தேங்காய்த் துண்டுகள் - டாக்டர் மு.வரதராசனார்

"மாலை நேரத்தில் குடித்துவிட்டுச் சாலை ஓரத்தில் விழுந்து கிடப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இது என்ன கொடுமை! பகல் ஒரு மணிக்கு நல்ல வெயிலில் தார் வெந்து உருகும் வெப்பத்தில் இந்தச் சாலை ஓரத்தில் இப்படி ஒருவன் விழுந்து கிடக்கிறானே" என்று எண்ணிக் கொண்டே அந்த மாரியம்மன் கோயிலை அணுகி நடந்து போய்க் கொண்டிருந்தேன். வெளியூர்களில் கள் சாராயக் கடைகளை மூடி விட்ட பிறகு, அங்கே உள்ள குடிகாரர் சிலர் அடிக்கடி சென்னைக்குப் புறப்பட்டு வந்து, ஏதோ வேலை இருப்பது போல் நகரத்தைச் சுற்றித் திரிந்து, ஆசை தீரக் குடித்து மயங்கியிருந்து, பிறகு ஊருக்குத் திரும்புவது எனக்கு நன்றாகத் தெரியும். எங்கள் ஊரில் இருந்தே பலர் அப்படிப் புறப்பட்டு வந்து சென்னையில் குடித்துவிட்டுப் போவது தெரியும். ஒருமுறை வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டு, நகரத்தில் பல வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். உணவுக்கு ஒரு வேளையாவது வருமாறு அழைத்தாலும் வருவதில்லை. அவர்களுக்கு விருப்பமான விருந்து கள்ளுக் கடைகளிலும் சாராயக் கடைகளிலும் கிடைக்கும்போது, வெந்த அரிசிச்சோற்றைத் தேடியா வந்து காத்திருப்பார்கள்? நாட்டுப் புறத்தில் மூலைமுடுக்குகளில் காய்ச்சும் திருட்டுச் சாராயம் போதாது என்று இந்தக் கடைச் சரக்கை நாடி வருகிறவர்கள், அதையும் விட்டு நல்ல அரிசிச் சோற்றையும் பொருட்படுத்தாமல் இந்தப் பங்கீட்டு அரிசிச் சோற்றை... ஈரத்தோடு நெடுநாள் இருந்து கெட்டு அழுகிப் பல நிறம் பெற்று விளங்கும் அரிசியால் சமைத்த சோற்றையா நாடி வருவார்கள் என்று நானும் வற்புறுத்தாமல் விட்டுவிடுவேன். ஆனால் மின்சாரவண்டி வரும் வேளையில் தண்டவாளப் பாலத்தின்மேல் நடந்து வண்டியில் அகப்பட்டுக் கொண்டு மடிந்த இரண்டு பிணங்களை ஒரு நாள் காண நேர்ந்தது. அவர்களுக்கு முன்னே நடந்துவந்த சிலர் அவர்களைக் குடிகாரர் என்று அறிந்து அங்கே நடந்து போக வேண்டா என்று சொல்லித் தடுத்தும் கேட்கவில்லையாம். அந்தக் குடிவெறியில் தள்ளாடி நடந்து மின்சார வண்டிக்குப் பலியானார்களே என்று அன்று என் நெஞ்சம் மிக வருந்தியபோது, போக்கு வரவு மிகுந்த சென்னையில்தான் கள் சாராயக் கடைகளை முதலில் மூட வேண்டும் என்று உணர்ந்தேன்.

இந்த மாரியம்மன் கோயிலருகே சாலை ஓரத்தில் பகல் ஒரு மணி வெயிலில் படுத்துச் சுருண்டிருந்த உடம்பைக் கண்ட போதும் இந்த எண்ணமே உண்டானது. நடுப்பகலிலே இப்படிக் குடிக்கிறவன் பொழுது போனால் எவ்வளவு குடிப்பான் என்று சிறிது வெறுப்போடு எண்ணிக்கொண்டே நடந்தேன். அவனைப் பார்த்துக் கொண்டே இளைஞர் இருவர் நின்று கொண்டிருந்தார்கள். என்ன நிலைமை என்று தான் பார்க்கலாமே என்று நானும் அவர்கள் இருந்த பக்கமாக நடந்து சென்றேன்.

