன்
சுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன்
சுடர்விட்டுப் பொலிகின்ற ஞானம் கேட்பேன்
யுத்தங்கள் இல்லாத உலகம் கேட்பேன்
உலகெங்கும் சம்பங்கு மழையைக் கேட்பேன்

கண்ணிரண்டில் முதுமையிலும் பார்வை கேட்பேன்
கடைசிவரை கேட்கின்ற செவிகள் கேட்பேன்
பின்னிரவில் விழிக்காத தூக்கம் கேட்பேன்
பிழையெல்லாம் மன்னிக்கும் பெருமை கேட்பேன்
வெண்ணிலவில் நனைகின்ற சாலை கேட்பேன்
விண்மீனை மறைக்காத வானம் கேட்பேன்
மென்காற்று வீசிவரும் இல்லம் கேட்பேன்
மின்சாரம் போகாத இரவு கேட்பேன்

தன்னலங்கள் தீர்ந்துவிடும் இதயம் கேட்பேன்
தங்கத்தைச் செங்கல்லாய் காணக் கேட்பேன்
விண்வெளியில் உள்ளதெல்லாம் அறியக் கேட்பேன்
விஞ்ஞானம் பொதுவுடைமை ஆகக் கேட்பேன்
மண்ணுலகம் கண்ணீரை ஒழிக்கக் கேட்பேன்
மனிதஇனம் செவ்வாயில் வசிக்கக் கேட்பேன்
பொன்னுலகம் பூமியிலே தோன்றக் கேட்பேன்
போர்க்களத்தில் பூஞ்செடிகள் பூக்கக் கேட்பேன்

கோடையிலும் வற்றாத குளங்கள் கேட்பேன்
குளத்தோடு கமலப்பூக் கூட்டம் கேட்பேன்
மேடையிலே தோற்காத வீரம் கேட்பேன்
மேதைகளை சந்திக்கும் மேன்மை கேட்பேன்
வாடையிலும் நடுங்காத தேகம் கேட்பேன்
வாவென்றால் ஓடிவரும் கவிதை கேட்பேன்
பாடையிலே போகையில்என் பாடல் கேட்டால்
பட்டென்று விழிக்கின்ற ஆற்றல் கேட்பேன்

அதிராத குரல்கொண்ட நண்பர் கேட்பேன்
அளவோடு பேசுகின்ற பெண்கள் கேட்பேன்
உதிராத மலர்கொண்ட சோலை கேட்பேன்
உயிர்சென்று தடவுகின்ற தென்றல் கேட்பேன்
முதிராத சிறுமிகளின் முத்தம் கேட்பேன்
மோகனத்து வீணைகளின் சத்தம் கேட்பேன்
பதினாறு வயதுள்ள உள்ளம் கேட்பேன்
பறவையோடு பேசுமொரு பாஷை கேட்பேன்

முப்பதுநாள் காய்கின்ற நிலவைக் கேட்பேன்
முற்றத்தில் வந்தாடும் முகிலைக் கேட்பேன்
எப்போதும் காதலிக்கும் இதயம் கேட்பேன்
இருக்கும்வரை வழங்கவரும் செல்வம் கேட்பேன்
தப்பேதும் நேராத தமிழைக் கேட்பேன்
தமிழுக்கே ஆடுகின்ற தலைகள் கேட்பேன்
இப்போது போலிருக்கும் இளமை கேட்பேன்
இருந்தாலும் அறிவுக்கு நரைகள் கேட்பேன்

வானளந்த தமிழ்த்தாயின் பாலைக் கேட்பேன்
வைகைநதி புலவர்களின் மூளை கேட்பேன்
தேனளந்த தமிழ்ச்சங்க ஓலை கேட்பேன்
தென்னாழி தின்றதமிழ்த் தாளைக் கேட்பேன்
மானமகன் குட்டுவனின் வில்லைக் கேட்பேன்
மாமன்னன் பாண்டியனின் வேலைக் கேட்பேன்
ஞானமகன் வள்ளுவனின் கோலைக் கேட்பேன்
ராஜராஜன் வைத்திருந்த வாளைக் கேட்பேன்

1995


பெரியகுளம் - திண்டுக்கல் நெடுஞ்சாலை. ஒரு விழா முடிந்து நண்பர்களோடு காரில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். விழாவில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசைப் பிரித்துப் பார்க்கிறார் நண்பர் ஒருவர். அது ஒரு வெள்ளிக் குத்துவிளக்கு. நல்ல வெள்ளிதானா என்று தேய்த்துப் பார்க்கிறார் இன்னொரு நண்பர். "விளக்கை அதிகம் தேய்க்காதீர்கள்; பூதம் வந்துவிடப் போகிறது" என்று சிரிக்கிறேன் நான். அப்படி பூதம் வந்துவிட்டால் யார் யார் என்னென்ன கேட்பார்கள் என்ற சுவையான கற்பனை தொடங்க ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கேட்கிறார்கள். கடைசியில் கேள்வி எனக்கு வருகிறது. காரை நிறுத்துங்கள் என்கிறேன். ஒரு புளிய மரத்தடி. தாள் கொடுங்கள் என்கிறேன்; தாள் இல்லை. அழைப்பிதழ்களின் வெள்ளைப் பக்கங்களில் எழுதத் தொடங்குகிறேன். எழுத வசதி எண்சீர் விருத்தம், புளிய மரத்தடியில் பூத்த கவிதை இது. -வைரமுத்து

BACK

மௌன பூகம்பம்-(தாடியையும், சோகத்தையும் சரிவிகிதத்தில் வளர்த்துக் கொண்டு வாழ்பவன் அவன்.)- வைர‌முத்து

அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம்


பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு
அவளை அவன் பார்க்க நேருகிறது.
எங்கெனில்..
ஒரு ரயில் நிலையத்தில்.