"குடிகாரனா?" என்று அவர்களைப் பார்த்துக் கேட்டேன்.

"இல்லைங்க" என்றார் ஒருவர்.

"வேறு என்ன? காக்கை வலிப்பா?" என்றேன்.

"அதுவும் இல்லைங்க. காக்கை வலிப்பாக இருந்தால் இப்படி மூச்சுப் பேச்சு இல்லாமல் சும்மா விழுந்து கிடப்பானா?" என்றார் மற்றொருவர்.



அவனுக்கு வயது இருபது இருக்கலாம். நல்ல கட்டான உடல் இருந்தது. ஆனால் அழுக்கேறிய ஆடையும் வாடிய முகமும் கண்டபோது, வேறு நோயாக இருக்க முடியுமா என்று எண்ணிப் பார்த்தேன். தீய வழியில் நடந்து பெற்ற விபசார நோயாக (மேகம் முதலிய நோயாக) இருந்து உயிருக்கே உலை வைக்கும் அளவுக்கு முற்றியிருக்கலாம் என்றும், இந்தக் காலத்து இளைஞர்கள் மிகவும் கெட்டுப் போனவர்கள் என்றும் எண்ணினேன். "சரி, கர்ம வினை, நாம் என்ன செய்ய முடியும்?" என்று ஒருவகை வெறுப்போடு நடக்கத் தொடங்கினேன்.

அதற்குள் யாரோ தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளிக்கவே, அவன் "வேலா, வேலா" என்று ஆழ்ந்த குரலில் இரண்டு முறை சொன்னான். இதைக் கேட்டதும் காலெடுத்துச் சில அடி தொலைவு நடந்து சென்ற நான் அந்த இடத்திலேயே நின்றேன். அப்போது அந்த இடத்தில் என்னைப் போல் வழிப்போக்கர் ஒருவர் எட்டிப்பார்த்து, "இது என்ன அய்யா! பாசாங்கு, வெறும் பாசாங்கு; வாய் திறந்து வேலா வேலா என்று கடவுள் பெயரைச் சொல்கிறானே! நான் இந்த மாதிரிப் பாசாங்குப் பிச்சைக்காரர் எவ்வளவோ பேரைப் பார்த்திருக்கிறேன். நேற்றுக் குழந்தை பெற்றுவிட்டு, இன்றைக்குப் பத்துமாதக் கர்ப்பவதி போல் பாசாங்கு செய்து பிச்சை கேட்பதைப் பார்த்ததில்லையா?" என்றார். உடனே அங்கிருந்த மற்றொருவர், "இதுதான் அய்யா பட்டணம்! போகிறவர்கள் சும்மா போகக் கூடாதா? எட்டிப் பார்த்தவுடன் பாசாங்கு தெரிந்துவிடுமா? அவரவர்கள் வயிற்றுக்கு இல்லாமல் பட்டினியால் செத்தால் தெரியும்" என்றார்.

'பட்டினி' என்ற சொல்லைக் கேட்டவுடன் எனக்கு இரக்கம் தோன்றியது. ஏதாவது வாங்கித் தரச் சொல்லலாம் என்று சட்டைப் பையில் கை இட்டுக் காசு எடுத்தேன். அதற்குள் ஒருவர் - கல்லூரி மாணவன் என்று அப்பால் தெரிந்து கொண்டேன் - ஒரு கையில் காப்பியும் மற்றொரு கையில் இரண்டு வாழைப்பழமும் கொண்டு வருவதைக் கண்டேன். என்ன நடக்கிறது, பொறுத்துத்தான் பார்ப்போம் என்று திரும்பி வந்து எட்டிப் பார்த்தேன். அதற்குள் அவனைச் சுற்றிப் பத்துப் பேருக்கு மேல் நின்று கொண்டிருந்தார்கள்.