எப்போதெனில்..
ஒரு நள்ளிரவில்.

எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக்
கொள்ளும் அந்த இடைவெளியில்..

ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில்
பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன.

அப்பொழுது-
மனசில் எத்தனை மௌன பூகம்பம்!)
உன்னைப் பார்த்த
ஒரு நிமிஷத்தில்
இமைகளைக்
காணாமல் போட்டு விட்டன
கண்கள்.

நீதானா?
இல்லை-
வேறொருவன் கண்களால்
நான்
பார்ககிறேனா?

மனசின் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு
பிரவாகம்.

இதயத்தின்
ஆழத்தில் கிடந்த
உன்முகம்
மிதந்து மிதந்து
மேலே வருகிறது.

ஓ!
வருஷங்கள் எத்தனையோ
வழிந்த பிறகும்..
என்
மார்பு தடவும்
அதே பார்வை..

அதே நீ!

என் பழையவளே!

என்
கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே!

உன் நினைவுகளில்
நான்
எத்தனையாவது பரணில்
இருக்கிறேன்?

அறிவாயா? என்
மீசைக்கும்
என்
காதலுக்கும்
ஒரே வயதென்று
அறிவாயா?

உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரை கூடத்
தோற்றுப் போனதே!

ஓ!
நீ மாறியிருக்கிறாய்.
உன்
புருவ அடர்த்தி
கொஞ்சம்
குறைந்திருக்கிறது.

உன்
சிவப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன்
இதழ்களில் மட்டும்
அதே
பழைய பழச்சிவப்பு.

இப்போதும்
நாம்
பேசப்போவதில்லையா?

வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?

உன் நினைவுகள்
உன் கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம்.
ஆனால்
என் நினைவுகள்
உன்னைப் போலவே
விழித்திருக்கின்றன.

ஓ!
இந்த
ரயில் வெளிச்சம்
நீ
அழுவதாய் எனக்கு
அடையாளம் சொல்கிறதே!
வேண்டாம்!

விழியில் ஒழுகும்
வெந்நீரால்
மடியில் உறங்கும்
உன்
கிளியின் உறக்கத்தைக்
கெடுத்து விடாதே!

இதோ
விசில் சத்தம் கேட்கிறது
நம்மில் ஒரு வண்டி
நகரப் போகிறது.

போய் வருகிறேன்!
அல்லது
போய்வா!
மீண்டும் சந்திப்போம்!
விதியை விடவும்
நான்
ரயிலை நம்புகிறேன்.

அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்!

"நீயும் என்னைக்
காதலித்தாயா?"

BACK

தபூ சங்கர் கவிதைகள்

ரயில் பயணங்களின் போது...
வீட்டு ஜன்னல்களின் வழியே
கையசைக்கும் குழந்தைகளுக்கு
பதில் கையசைக்கும் கைகள் எனக்கில்லை

---------------------------------------------------------------

திட்டமிட்டு யாரையும் ஏமாற்றுகிற துணிவு
என்னகில்லையென்றாலும்
ஏதாவத்டு உணவகத்திலோ
மருந்தகத்திலோ
கொடுத்த பணத்தைவிட அதிகமாக தந்தால்
பேசாமல் வாங்கி வருபவனில்
நானும் ஒருவனே

---------------------------------------------------------------

எப்படியேனும்
எல்லோரிடமிருந்தும் தப்பித்து
வீடு வந்து கண்மூடினால்
என்னிடம் மாட்டிக் கொள்கிறேன்

---------------------------------------------------------------

நாள் முழுவதும் கூந்தலிலிருந்த பூவை
எந்தச் சலனமுமின்றி
எடுத்தெரிந்துவிட்டு
வேறு பூவைச் சூடிக் கொள்ள
எப்படி முடிகிறது
இந்தப் பெண்களால்

---------------------------------------------------------------

அவ்வளவு தொலைவிலிருந்து
குழந்தைகள் சாப்பிட உதவும்
நிலவில்
மனிதன் உயிர் வாழமுடியாது என்பதை
எப்படி நம்புவது?

---------------------------------------------------------------

'அ'-வுக்கு முந்தி எழுத்துக்கள் இல்லையெனினும்
'அ'- எழுதப் பழகிய என் கிறுக்கல்களெல்லாம்
'அ'-வுக்கு முந்திய எழுத்துக்களே

---------------------------------------------------------------

நான் யாரைப் பார்க்கப் போனாலும்
அவர் தனிமையில் இருந்துவிடக்கூடாதே
என்கிற பயம் எனக்கு
தனிமை
கலைக்கப்படுகிறபோது
ஏற்படும்
இழப்புகளை
நான் அறிவேன்

---------------------------------------------------------------


BACK

ஆண்மை - புதுமைப்பித்தன்

ஸ்ரீனிவாசனுக்குக் கலியாணமானது நினைவில் இல்லை. ஏன் என்றால் அது பெப்பர்மின்ட் கல்யாணம். ஸ்ரீனிவாசன் பெற்றோர்கள் பெரியவர்களாகியும், குழந்தைப் பருவம் நீங்காது பொம்மைக் கலியாணம் செய்ய ஆசைப்பட்டார்கள். வெறும் மரப் பொம்மையை விட, தங்கள் நாலு வயதுக் குழந்தை சீமாச்சு மேல் என்று பட்டது. பிறகு என்ன? பெண் கிடைக்காமலா போய்விடும்? ஆத்தூர்ப் பண்ணை ஐயர் மகள் ருக்மிணிக்கு இரண்டு வயது. கலியாணம் ஏக தடபுடல். பெற்றோர் மடியிலிருந்தபடியே ஸ்ரீமான் ஸ்ரீனிவாசனுக்கும் ருக்மிணி அம்மாளுக்கும் திருமணம் நடந்தது. அந்தச் சாக்கில் சஷ்டியப்த பூர்த்திக்கு முன்பே, திருமண மேடையில் உட்காரும் பாக்கியம் இரு சம்பந்திகளுக்கும் கிடைத்ததுதான் மிச்சம்.