காப்பி குடிக்கச் சொல்வதற்கு அவனை அசைத்துப் பார்த்தார்கள்; கூப்பிட்டுப் பார்த்தார்கள். ஒவ்வொரு வேளையில் மெல்லிய குரலில் ஏதோ ஒலி வந்தது. ஆனால் கண் திறக்கவில்லை. தண்ணீரும் கையுமாக நின்ற ஓர் ஆள் மறுபடியும் அவன் முகத்தில் தண்ணீரைத் தெளித்து வாயைத் திறந்து கொஞ்சம் தண்ணீர் உள்ளே விட்டார். மெல்லக் கண் திறந்து பார்க்கும் காட்சியைக் கண்டோ ம். உடனே ஒரு மாணவர் எழுப்பி உட்கார வைத்தார். இன்னொருவர் கையில் இருந்த காப்பியை நீட்டினார். அந்தக் காப்பியைக் கண்டதும், மயக்கத்தில் இருந்த அவனுடைய கைகள் ஒரே ஆவலாக அந்தக் காப்பிக் குவளையை இழுத்து வாயில் வைத்துக் கொண்டன. "சூடு, சூடு, பார்த்து, பார்த்து" என்று எதிரில் இருந்தவர் சொல்வதற்குள் காப்பி முழுவதும் எப்படியோ வாயினுள் சென்றுவிட்டது. அப்போது அவனுடைய கண்களில் புலப்பட்ட ஆவலையும் வேட்கையையும் நான் எப்போதுமே கண்டதில்லை. அந்தக் கண்கள் காப்பியையும் குவளையையும் சேர்த்து வாய்க்கும் கொடுக்காமல், தாங்களே விழுங்கிவிடுவன போல் அந்தப் பார்வை இருந்தது. உடனே அவனுடயை முகத்தில் தோன்றிய மாறுதல்தான் வியக்கத் தகுந்ததாக இருந்தது. இதுவரையில் அந்த முகத்தில் வாட்டம் இருந்தாலும் துன்பம் இல்லை; களைப்பு இருந்தாலும், பசிக்கொடுமை இல்லை. இப்போதோ பல்லை இளித்துக் கொண்டு, தலையைத் தொங்க விட்டுக் கொண்டு, சாய்ந்து சாய்ந்து ஏதோ சொன்னான், யார் காதிலும் அந்தச் சொற்கள் கேட்கவில்லை. தரையில் சாய்ந்துவிட விரும்பினான். வேண்டா என்று தடுத்து ஒருவர் மாரியம்மன் கோவில் சுவர் பக்கமாக நகரச் சொல்லி அந்தச் சுவரில் சாயச் செய்தார். அதற்குள் இன்னொருவர் மற்றொரு குவளைக் காப்பியும் ரொட்டித் துண்டும் வாங்கி வந்து நீட்டினார். அவனுடைய பசிக் கொடுமையால் உடனே அவைகளும் மறைந்தன. வாழைப்பழங்களும் உடனே மறைந்தன. 'அப்பாடா' என்று அயர்ந்து சாய்ந்து, சுற்றிப் பார்த்து, மருண்டு கண்ணீர் விட்டான். எல்லோருக்கும் இரக்கம் மிகுந்து விட்டது.



"எந்த ஊர் அப்பா?" என்றார் ஒருவர்.

"மதுரை" என்றான் சிறிது தெளிவான குரலில்.

"எங்கே வந்தாய்?"

"பிழைக்கத்தான் அய்யா! என் கதி...!"

"போகட்டும்; என்ன உடம்புக்கு?"

"ஐந்து நாளாச்சு அய்யா" என்று சொல்லி வயிற்றை அடித்துக் கொண்டு கண்ணீர் கலங்கினான்.

உடனே கூட்டம் மெல்ல மெல்லக் கலையத் தொடங்கியது. நான்கு பேர் நின்றார்கள்.

"எழுந்து நடக்க முடியுமா?" என்று கேட்டேன்.