கலியாணம் என்ற பதத்திற்கு அகராதியில் ஒரு அர்த்தம் இருக்கலாம். கவிஞனது வியாக்யானம் ஒன்று இருக்கலாம். அதெல்லாம் எனக்குத் தெரியாது. நடைமுறை உலகத்திலே இந்த மகத்தான கலியப்தத்திலே, திருமணம் என்றால் குலப் பெருமை கிளத்தும் கலகாரம்பம் என்று பெயர்.



ஸ்ரீனிவாசன் தகப்பனார் ஆத்தூர்ப் பண்ணையாருக்கு இளைத்தவரல்ல. ஆத்தூர்ப் பண்ணையாரும் ஸ்ரீனிவாசன் தகப்பனாருக்கு மசியக் கூடியவரல்ல. இப்படி இருவருக்கும் ஆரம்பித்த மௌனமான துவந்த யுத்தம், நாளுக்கு நாள் வளர்ந்தது. சீர்வரிசை, மரியாதை, இத்யாதி... இத்யாதி, பரமேச்வர ஐயர் (ஸ்ரீனுவின் தகப்பனார்) தனது பெருமைக் கேற்றபடி, ஆத்தூர்ப் பண்ணை ஐயர் நடந்து கொள்ளவில்லை என்ற கம்ப்ளெய்ண்ட் (complaint). அதற்காதாரமாக, "மாப்பிள்ளையென்று துரும்பைக் கிள்ளிப் போட்டாலும் விறைத்துக் கொண்டுதான் நிற்கும்; அதற்கு முன் பண்ணைப் பெருமையின் ஜம்பம் சாயாது" என்பார்.



ஸ்ரீனிவாசனும் ருக்மிணியும் துவந்த யுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. அதைப் பற்றி இருவருக்கும் தெரியாது. பரமேச்வர ஐயர் ஒவ்வொரு வருஷமும் தன் புத்திரனைச் சம்பந்தி வீட்டிற்கு அனுப்பி வைப்பார். பிறகு இல்லாத நோணாவட்டம் எல்லாம் சொல்லிக் கொண்டு வருஷம் பூராவாகவும் பேச, அது ஒரு 'ஐட்டம் நியூஸ்'. ஸ்ரீனிவாசனுக்குச் சம்பந்தி வீட்டிற்குப் போவதென்றால் ரொம்பக் குஷி. விஷயம் ருக்மிணி இருக்கிறாள் என்ற நினைப்பினால் அல்ல, பக்ஷணம் கிடைக்கும்; நாலைந்து நாள் 'மாப்பிள்ளை', 'மாப்பிள்ளை' என்ற உபசாரம்; விளையாட்டு, அப்பாவின் கோபமும் அடியும் எட்டாத இடம்; மேலும் விளையாடுவதற்கு நிரம்பப் பயல்கள்; இதுதான் மாமா வீடு என்றால் வெகு குஷி.



இப்படி பத்து வருஷங்கள் கழிந்தன.



சம்பந்தி சண்டை ஓயவில்லை.



சீமாவும் சின்னப் பையனாக இருந்து மெதுவாகப் பெரிய மனிதனாகிவிட்டான். பரமேச்வர ஐயருக்குப் பையன் வளர வளர குதூஹலம். ஆத்தூர்ப் பண்ணைக்குப் 'புத்தி கற்பிக்க' சாந்தி முகூர்த்தம் என்ற கடைசித் துருப்பை உபயோகிக்க வேண்டிய காலம் நெருங்குவதில் மிகுந்த சந்தோஷம். ஆத்தூர்ப் பயலை என்ன செய்கிறேன் பார் என்று தம் மனைவியிடம் வீரம் பேசினார். அவருடைய சகதர்மிணியும் தனது கணவன் வீர புருஷன் என்பதில் மிகுதியும் களித்தாள்.



சீமாவும் மாமனார் வீட்டுக்குப் போவது படிப்படியாகத் தடைபட்டுப் போயிற்று. முதலில் கொஞ்சம் வருத்தந்தான். ஆனால் சீமா புஸ்தகம் படித்த வனல்லவா? அதில் 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்று படித்திருக்கிறான். தந்தையின் சொல் மந்திரத்தை விட, கை மந்திரத்தில் அதிக அனுபவம் உண்டு. சீமாவும் மாமனாரை வெறுக்க ஆரம்பித்தான். காரணமும் கொஞ்சம் உண்டு; ருக்மிணி முன்போல் அவனுடன் விளையாடுவதில்லை. ஓடி ஒளிய ஆரம்பித்துவிட்டாள். ருக்மிணியின் தகப்பனாரும், அவன் அங்கு ஒரு தடவை சென்றிருந்த பொழுது தகப்பனாரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததை எல்லாம் ருக்மிணி வந்து அவனிடம் சொல்லியழுதாள்.