"இன்னும் கொஞ்ச நேரம் பொறுங்கள், சாமி" என்று கெஞ்சும் குரலில் சொல்லி முகத்து வியர்வையைத் துடைத்து, கால்களை நீட்டிக் கொண்டும் மடக்கிக் கொண்டும் இருந்தான்.

பிறகு அங்கிருந்த சிலரும் மெல்ல நகர்ந்தார்கள். காப்பி கொடுத்த மாணவர் மட்டும் அங்கே நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த கல்லூரி மணி அடித்தது. அந்த மணி ஒலியைக் கேட்டதும், அவரும் திரும்பித் திரும்பிப் பார்த்தார். இறுதியில் அவரும் புறப்பட்டுப் போகவே, நான் மட்டும் அங்கே நின்றேன். அந்த இளைஞனுடைய உண்மையான நிலையைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஏதோ ஒருவகை வேட்கை என் மனதிலிருந்து தூண்டியது. அதனால்தான் நான் புறப்பட முடியாமல் அங்கே நின்றுவிட்டேன்.

"எழ முடியுமா?" என்று மறுபடியும் அவனைக் கேட்டேன்.

"உடம்பு அசதியாக இருக்கிறது, சாமி" என்றான்.

"வீடு வரைக்கும் வந்தால் வயிறாரச் சாப்பிட்டு வரலாம்" என்று அழைத்தேன்.

"வீடு எங்கே? சொல்லுங்கள். கொஞ்சம் களைப்புத் தீர்ந்ததும் நானே வருவேன்" என்றான்.

"இவ்வளவு களைப்பு ஏற்பட்ட பிறகு நீ ஏன் இந்த வழியில் நடந்து வர வேண்டும்? அதுவும் நடுப்பகல் வெயிலில் இப்படித் தார்ச் சாலையில் நடந்து வரலாமா?" என்றேன்.

"இன்னும் கொஞ்சம் தூரம் தானே? இந்த மாரியம்மன் கோவிலுக்கு எப்படியாவது போய்ச் சேர்ந்துவிடவேண்டும் என்று தள்ளாடிக் கொண்டே வந்தேனுங்க!" என்று சொல்லிவிட்டு அமைதி ஆனான். பிறகு கண்ணீர் கலங்கித் தன் அழுக்கு ஆடைகளால் கண்களைத் துடைத்துக் கொண்டான். ஏதோ உண்மைக் காரணம் இருக்க வேண்டும் என்று நானும் பொறுத்திருந்தேன்.

ஒரு பெருமூச்சு விட்டு, "நான் பிழைக்க மாட்டேனுங்க" என்று அழுதான். என்னால் ஆன வரையில் தேறுதல் கூறினேன். "சொந்த ஊரில் சாகாமல் இப்படிப் பட்டணத்தில் சாக வேண்டுமா?" என்று விம்மி விம்மிச் சொன்னான். "அதனால் தான் இந்தக் கோயிலுக்கு வந்து உயிரை விடலாம் என்று வந்தேன்" என்று கலங்கிச் சொன்னான்.

"நீ தான் திக்கற்றவன் ஆச்சே. உனக்கு எங்கே இறந்தால் என்ன? இந்தக் கோயில் மேல் பக்தி என்ன?" என்று மெல்லக் கேட்டேன்.

"பக்தி இல்லை சாமி. என்னோடு வந்தவன் - எங்கள் ஊரான் - இங்கே அடிக்கடி வந்து தேங்காய் பழம் வைத்துப் பூசை செய்து விட்டுப் போவது வழக்கம். அவன் வருவான், சாகும்போது அவனாவது பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்வான் என்று தான் இங்கு வந்தேன்" என்றான்.

இதைக் கேட்டதும், இன்னும் பெரிய கதைகள் இருக்கும் என்று நம்பிப் பேச்சை நிறுத்தி, எழுந்து வீட்டுக்கு வருமாறு சொன்னேன். மெல்ல எழுந்தான். கால்கள் பின்னிக் கொள்ளும் நிலையில் தளர்ந்து அடி எடுத்து வைத்து நடந்து வந்தான். வழியில் உள்ள ஒரு பாலத்தின் சுவரின் மேலும், ஒரு வீட்டுத் திண்ணையின் மேலும் இரு முறை உட்கார்ந்து மூச்சுவிட்டு எப்படியோ வீடு வந்து சேர்ந்தான். சாப்பிட்டு முடியும் வரையில் ஒன்றும் கேட்பதில்லை என்று இருந்தேன். உண்ட பிறகு அவன் முகத்தில் களைப்பும் தெளிவும் கலந்து விளங்கின. திண்ணையின் கீழே மெல்லச் சாய்ந்தான். "சாமி! உங்களுக்கு எவ்வளவோ புண்ணியம்! கொஞ்சநேரம் இங்கே படுத்திருந்துவிட்டுப் போய் விடுவேன்" என்றான். இதுதான் வாய்ப்பு என்று நானும் என் ஐயம் தீரக் கேட்கத் தொடங்கினேன்.

"உங்கள் ஊரான் கோவிலுக்கு வருவதாகச் சொன்னாயே. அவனுக்கு என்ன வேலை? அவன் நாள் தோறும் கோயிலுக்கு வருகிறானா?" என்று பல கேள்விகள் கேட்டேன்.



"அவன் எப்படியாவது இரவு படுப்பதற்கு முன் ஒவ்வொரு நாளும் இந்தக் கோயிலுக்கு வராமல் போவதில்லை. ஒருவேளை தவறிவிட்டாலும், அவன் இருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் உள்ள எந்தக் கோயிலுக்காவது போய்க் கும்பிட்டுவிட்டுப் படுத்துக் கொள்வான். அப்போதும் இந்த கோயில் மேல் தான் நினைவு இருக்கும்" என்று கேட்டதற்கெல்லாம் விடை கூறினான்.

இவ்வளவெல்லாம் சொல்லியும் அவனுடைய தொழிலையும் பெயரையும் சொல்லாமல் மறைத்து வந்தான். அதனால் அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் எனக்கு மிகுதியாயிற்று. வற்புறுத்திக் கேட்டதன் பிறகு, தன்னைப் போலவே கூலி வேலை செய்து பிழைப்பவன் என்றும், ஆனால் தன்னைப் போல் காசு கிடைக்காமல் கூலி வேலை கிடைக்காமல் உணவு கிடைக்காமல் திண்டாடுவதே இல்லை என்றும், அவன் பெயர் வேலன் என்றும் தெரிவித்தான். பெயர் வேலன் என்று அறிந்ததும், மயங்கி விழுந்து கிடந்த போது "வேலா வேலா" என்று அவன் வாய் பிதற்றியது நினைவிற்கு வந்தது. அவனுடைய நண்பனிடத்தில் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தால், உணர்விழந்த காலத்திலும் அவன் பெயரைச் சொல்லி குமுற முடியும் என்றும், அப்படிப்பட்ட உண்மை நண்பன் நாள் தவறாமல் பூசை செய்யும் நல்ல நிலைமையில் இருக்கும்போது இவன் மட்டும் ஏன் வாட வேண்டும் என்றும் நான் வியந்து அமைதியானேன். அதற்குள் அந்த இளைஞனை உறக்கம் ஆட்கொள்ள வந்ததை உணர்ந்தேன். சிறிது நேரத்தில் குறட்டை விட்டு உறங்கும் நிலைமை அடைந்தான்.

நான் எழுந்துபோய் என் கடமைகளை முடித்துக் கொண்டு திரும்பி வந்து அந்தத் திண்ணைமேல் சமக்காளம் விரித்துப் படுத்துக்கொண்டு, அவனைப் பற்றியும் அந்த வேலனைப் பற்றியும் வேலன் தொழில் எதுவாக இருக்கும் என்பதைப் பற்றியும் எவ்வளவோ எண்ணிப் பார்த்தேன். உண்மை அறிய முடியாமல் மயங்கிக் கொண்டிருந்தேன். எப்படியாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று துணிந்தேன். சிறிது நேரம் கழிந்தது.