அவளுக்குச் சீமாவின் தகப்பனாரை எப்படிப் பேசலாம் என்ற வருத்தம். குழந்தையுள்ளத்தில் தன் இரகசியத்தைச் சீமாவிடம், அவன் அங்கு சென்றிருக்கும் பொழுது சொல்லி விட்டாள். அதிலிருந்து ருக்மிணி என்றால் சீமாவிற்குத் தனது உள்ளம் என்ற ஒரு பற்றுதல். ஆனால் மாமாவின் மீதும், அத்தையின் மீதும் அடங்காத கோபம். அந்தக் கோபத்தில் ஏற்பட்ட வெறுப்பின் சாயை, சீமாவின் மனவுலகத்தில் ருக்மிணியைத் தீண்டியதும் உண்டு.





ருக்மிணி புஷ்பவதியானாள்.



சடங்குகளும் ஏக தடபுடலாக நடந்தன. ஆத்தூர்ப் பண்ணை ஐயர் நேரில் வந்து அழைத்தும், அங்கிருந்து ஒருவரும் போகவில்லை.



ருக்மிணிக்கு மிகுந்த வருத்தம். தன் சீமா வராமல் இருப்பாரா என்று ஏங்கினாள். ஆத்தூர் ஐயரும் குழந்தை ருக்மிணிக்குச் சாந்தி முகூர்த்தம் செய்விக்க ஒரு நல்ல தினத்தைப் பார்த்து, பரமேச்வர ஐயருக்கு ஒரு கடிதம் எழுதினார்.



பரமேச்வர ஐயருக்கு இந்தக் கடிதத்தைக் கண்டதும் உள்ளம் ஆனந்தக் கூத்தாடியது. தான் நெடுநாள் எதிர் பார்த்திருந்த தினம் வந்த உத்ஸாகத்தில் அன்று விருந்து நடத்தினார். பிறகு சம்பந்திக்கு ஒரு நீண்ட கடிதம் ஏறக்குறையக் குற்றப் பத்திரம் ஒன்று எழுதி, அதில் 5000 ரூபாய் கையில் தந்தால் தான் தன் மகன் சாந்தி முகூர்த்தம் செய்வான் என்றும், மேலும் சம்பந்தி ஐயரவர்களின் சீர் வரிசைக் குறைகளை எல்லாம் இப்பொழுது சரிகட்டி மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் எழுதி இருந்தார்.



இந்த விஷயத்தில் சீமாவிற்கு மனத்தாங்கல்தான்; இவ்வளவிற்கும் ருக்மிணி, பாபம் என்ன செய்தாள் என்று நினைத்தான். ஆனால் தகப்பனாருக்கு அடங்கிய பிள்ளை. சொல்லவும் முடியவில்லை; மெல்லவும் முடியவில்லை.



இந்த விஷயத்தைப் பற்றி ருக்மிணி தனக்குக் கடிதம் எழுதுவாள் என்று எதிர்பார்த்தான். அவள் எழுதினால் அவன் நாவல்களில் படித்த கதாநாயகி போல், ருக்மிணியும் தன்னநக் காதலிக்கிறாள் என்று அப்பாவின் கோபத்தையும் எதிர்ப்பதற்குத் தயாராகி யிருந்தான்.



ஆனால் கடிதம் வரவில்லை.



சீமாவிற்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஒருவேளை நாவல்களில் படித்த மாதிரி... வேறொருவனைக் காதலிக்கிறாளோ என்னவோ! பொம்மைக் கலியாணம் செய்யப்பட்ட பெண், வேறொருவனைக் காதலித்து... கடைசியாக பிரம்ம சமாஜத்தில் கலியாணம் செய்து கொள்ளுவதுதான் நாவல் சம்பிரதாயப்படி சுவாரஸ்யமான முடிவு. அப்பொழுதுதான் கதாசிரியனும், வாசகர்களே என்று ஆரம்பித்துக் குழந்தைக் கலியாணத்தின் கொடுமைகளைப் பற்றி வியாசம் எழுத முடியும். சீமாவின் உள்ளத்தில் என்ன என்னவோ எண்ணங்கள் எல்லாம் குவிந்தன. ஆனால் ருக்மிணியின் மீது ஒரு பெரிய ஏமாற்றம்தான் மிச்சம்.



கடிதம் வரவில்லை.



சீமாவிற்கு ஒரு யோசனை தோன்றியது. ருக்மிணியை இரகசியமாகக் கவனித்தால், அல்லது அவளைச் சந்தித்தால், தன்னைக் காதலிக்கிறாளா என்று கண்டுபிடித்து விடலாமே என்று தோன்றியது. அப்பாவிற்குத் தெரியாது போக வேண்டும்.



சீமா இப்பொழுது சென்னையில் படித்துக் கொண்டிருக்கிறான். அப்பாவிற்குத் தெரியாமல் போவது அவ்வளவு கஷ்டமல்ல. பள்ளிக்கூட மாணவனுக்கா தகப்பனாரிடம் இருந்து பணம் தருவிக்க வழி தெரியாது?




ஆத்தூர் ஐயரவர்களுக்குப் பண்ணைத் திமிரும் சிறிது உண்டு. பரமேச்வரன் தன் வழிக்கு வராமல் எங்கு போய் விடுவான் என்று தைரியம். தன் சொல் சக்தியால், பரமேச்வர ஐயர் வேறு பெண் சீமாவிற்குப் பார்க்க எத்தனித்தால் தடுத்து விடலாம் என்ற தைரியம் இருந்தது. பயல் சீமாவும் இப்படி இருப்பானா என்றுகூடச் சில சமயம் பேசியதுண்டு. இதைக் கேட்ட சமயமெலாம் ருக்மிணிக்குக் கண்ணீர் வரும்.



"அவனை மறந்துவிடு. கொட்டத்தை அடக்கி விடுகிறேன்" என்று ருக்மிணியிடம் சொல்லிய காலங்களும் உண்டு.



'போங்கள் அண்ணா' என்று கண்ணீர் விட்டு உபவாசம் இருப்பதே ருக்மிணியின் வழக்கமாகிவிடும் போல் இருந்தது. அவள் கணவன் என்ற வார்த்தையின் பூரண அர்த்தத்தை யறிந்தவள் அல்ல. உள்ளத்திலே ஏதோ தன்னை யறியாத பக்தி, பாசம் சீமாவின் மீது வளர்ந்து கொண்டே இருந்தது.



சிறு பருவத்தில் அவனுடன் விளையாடின தெல்லாம் ஒன்றிற்குப் பத்தாக உள்ளத்தில் விளையாட ஆரம்பித்தன. எத்தனையோ தடவை 'அவருக்குக் கடுதாசு எழுத வேண்டும்' என்று காகிதங்களை எடுத்து முன் வைத்த நேரங்கள் உண்டு. ஆனால் என்ன நினைத்துக் கொள்வாரோ, மாமாவிற்குத் தெரிந்தால் பெரிய அவமானம் என்ற பயம்.



ஊர் வாயை மூட முடியுமா? ருக்மிணி வாழாவெட்டியாகிவிட்டாள் என்று ஊர்க் கிழங்களிடையே பேச்சு. ஊர்ச் சிறுமிகளுக்கும் ருக்மிணி என்றால் சிறிது இளக்காரம். இதனால் ருக்மிணிக்கு ஆறுதலாக ஒருவரும் இல்லை. அவள் தாயார் அவள் தகப்பனாரின் எதிரொலி.



புஷ்பங்களிலே பலவகையுண்டு. சிலவற்றைப் பார்த்ததும் குதூகலம், களிப்பு இவையெல்லாம் பிறக்கும். சில சாந்தியை அளிக்கும். சில உள்ளத்தில் காரணமற்ற துக்கத்தை, சோகத்தை எழுப்பும்.



ருக்மிணி இயற்கையிலேயே நல்ல அழகி. சிறு பிராயத்திலேயே ஆளை விழுங்கும் விழிகள். அதுவும் இயற்கையின் பரிபூரண கிருபை இருக்கும்பொழுது! ஆனால் கூம்பிச் சாம்பிய உள்ளத்தின் உள்ளொளி, அவளது துயரம் தேங்கிய கண்களில் பிரதிபலிக்கும். அவளைப் பார்க்கும்பொழுது, நம்மையறியாத பெருமூச்சு வரும்.



ஊர்ப் பேச்சிற்கும் பொச்சரிப்பிற்கும் பயந்து, அதிகாலையிலேயே ஆற்றிற்குச் சென்றுவிட்டு வந்து விடுவது வழக்கம். ஆத்தூரில் ஊருக்குச் சற்றுக் கூப்பிடு தூரத்தில்தான் ஆறு. ருக்மிணி பயமற்றவள்.



அன்று விடியற்காலை நிலா பால் போல் காய்ந்து கொண்டிருக்கிறது.



ருக்மிணி குடம் எடுத்துக்கொண்டு குனிந்த தலை நிமிராமலே ஆற்றிற்குச் செல்லுகிறாள்.



கண்களிலே சற்றுக் கூர்ந்து, முகத்துடன் நெருங்கி நோக்கினால் சந்திரனில் பிரதிபலிக்கும் கண்ணீர்.



அந்த ஆறுதான் அவள் கவலையைக் கேட்கும்.



ஆத்தூர் சிறிய ஸ்டேஷன். மூன்று மணி வண்டி கொஞ்ச நேரம்தான் நிற்கும். சீமா அதிலிருந்து இறங்கினான். எப்படியாவது ருக்மிணியை அவள் பெற்றோருக்குத் தெரியாமல் காண்பது என்ற நினைப்பு. கண்டு அவளிடம் என்ன பேசுவது, என்ன சொல்வது என்றெல்லாம் அவன் நினைக்க வில்லை. அவளை எப்படித் தனியாக, இரகசியமாகச் சந்திப்பது என்று கூட எண்ணவில்லை. வீட்டின் பக்கம் சென்றால் வெளி முற்றத்திற்கு வரமாட்டாளா? வந்தால் தன்னை அடையாளம் கண்டுகொள்ள மாட்டாளா? என்ற நம்பிக்கை. அவன் அவளைச் சந்தித்து வெகு நாட்களாகி விட்டதென்ற, ஏறக்குறைய ஐந்து வருஷத்திற்கு மேலாகிவிட்டதென்ற நினைப்பே இல்லை.





ஸ்டேஷனிலிருந்து வந்தால் - அதாவது அங்கு வண்டிகள் கிடையாது. நடந்து வந்தால், அந்தப் பாலமற்ற ஆற்றைக் கடக்க வேண்டும்.



நடந்து வருகிறான்.



கரையேறி அக்ரகாரத்திற்கு நேராகச் செல்லும் பாதை வழியாக நடந்து வருகிறான். மனத்தில் பயம் கொஞ்சம் பட்பட் என்று அடித்துக் கொண்டது.