திடீரென்று அவன் எழுந்து உட்கார்ந்து, "நீங்கள் இல்லாவிட்டால், நான் இன்றைக்குச் செத்தே போயிருப்பேன். என்னோடு வந்தவன் முனிசாமி என்று ஒருவன் அப்படித்தான் பட்டணத்து மண்ணுக்கு பலியானான்" என்று பக்கத்தில் இருந்த ஒரு கல்லையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். எழுந்த ஐயங்கள் தீர்வதற்கு முன்னே இன்னொரு முனிசாமி கதையும் புகுந்து விட்டதே என்று நினைத்து "வேலனுக்குப் பணமும் சாப்பாடும் கிடைத்தபோது இந்த முனிசாமி மட்டும் ஏன் பட்டினியால் சாக வேண்டும்?" என்று கேட்டேன்.

"வேலன் தைரியம் எங்களுக்கு வராது. வேலன் பள்ளிக் கூடத்திலும் சில மாதம் படித்திருக்கிறான். நான் படிக்கவே இல்லை. முனிசாமி மூன்றாவது படித்து நின்று விட்டான். தவிர, வேலன் செய்வதெல்லாம் முனிசாமிக்குப் பிடிப்பதில்லை. அது நல்லது அல்ல. பாவம் என்று முனிசாமி அடிக்கடி சொல்லுவான். அதனால் வேலனுக்குக் கோபம். அவன் முனிசாமிக்கு உதவி செய்வதே இல்லை. எனக்குக் கொடுக்கும் பணத்தில் கொஞ்சம் எடுத்து வேலனுக்குத் தெரியாமல் முனிசாமிக்குக் கொடுப்பேன். அவன் அதையும் வாங்க மாட்டான். வேலன் கொடுத்த காசு பாவக் காசு, அது எனக்கு வேண்டா, அதைவிட உயிரை விடலாம் என்று பிடிவாதமாய் வாங்க மறுத்து விடுவான். அதனால் பல நாள் பட்டினியிருக்க வேண்டி ஏற்பட்டது. ஒரு நாள் ரயில் வரும்போது தலை கொடுத்து விட்டான். அதுவும் எனக்குத் தெரியாது. வேலன் தான் அந்த பிணத்தைப் பார்த்ததாக இரண்டு நாள் கழித்துச் சொன்னான். எனக்காவது அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை. நான் செத்தால் அழுவாரும் இல்லை. அந்த முனிசாமிக்கு அம்மா இல்லா விட்டாலும், அப்பா இருக்கிறார். அவர் ஏழை. இருந்தாலும் கேள்விப்பட்டால் என்ன பாடுபடுவாரோ" என்று சொல்லிப் பல பல என்று கண்ணீர் விட்டான்.

இதுதான் நல்ல சமயம் என்று, நான் தேறுதல் சொல்வது போல், "நீ அவசரப்பட்டு பைத்தியக்காரனைப் போல் உயிரைப் போக்கிக் கொள்ளாதே. என்னால் ஆன உதவி செய்வேன். கடும்பசியாக இருக்கும்போதெல்லாம் இங்கே வந்து போ" என்று சொன்னேன். வேலன் தொழில் என்ன என்று உண்மையை மறைக்காமல் சொல்லும்படி பலமுறை கேட்டேன். யாரிடமும் வெளிப்படுத்தமாட்டேன் என்றும், தீமை ஒன்றும் நேராமல் பார்த்துக் கொள்வேன் என்றும் உறுதி கூறிய பிறகே அதைப்பற்றி வாய் திறந்தான். அப்போதும், நீண்ட முகவுரைக்குப் பிறகே சொல்லத் தொடங்கினான்.

BACK

2 comments:

visaravanan said...

ஆர்வமூட்டும் தொடக்கம்!
-சரவணன்.

Unknown said...

EXCELLENT ....