எதிரே ஒரு பெண் வருகிறாள்.



அவள்தான்.



விதியும் கோழை சீமாவின் மேல், கருணை கூர்ந்தது போல் அவளை அனுப்பியது.



பால் போன்ற நிலாதான்.



சிற்றாடை கட்டிக்கொண்டு சில சமயம் சீமாவென்று கூப்பிட்டு, பின்னோடு அலைந்து கொண்டிருந்த ஒரு குழந்தை, திடீரென்று பதினான்கு வயது நங்கையாக, அதிலும் அழகியாக மாறியதைக் கண்டால், யாருக்குத்தான் அந்த மங்கிய நிலவில் அடையாளம் கண்டுபிடிக்க முடியும்?



அவள் தன்னைக் கடந்து செல்லும்வரை கூர்ந்து கவனித்தான்; உள்ளம் அவள்தானென்று காரணமற்றுக் கூறியது. ஆனால் அவள் ஜாடையெல்லாம்... மெதுவாகப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால்... நம்பிக்கை யாரை விட்டது?



"ருக்மிணி!"



அந்தப் பெண் திடுக்கிட்டு நின்றாள்.



"ருக்மிணி!"



வந்தவள் ருக்மிணிதான். தன் பெயரைக் கூப்பிடக் கேட்டதும் பயம். வாயடைத்த பயம். ஆனால் குரல் ஜாடை எல்லாம் இரண்டாம் முறை சப்தத்தில் யாருடையது மாதிரியோ பட்டது.



"ருக்மிணி!" என்றான் மறுபடியும். சற்றுத் தைரியமாக "யாரது?" என்றாள்.



"நான்தான் சீமா!"



வார்த்தைகளைக் கேட்டதும் அவள் உள்ளத்தில் தாங்க முடியாத குதூகலம்; அதில் பிறந்த சோகம், கண்களில் ஜலம் தாரை தாரையாகப் பொங்கியது. அழ வேண்டுமென்றிருந்தது. சிரிக்க வேண்டுமென்று தோன்றியது. கண்டத்தில் ஏதோ ஒன்று கட்டியாக உருளுவதுபோல் இருந்தது. உதடுகள் அழ வேண்டுமென்று துடித்தன. உதட்டை மெதுவாகக் கடித்துக்கொண்டு விழுங்கினாள்.



"ருக்மிணி, என்ன இன்னும் அடையாளம் தெரியவில்லையா? இன்னும் சந்தேகமா?"



"இல்லை, ஆத்திற்கு வாங்க, போவோம்" என்றாள்.



"நான் அங்கே வரவில்லை..."



ருக்மிணிக்கு ஏதோ மனதில் அடித்த மாதிரி இருந்தது.





"உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். இங்கே வா. ஆற்றங்கரைப் பக்கம் போவோம்" என்றான்.



"சரி" என்றாள். சீமாவிற்கு இதில் சிறிது ஆச்சர்யம் தான். வெகு துணிச்சல்காரி என்று பட்டது.



"ருக்மணி உன்னிடம் ஒன்று கேட்கவேண்டும்! கேட்பையோ?"



"சந்தேகமா?"



"பின் ஏன் எனக்குக் கடிதம் எழுதவில்லை...?"



"நினைத்தேன்... நீங்கள் என்னவாவது நினைச்சிப்பியளோ என்று பயம்."



"இப்படிப் பயப்பட்டா நான் சொன்னபடி எப்படி நடப்பாய்?"



"கட்டாயமாக நடக்கிறேன். சத்தியமா நடக்கிறேன். சத்தியமாக..." என்று துடிதுடித்துக் கொண்டு பேசினாள்.



"உன் மாமாவும், அப்பாவும் சண்டை பிடிச்சுக்கிறாளே, அவர்கள் நம்மைக் கவனித்தார்களா? அவர்களுக்கு ஒரு புத்தி கற்பிக்க வேண்டும். நாம் இருவரும் அவர்களுக்குத் தெரியாமல் எங்கேயாவது போய்விட வேண்டும். நீ என்னுடன் வருகிறாயா? கட்டாயம் வருகிறாயா? கையடித்துக் கொடு."



"வருகிறேன் சீ..." தன்னையறியாமல் பழைய சிறு குழந்தை நினைவிலே முடிக்கப் போனாள். திடீரென்று கணவன் என்ற மரியாதை நினைவு அவளைக் குழப்பியடித்து விட்டது. கோபித்துக் கொள்வாரோ, மரியாதைக் குறைவாகப் பேசியதற்கு என்ற நினைவில் விம்மினாள்.



விம்மலுடன் "மன்னியுங்கோ" என்ற வார்த்தை வெளிவந்தது.



சீமாவிற்கு ருக்மிணி தன்னை மறக்கவில்லை என்பதில் பரிபூரண ஆனந்தம்.



"ருக்மிணி நீ என்னைச் சீமா என்று கூப்பிட்டால் தான்...!" என்று அவள் சத்தியம் செய்வதற்கு எடுத்த கையைத் தனது கரத்தில் பற்றினான். அவள் கை எவ்வளவு மெதுவாக புஷ்பம் போல் இருக்கிறது. உள்ளத்தில் இருந்து ஏதோ ஒன்று உடல் பூராவாகப் பாய்வது போல் இருந்தது.



ருக்மிணியும் கரத்தை இழுக்கவில்லை. இழுக்க இயலாதபடி வலுவிழந்தாள். கூச்சமும், நாணமும் முகத்தைச் சிவக்கச் செய்தன.



"நீங்கள் இப்படிக் கேட்டால்..."



"சொன்னால்தான்..."



"சீமா" என்று மெதுவாக அவன் காதுடன் காது வைத்துக் கூறினாள்... அதரங்கள் என்றும் மலராத விதம் மலர்ந்தன.



சீமாவின் கரங்கள் அவள் இடையில் மெதுவாகச் சுருண்டன.



அவள் இடையிலிருந்த குடம் கை சோர்ந்து மணலுக்கு நழுவியது.





"ருக்மிணி! நான் சொன்னபடி கேட்பாயோ!"



"இன்னும் சந்தேகமா? நீங்கள் கூப்பிடும் இடத்திற்கு வருகிறேன்."



அவள் கண்களில் ஒரு ஜோதி பிரகாசித்தது. ஒரு கொஞ்சுதலும், குழைவும் காணப்பட்டது.



ருக்மிணி அவனது மார்பில் சாய்ந்தாள்.



"ருக்மிணி நான் வந்ததாக எவருக்கும் தெரியக் கூடாது. உன் அப்பாவிற்குக் கூட..."



"ஆகட்டும்."



இருவரும் தழுவிக் கொண்டனர்.



பிரிய மனம் வரவில்லை. விலக மனம் வரவில்லை.



"ருக்மிணி!" என்றான்.



"சீமா" என்றாள்.



அவள் கரத்தில் முத்தமிட்டான்.



அவளைச் சுற்றியிருந்த கரங்களை மீட்டான்.



குழந்தை ருக்மிணி நாணத்தினால் தழுதழுத்த குரலில் மெதுவாக "நான்" என்றாள்.



சடக்கென்று சீமா விலக்கிக்கொண்டு "போய் வருகிறேன் கண்ணே" என்று வெகுவேகமாகச் சென்றான்.



ருக்மிணிக்குத் துக்கம் நெஞ்சையடைத்தது. அவன் முதுகில் வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். விம்மி விம்மி மூச்சு வந்து கொண்டிருந்தது.



ஆற்றின் அக்கரையை அடைந்ததும் சீமா திரும்பிப் பார்த்தான்.



ருக்மிணி அவன் இருந்த திக்கில் கும்பிட்டாள்.



ருக்மிணியின் நெஞ்சில் மறுபடியும் மேகம் கவ்வியது.



நடந்த கனவு மறைந்தது.



ருக்மிணி கணவனுக்குக் கொடுத்த வாக்குத் தத்தத்தை மறக்கவில்லை. பெற்றோரிடம் கூறவில்லை. ஆனால் இயற்கை கூறாது விடவில்லை. ருக்மிணி தனது கணவனின் நினைவை மறவாத வண்ணம் இயற்கை கருணை புரிந்தது.



இரண்டு மாத காலங்களில் இயற்கையின் கோளாறுகள் அவள் மீது தோன்றலாயின. வீட்டிற்குத் தெரியாது.



பண்ணை ஐயர் திடுக்கிட்டுப் போய்விட்டார். சீமாவைப் பற்றி அவர் நினைக்கவேயில்லை. தனது குற்றம் என்று உள்ளம் கூறியது. க்ஷாத்திரத்தை எல்லாம் மகளின் மீது தாக்கினார். "யார் என்று சொல்? பயலைத் தொலைத்து விடுகிறேன்" என்று கர்ஜித்தார். இதற்கு மேல் தாயாரின் பிடுங்கல் வேறு. ருக்மிணி ஒன்றிற்கும் பதில் சொல்லவில்லை. கணவன் இட்ட பணியை மறப்பாளா? அவர் வருவார், கடிதம் எழுதுவார் என்ற நம்பிக்கை இருக்கும்போது...



இரகசியம் என்பது சில விஷயங்களில் வெகு கஷ்டமான காரியம். ஊரிலே மெதுவாகப் பரவியது. ஊர்ப் பேச்சிற்குக் கேட்பானேன்? ஒன்றிற்குப் பத்தாகத் திரிந்தது. எந்த ஊர்க்குருவியோ போய் பரமேச்வர ஐயர் குடும்பத்திற்கும் கூறி விட்டது. ருக்மிணியின் மீது அவருக்கு உள்ளூர ஒரு பாசம் இருந்து வந்தது. முதலில் நம்பமுடியவில்லை. சமாசாரம் உண்மை என்ற பிறகு என்ன செய்ய முடியும்? சம்பந்தியின் மீதிருந்த க்ஷாத்திரத்தை எல்லாம் ருக்மிணியின் மீது சுமத்தியும், தம் மகனுக்கு நீண்ட கடிதம் எழுதிவிட்டார்.



சீமாவிற்கு முன்பு பணம் எடுத்துக் கொண்டு ருக்மிணியுடன் ஓடிப் போக வேண்டுமென்ற ஆசை, நம்பிக்கை இரண்டும் இருந்தன. இப்பொழுது அந்த நம்பிக்கையும் பறந்து போய்விட்டது. தான்தான் குற்றவாளி என்று அப்பாவிடம் கூச்சமில்லாமல் எப்படிச் சொல்லுவது? மேலும் ருக்மிணியின் மீது பழி ஏற்பட்டு விட்டதே, அவளை எப்படி ஊரார் அறியாமல் வைத்து வாழ்வது? சீமாவின் மனம் கலங்கியது.



இச்சமயம் ருக்மிணியிடம் இருந்து குழறிக் குழறி கண்ணீரால் நனைந்த ஒரு கடிதம் வந்தது. அவளைக் கூட்டிக் கொண்டு போய்விட வேண்டுமாம். முன்பு சொன்னபடி சீக்கிரம் வரவேண்டுமாம். அப்பா வையராளாம்; வீடு நரகமாக இருக்காம். அப்பாவிடம் சொல்லவில்லையாம். குழந்தை ருக்மிணிக்கு என்ன நம்பிக்கை!



சீமாவிற்கு என்ன பதில் எழுதுவது என்று தெரியவில்லை. தைரியம் இல்லை; பேசாமல் இருந்துவிட்டான்.



ருக்மிணியைப் பற்றி இரவெல்லாம் நினைத்து அழுதான்.



ஆனால் தகப்பனாரிடம் வேறு கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறத் தைரியம் இருந்தது. அப்பா இருக்குமிடத்திற்கும் சென்னைக்கும் வெகுதூரமல்லவா? அதனால்தான் தைரியமிருந்தது. மேல் படிப்பிற்கு அவசியம் 200 ரூபாய் வேண்டுமாம். அந்தப் பொய் சொல்லியாவது...



ருக்மிணி கடிதத்தை எதிர்பார்த்தாள். அது எப்படி வரும்?... இந்த உள்ளூர ஏற்பட்ட மன உளைச்சலும், இருதய உடைவாலும் சீமா நிறுவிய இலட்சியம் உடைந்து போயிற்று.



அந்த அதிர்ச்சியில் மூளை குழம்பி விட்டது.



"அவர் வந்து விட்டாரா? சீமா வந்தாச்சோ?"



இதுதான் புலம்பல் இரவும் பகலும்.



அவளது குழம்பிய மனதில் 'சென்னைக்கே அவரிடம் சென்றுவிட்டால்' என்று பட்டது.





பித்தத்தில் மூளை கூர்மையாக வேலை செய்யும். இரவு எல்லோரும் படுத்த பிறகு அப்பாவின் பெட்டியைத் திறந்து பணத்தை எடுத்துக் கொண்டாள். அன்று சீமா விடியற் காலையில் சென்ற வண்டியில் போய்விட வேண்டும் என்ற திட்டம். பித்தத்தின் கதியை என்ன சொல்வது! நினைத்தபடியே செய்து முடித்தாள்.



வண்டி சாயங்காலம் சென்னையில் கொண்டு வந்து சேர்த்தது.



பிறகு?



அவளுக்குத் தெரியவில்லை.



பித்தத்தின் வேகம் அதிகமாயிற்று.



"அவரைக் கண்டீர்களா? சீமாவிடம் கொண்டு விடுங்கள்" இதுதான் வார்த்தைகள்.



சென்னையில் கேட்கவா வேண்டும்? அதிலும் ஒரு அழகிய சிறு பெண் அலங்கோலமாகப் போகும் பொழுது.



அவளைத் தொடர்ந்து காலிக் கூட்டம். முக்கால் வாசி சிறுவர்கள் கூடியது.



சில விடர்களும் தொடர்ந்தார்கள்.



ருக்மிணியும் ஏகாக்கிராந்தையாக அதே புலம்பலுடன் சென்றாள்.



சிலர் சிரித்தார்கள். சிலர் துக்கப்பட்டார்கள். சென்னை அவசரத்தில் வேறு என்ன செய்யமுடியும்? மற்றவர்களுடன் வருத்தத்துடன் பேசிக்கொண்டு சென்றார்கள்.



அன்று சீமாவிற்கு உதவி செய்த குருட்டு விதி அவனை அங்கு கொண்டு தள்ளி, மறுபடியும் உதவி என்ற தனது விளையாட்டை ஆரம்பித்தது.



கூட்டத்தை விலக்கிக்கொண்டு அவளிடம் சென்று "ருக்மிணி" என்றான்.



"அவரைக் கண்டீர்களா? சீமாவிடம் கொண்டு விடுங்கள்" என்றாள்.



அவள் குரலில் ஒரு சோகம் - நம்பிக்கை யிழந்த சோகம் - தொனித்தது.



கண்களில் அவனைக் கண்டு கொண்டதாகக் குறிகள் ஒன்றும் தெரியவில்லை.



"என்னைத் தெரியவில்லையா? என்ன ருக்மிணி நான் தான் வந்திருக்கிறேன்."



"அவரைக் கண்டீர்களா? சீமாவிடம் கொண்டு விடுங்கள்" என்றாள் மறுபடியும், குரலில் அதே தொனிப்பு.



அவளிடம் விவாதம் செய்யாமல் ஒரு வண்டி பிடித்து அவளை ஏற்றிக்கொண்டு சென்றான்; துக்கம் நெஞ்சையடைத்துக் கொண்டது. என்ன மாறுதல்? கசங்கிய மலர்.



வண்டியில் போகும்பொழுது மறுபடியும் "அவரைக் கண்டீர்களா? சீமாவிடம் கொண்டு விடுங்கள்" என்றாள்.



சீமாவிற்குப் பதில் பேச முடியவில்லை...



அவள் அவனைக் கண்டு கொண்டாளோ என்னவோ? எனக்குத் தெரியாது.



ஆனால் சீமா, பரமேச்வரய்யரிடமும், உலகத்தினர் முன்பும் ஆண்மையுடன் நடந்து கொண்டான்.




மணிக்கொடி, 18-11-1934
(மணிக்கொடியில் 'ஆண் சிங்கம்' என்ற தலைப்பில் இக்கதை வெளிவந்தது. பின்னர் புதுமைப்பித்தன் 'ஆண்மை என மாற்றினார்)

BACK

தமிழ் கதைகள்

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !